Aryan Ansari on Ahmedabad Plane Crash (Photo Credit : @BKBuzzview / @ANI X)

ஜூன் 16, அகமதாபாத் (Gujarat News): குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் இருந்து ஏர் இந்திய நிறுவனத்துக்கு சொந்தமான AI171 போயிங் 787-8 ட்ரீம் லைனர் விமானம் கடந்த ஜூன் 12 மதியம் 1.39 மணியளவில் லண்டனுக்கு புறப்பட்டது. பயணிகளை ஏற்றி புறப்பட்டு மேல் எழம்பத் தொடங்கிய 30 நிமிடத்திற்குள் விமானம் கீழே விழுந்து நொறுங்கி விபத்தில் (Ahmedabad Air India Flight Accident) சிக்கியது. விமானம் மருத்துவக் கல்லூரி விடுதியின் மீது விழுந்ததால், விமானத்தில் பயணித்தவர்கள் மட்டுமல்லாது விடுதியில் இருந்தவர்களும் பரிதாபமாக உயிரிழந்தனர்.

விமான விபத்தில் பலி எண்ணிக்கை உயர்வு (Plane Crash):

விமானத்தில் பயணம் செய்த 242 பயணிகளில் ஒருவர் மட்டும் அதிர்ஷ்டவசமாக கீழே குதித்து உயிர் தப்பினார். விமானத்தில் இருந்த 241 பயணிகள், விடுதியில் இருந்த பொதுமக்கள் என மொத்த பலி எண்ணிக்கை 270ஐ கடந்தது. விமான விபத்துக்கான காரணம் குறித்து கண்டறிய கருப்பு பெட்டியும் மீட்கப்பட்ட நிலையில், அதனை ஆய்வு செய்யும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர். விமான விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு தலா ரூ.1 கோடி வீதம் இழப்பீடு வழங்குவதாகவும் ஏர் இந்திய நிறுவனம் அறிவித்துள்ளது.

விமானத்தில் தொழில்நுட்பக்கோளாறு?

இது குறித்து பல்வேறு கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டு வரும் நிலையில், கருப்பு பெட்டி மீட்கப்பட்டு அதிலுள்ள தகவல்களை கண்டறியும் பணிகள் நடைபெற்று வருவதால் அதன் பின்னரே விமான விபத்துக்கான காரணம் தெரியவரும் என்று கூறப்படுகிறது. மேலும் விபத்தில் சிக்கிய ட்ரீம் லைனர் விமானம் கடந்த 2014 ஆம் ஆண்டு முதல் சேவையில் இருந்து வந்துள்ளது. கடந்த 11 ஆண்டுகளாக தொடர்ந்து சேவையில் ஈடுபட்டிருந்த விமானத்தில் பல்வேறு குறைபாடுகள் இருந்ததாகவும், டெல்லியில் இருந்து விமானம் குஜராத்துக்கு புறப்பட்டபோது பயணிகள் ஒரு சில அசௌகரியங்களை எதிர்கொண்டதாகவும் கூறப்படுகிறது.

விமான விபத்து குறித்து வீடியோ வெளியிட்ட சிறுவன் :

இதனால் விமானம் சமீபத்தில் தான் தொழில்நுட்ப கோளாறு காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப கோளாறு காரணமாக நிறுத்தி வைக்கப்பட்ட விமானம் மேற்படி பயணம் செய்ய அனுமதி கொடுத்தது யார்?, அதில் உள்ள பணிகள் அனைத்தும் நிறைவு பெற்றதா? என்று கேள்விகள் அடுக்கடுக்காக எழுந்துள்ளன. இந்நிலையில் விமான விபத்தை தற்செயலாக படம் பிடித்த 17 வயது சிறுவன் ஆரியன் அன்சாரி, விமானத்தின் இறுதி நொடி குறித்து பதைபதைக்க வைக்கும் தகவல்களை தெரிவித்துள்ளார். சிறுவன் வீடியோவை எடுத்து பதிவிட்டதாக காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு பின் அவர் கொடுத்த வீடியோவே மிக முக்கிய ஆதாரமானது.

சிறுவன் கண்முன் நடந்த கோர விபத்து :

ஜூன் 12 மதியம் 12 மணியளவில் தனது வீட்டின் மொட்டை மாடியில் இருந்த சிறுவன் அன்சாரி, விமானம் மிக தாழ்வாக பறப்பதை கண்டு தனது நண்பர்களுக்கு விமானத்தில் செல்ல வேண்டுமென்று ஆசையாக இருக்கிறது. விமானம் எவ்வளவு தாழ்வாக பறக்கிறது பாருங்கள் என்ற நோக்கத்துடன் வீடியோ எடுத்துள்ளார். இறுதியில் விமானம் எதிர்பாராத விதமாக அவரது கண்முன்னே விழுந்து நொறுங்கி சிதறி பயங்கர விபத்து ஏற்பட்டுள்ளது.

விமான விபத்தின் முக்கிய ஆதாரம் :

இதனால் விமானத்தில் செல்லும் ஆசையே போய்விட்டது. தனக்கு முற்றிலும் பயத்தை உருவாக்கிவிட்டது என்று கூறியுள்ளார். முதலில் இது குறித்த வீடியோவை தனது தங்கை, தந்தை, நண்பர்களுக்கு பகிர்ந்த நிலையில், பின் வீடியோ மிகப்பெரிய அளவில் கவனிக்கப்பட்டுள்ளது. இந்த வீடியோவே விமான விபத்தை முதலில் உறுதி செய்யும் வகையிலும் அமைந்துள்ளது.

சிறுவன் ஆரியன் அன்சாரி விமான விபத்து குறித்து கூறியது (Aryan Ansari):