
மே 29, முல்லான்பூர் (Sports News): டாடா ஐபிஎல் 2025 (TATA IPL 2025) தொடரின் லீக் சுற்று போட்டிகள் மே 27ஆம் தேதியுடன் முடிவடைந்தது. இந்நிலையில், புள்ளிப்பட்டியலில் பஞ்சாப் கிங்ஸ், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ், குஜராத் டைட்டன்ஸ், மும்பை இந்தியன்ஸ் ஆகிய 4 அணிகள் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறியுள்ளன. அதன்படி, புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் இருக்கும் பஞ்சாப் கிங்ஸ் அணியும், 2வது இடத்தில் இருக்கும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் (PBKS Vs RCB) முதல் தகுதிச்சுற்றுப் போட்டியில் மோதின. இப்போட்டி, நியூ சண்டிகரில் உள்ள முல்லான்பூர் மைதானத்தில் நடைபெற்றது. PBKS Vs RCB Qualifier 1: 101 ரன்களுக்கு சுருண்ட பஞ்சாப் கிங்ஸ்.. ஆர்சிபி அபார பந்துவீச்சு..!
பஞ்சாப் கிங்ஸ் எதிர் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (Punjab Kings Vs Royal Challengers Bengaluru):
இப்போட்டியில், டாஸ் வென்ற ஆர்சிபி அணி கேப்டன் ரஜத் பட்டிதார் முதலில் பவுலிங் தேர்வு செய்தார். அதன்படி, முதலில் களமிறங்கிய பஞ்சாப் அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி காத்திருந்தது. பிரியன்ஸ் ஆர்யா 7, பிரப்சிம்ரன் 18, ஐயர் 2, இங்கிலீஷ் 4, நேகல் வதேரா 8, ஷசாங் சிங் 3 ரன்களில் அடுத்தடுத்து அவுட்டாகி ஏமாற்றம் அளித்தனர். இம்பாக்ட் வீரராக களமிறங்கிய முசீர் கான் டக் அவுட்டாகி பெவிலியன் திரும்பினார். ஒருபுறம் அதிரடியாக விளையாடிய மார்கஸ் ஸ்டோனிய்ஸ் 26 ரன்களில் சுயேஷ் சர்மா பந்தில் போல்ட் அவுட்டானார்.
ஆர்சிபி அபாரம்:
இறுதியில், ஆர்சிபி அணியின் பந்துவீச்சை தாக்கு பிடிக்க முடியாமல் பஞ்சாப் 14.1 ஓவர்களில் 101 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. ஆர்சிபி அணி தரப்பில் சுயேஷ் சர்மா, ஹேஷல்வுட் தலா 3, யாஸ் தயாள் 2, புவனேஸ்வர் குமார், ரோமரியோ தலா 1 விக்கெட்களை வீழ்த்தினர். இதனையடுத்து, ஆர்சிபி அணி 102 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்கை துரத்தியது. விராட் கோலி 12 ரன்னில் அவுட்டாகி அதிர்ச்சி தந்தார். அடுத்து வந்த மயங் அகர்வால் 19 ரன்னில் அவுட்டானார். மறுபுறம், அதிரடியாக விளையாடிய பில் சால்ட் 56 ரன்கள் அடித்து அணியை பைனலுக்கு கொண்டு சேர்த்தார். ஆர்சிபி அணி 10 ஓவர்களில் 2 விக்கெட்டை இழந்து 106 ரன்கள் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.