RBI (Photo Credit: @ANI X)

ஏப்ரல் 22, மும்பை (Technology News): இந்திய ரிசர்வ் வங்கி (RBI), நேற்றைய தினம் (ஏப்ரல் 21) ஒரு முக்கியமான அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில், 10 வயதுக்கு மேற்பட்ட சிறுவர்கள், சுதந்திரமாக வங்கி சேமிப்பு மற்றும் கால வைப்பு கணக்குகளைத் திறக்கவும், அதனை இயக்கவும் அனுமதிக்கப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆர்பிஐ வெளியிட்டுள்ள சுற்றறிக்கையின் படி, 10 வயதுக்கு மேற்பட்ட சிறுவர்கள், சொந்தமாக சேமிப்பு மற்றும் கால வைப்பு கணக்குகளை வங்கிகளில் திறக்கலாம். இவர்கள், தங்கள் பெற்றோர்கள், பாதுகாவலர்கள் இல்லாமலேயே, தாங்களாகவே இந்த கணக்குகளை இயக்கலாம். இதற்காக வங்கிகள் தங்களது இடர் மேலாண்மை கொள்கையின் (Risk Management Policy) அடிப்படையில், கணக்குகளில் இருப்பு அளவு, பணம் எடுக்கும் வரம்பு போன்ற கட்டுப்பாடுகளை அமைக்கலாம். UPI Down: பயனர்களுக்கு அதிர்ச்சி.. இந்தியாவில் முடங்கியது யுபிஐ, ஜிபே, போன்பே.. மக்கள் அவதி.!

சிறார்களுக்கு வங்கி கணக்கை தொடங்க அனுமதி:

இதன்மூலம், 10 வயதுக்கு மேற்பட்ட சிறுவர்களுக்கு, ஏடிஎம் (ATM) டெபிட் கார்டுகள், இணைய வங்கி வசதி, மொபைல் பேமெண்ட் செயலிகள், காசோலை புத்தகம், பணம் செலுத்துதல் மற்றும் எடுத்தல் போன்ற வசதிகள் அனைத்தும் வங்கியின் அனுமதியின் அடிப்படையில் வழங்க முடியும். இதில், சில கட்டுப்பாடுகளும் உள்ளன. சிறுவர்கள் தாங்களாகவே பணம் எடுக்கலாம். ஆனால், அளவுக்கு மேற்பட்ட பணம் எடுக்க அனுமதியில்லை. மேலும், சிறுவர்கள் கணக்குகளில் எப்போதும் குறைந்தபட்ச பணம் வைத்திருப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

ஆர்பிஐ அதிரடி அறிவிப்பு:

10 வயதிற்கு குறைந்த வயதுடைய சிறுவர்கள், தாங்களாகவே வங்கி கணக்குகளைத் திறக்க முடியாது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. சிறுவர்களுக்கான வங்கி கணக்குகள், அவர்களது இயற்கை அல்லது சட்டப்பூர்வ பாதுகாவலர் மூலமாகவே திறக்கப்பட வேண்டும். 18 வயது பூர்த்தியடையும் போது, வங்கிகள் அந்த கணக்கின் நிலையை முழுமையான சுயாதீன கணக்காக மாற்றவேண்டும். அதற்கு, புதிய மாதிரி கையொப்பம், புதிய KYC ஆவணங்கள் பெற்றுக்கொள்ள வேண்டும். ஜூலை 1, 2025க்குள், வங்கிக் கொள்கைகளை புதுப்பிக்குமாறு ஆர்பிஐ அறிவுறுத்தியுள்ளது. புதிய அல்லது ஏற்கனவே திறக்கப்பட்ட சிறுவர்களின் கணக்குகளுக்கான நடைமுறைகள் அனைத்தும் குறிப்பிட்ட தேதிக்குள் அமுலுக்கு கொண்டு வரப்பட வேண்டும். ஆர்பிஐ வெளியிட்டுள்ள இந்த புதிய அறிவிப்பு, இந்திய நிதி அமைப்பில் ஒரு முக்கியமான முன்னேற்றமாக பார்க்கப்படுகிறது.