மார்ச் 25, சென்னை (Chennai News): தமிழகத்தில் நாளுக்குநாள் கொலை, குற்ற சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையில், அடுத்ததாக நகைப்பறிப்பு சம்பவம் தொடர்ந்து நிகழ்ந்து வருகிறது. அந்தவகையில், சென்னையில் இன்று (மார்ச் 25) காலை 6 மணி முதல் 7 மணிக்குள், ஒரு மணி நேரத்திற்குள் சுமார் 7 இடங்களில் செயின் பறிப்பு (Chains Snatched In Chennai) சம்பவங்கள் நடைபெற்றுள்ளது. ஹோட்டலில் மந்தி பிரியாணி வாங்கி சாப்பிட்டதால் விபரீதம்.. 17 பேர் மருத்துவமனையில் அனுமதி..!
செயின் பறிப்பு:
இன்று காலை திருவான்மியூர் இந்திர நகர் பகுதியில் வேலைக்கு சென்று கொண்டிருந்த பெண்ணிடம் இரு சக்கர வாகனத்தில் வந்த இரண்டு பேர் 5 சவரன் நகை பறித்துள்ளனர். இதனால் அப்பெண் காவல்நிலையத்தில் புகார் கொடுக்க சென்ற நிலையில் அடுத்ததாக அடையாறு சாஸ்திரி நகர் பகுதியில் நடைபயிற்சி மேற்கொண்டிருந்த அம்புஜம் என்ற பெண்ணிடம் இருந்து அரை சவரன் நகை பறிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து, கிண்டி பகுதியில் காலையில் நடைபயிற்சி சென்று கொண்டிருந்த நிர்மலா என்ற பெண்ணிடம் இருந்து 5 சவரன் பறிக்கப்பட்டது தெரியவந்தது.
தொடர் திருட்டில் ஈடுபட்ட கும்பல்:
இதனையடுத்து, சைதாப்பேட்டை பகுதியில் வேலைக்கு சென்று கொண்டிருந்த இந்திரா என்ற பெண்ணிடம் ஒரு சவரன் நகை பறிக்கப்பட்டுள்ளது. மேலும் வேளச்சேரி, பள்ளிக்கரணை பகுதியிலும் செயின் பறிப்பு சம்பவங்கள் அரங்கேறியுள்ளது. இதுகுறித்து, காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டனர். இதன் முதற்கட்ட விசாரணையில், செயின் பறிப்பு சம்பவங்களில் ஈடுபட்டது ஒரே கும்பல் என தெரியவந்துள்ளது. இதன் மூலம், பள்ளிக்கரணை பகுதியில் இன்று காலை செயில் பறிப்பு சம்பவங்களில் ஈடுபட தொடங்கிய கும்பல் வேளச்சேரி, அடையாறு, சைதாப்பேட்டை வழியாக கிண்டி வரை அடுத்தடுத்து செயின் பறிப்பில் ஈடுபட்டது விசாரணையில் தெரியவந்துள்ளது. இதனையடுத்து, சிசிடிவி காட்சிகளின் மூலம் செயின் பறிப்பில் ஈடுபட்ட நபர்களை காவல்துறையினர் நெருங்கிவிட்டாதகவும் தகவல்கள் கூறப்படுகிறது.