LeT commander Altaf Lalli Killed (Photo Credit: @mumbai_boy52 X)

ஏப்ரல் 25, பந்திபோரா (Jammu Kashmir News): ஜம்மு காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டத்தின் பஹல்காம் (Pahalgam Terrorist Attack) பகுதியில், கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 26 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இச்சம்பவத்தின் எதிரொலியாக பாகிஸ்தானுடனான உறவை இந்தியா துண்டித்துக் கொண்டது. மேலும், பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. தாக்குதலில் தப்பிப்பிழைத்த சிலர், பயங்கரவாதிகள் இராணுவ உடையில் இருந்ததாகவும், மதத்தை சரிபார்க்க அடையாள அட்டைகளைச் சரிபார்த்ததாகவும், முஸ்லிம் அல்லாதவர்கள் என அடையாளம் காணப்பட்டவர்களை நேரடியாகக் கொன்றதாகவும் கூறினர். போர் அபாயம்? இந்திய வீரரை சிறைபிடித்த பாகிஸ்தான்.. நடக்கப்போவது என்ன?

பயங்கரவாதி சுட்டுக்கொலை:

இந்நிலையில், பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பின்னணியில் இருந்தவர்களைக் கண்டறிந்து ஒழிப்பதற்கான நடவடிக்கையில் இந்தியா ஈடுபட்டு வருகிறது. இன்று (ஏப்ரல் 25) காலை பந்திப்போராவில் (Bandipora) பயங்கரவாதிகள் இருப்பதாகக் கிடைத்த உளவுத்துறை தகவலின் பேரில், இந்திய ராணுவமும், ஜம்மு காஷ்மீர் காவல்துறையும் இணைந்து கூட்டுத் தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டன. அப்போது, நடந்த ஒரு மோதலில் லஷ்கர்-இ-தொய்பா (LeT) உயர்மட்டத் தளபதி அல்தாஃப் லல்லி சுட்டுக் கொல்லப்பட்டார். மற்றொரு சம்பவத்தில், பஹல்காம் தாக்குதலில் ஈடுபட்டதாக பிஜ்பெஹாராவில் உள்ள லஷ்கர் பயங்கரவாதி அடில் உசேன் தோக்கரின் வீடு ஐஇடி-களைப் பயன்படுத்தி தகர்க்கப்பட்டது. மேலும், டிராலில் உள்ள ஆசிப் ஷேக்கின் வீடு புல்டோசர் மூலம் இடிக்கப்பட்டது.

இராணுவ தளபதி வருகை:

இதனிடையே, இராணுவத் தளபதி உபேந்திர திவேதி ஸ்ரீநகருக்கு வந்து, பந்திப்போராவில் நடந்து வரும் நடவடிக்கை குறித்து விளக்கினார். அப்போது, பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பின்னணியில் இருப்பதாக சந்தேகிக்கப்படும், லஷ்கர் இ தொய்பா பயங்கரவாதிகளைக் கண்டறியும் நோக்கில், நிலைமை குறித்து விரிவான பாதுகாப்பு ஆய்வு நடத்த தீவிரமாக செயல்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டார்.