O.Panneerselvam: மத்திய அரசுக்கு எதிராக ஓ.பன்னீர்செல்வம் பரபரப்பு அறிக்கை.!

தமிழ்நாட்டிற்குரிய 2024-2025 ஆம் ஆண்டிற்கான சமக்ரா சிக்க்ஷா திட்ட நிதி 2,151 கோடி ரூபாயை உடனடியாக விடுவிக்க வேண்டும் என ஓ.பன்னீர்செல்வம் மத்திய அரசை வலியுறுத்தியுள்ளார்.

O.Panneerselvam (Photo Credit : Youtube)

ஜூலை 29, சென்னை (Chennai News): அரியலூர் மாவட்டம் கங்கைகொண்ட சோழபுரத்தில் நடந்த ஆடித் திருவாதிரை விழாவில் பிரதமர் மோடி கலந்து கொண்டு சோழனின் சிறப்பு நாணயத்தை வெளியிட்டு இருந்தார். மேலும் இராஜேந்திர சோழன், இராஜராஜ சோழன் ஆகியோருக்கு சிலை அமைக்கப்படும் எனவும் வாக்குறுதி அளித்துள்ளார். இந்த பயணத்தின் போது திருச்சி வந்த பிரதமரை சந்திக்க அனுமதி கேட்டு ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் கடிதம் எழுதப்பட்டு இருந்தது. ஆனால் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பிரதமரை திருச்சியில் சந்தித்து பேசியிருந்த நிலையில், ஓ.பன்னீர்செல்வம் தரப்புக்கு எந்த பதிலும் கிடைக்கவில்லை. இதனால் அவர் தற்போது தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகித்தாலும் பாஜகவின் மீது அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது.

ஓ.பன்னீர்செல்வம் அறிக்கை :

இதனிடையே மத்திய அரசின் செயல்பாட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், தமிழகத்திற்கான ரூ.2100 கோடி நிதியை உடனடியாக மத்திய அரசு விடுவிக்க வேண்டும் எனவும் ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் வலியுறுத்தப்பட்டு கடிதம் எழுதப்பட்டுள்ளது. இது தொடர்பான அறிக்கையில், "மழலையர் பள்ளி முதல் மேல்நிலைப் பள்ளி வரை பயிலும் குழந்தைகளின் தரமான கல்வியை உறுதி செய்தல், மாணவர்களின் சேர்க்கையை அதிகரித்தல், அனைத்து குழந்தைகளுக்கும் சம வாய்ப்பினை வழங்குதல், சமூக மற்றும் பாலின இடைவெளிகளைக் குறைத்தல் போன்ற நோக்கங்களை அடிப்படையாகக் கொண்டு சமக்ரா சிக்க்ஷா திட்டம் மத்திய, மாநில அரசுகளால் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

மும்மொழிக்கொள்கை விவகாரம் :

இந்தத் திட்டத்தின்கீழ் மத்திய அரசின் பங்கு அறுபது விழுக்காடு எனவும், மாநில அரசின் பங்கு நாற்பது விழுக்காடு எனவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. சமக்ரா சிக்க்ஷா நிதி குறித்து அண்மையில் மக்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதில் அளித்துள்ள மத்திய திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவோர் இணை அமைச்சர் திரு. ஜெயந்த் சவுத்ரி அவர்கள், தமிழ்நாடு அரசு முன்மொழிக் கொள்கையை பின்பற்றாததன் காரணமாக 2024-2025 ஆம் ஆண்டு சமக்ரா சிக்க்ஷா திட்டத்தின்கீழ் தமிழ்நாட்டிற்கு அளிக்க வேண்டிய 2,151 கோடி ரூபாய் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளார். Aadi Thiruvathirai 2025: ஆடித் திருவாதிரை விழா: கங்கைகொண்ட சோழபுரத்தில் பிரதமர் நரேந்திர மோடி உரை.! 

நிதிப்பற்றாக்குறையால் பாதிப்பு :

சமக்ரா சிக்க்ஷா திட்டத்தின் நிதியை நம்பி கிட்டத்தட்ட 65 இலட்சம் மாணவ, மாணவியர் தனியார் பள்ளிகளில் கல்வி பெற்று வருவதோடு, 6 இலட்சம் தனியார் பள்ளி ஆசிரியர்களும் பயனடைந்து வருகிறார்கள். இந்தத் திட்டத்தின்கீழான மத்திய அரசின் நிதி ஒதுக்கீடு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதன் காரணமாக தனியார் பள்ளிகள் நிதி நெருக்கடியில் சிக்கித் தவிப்பதோடு மட்டுமல்லாமல், அரசு சார்பில் ஆசிரியர்களுக்கான பயிற்சி, பள்ளிகளில் மேற்கொள்ளப்பட வேண்டிய தூய்மைப் பணி உள்ளிட்ட பல பணிகள் முடங்கிப் போயுள்ளன.

மாணவர்களின் எதிர்காலம் பாதிப்பு :

மேலும், மத்திய அரசின் இந்த நடவடிக்கை காரணமாக, கல்வி உரிமைச் சட்டத்தின்கீழ் இந்த ஆண்டு 25 விழுக்காடு மாணவ, மாணவியரை தனியார் பள்ளிகளில் சேர்க்க இயலாத அவல நிலை ஏற்பட்டுள்ளது. இது மட்டுமல்லாமல், கல்வி உரிமைச் சட்டத்தின்கீழ், தற்போது தனியார் பள்ளிகளில் பயின்று வரும் மாணவ, மாணவியரின் கல்வியும் கேள்விக்குறியாகி உள்ளது. மத்திய அரசின் நிபந்தனைகளை மாநில அரசு ஏற்காதது என்பது மத்திய, மாநில அரசுகளுக்கிடையேயான பிரச்சனை. இந்தக் காரணத்தைச் சுட்டிக்காட்டி நிதியை விடுவிக்காமல் இருப்பது அப்பாவி ஏழை எளிய மாணவ, மாணவியரின் கல்வியையும், ஆசிரியர்களையும் பாதிக்கும் செயல்.

ஓ.பி.எஸ் வலியுறுத்தல் :

இது கடும் கண்டனத்திற்குரியது. மத்திய அரசின் இந்த நடவடிக்கை கல்வி உரிமைச்சட்டத்திற்கும், கூட்டாட்சித் தத்துவத்திற்கும் எதிரானது. சமக்ரா சிக்க்ஷா திட்டத்தின்கீழ் நிதியை விடுவிக்காதது பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட, பழங்குடியின மற்றும் ஏழையெளிய மாணவ, மாணவியரின் கல்வி மற்றும் ஆசிரியர்களை பாதிக்கும் செயல் என்பதைக் கருத்தில் கொண்டு, சமக்ரா சிக்ஷா திட்டத்தின்கீழ் 2024-2025 ஆம் ஆண்டிற்கான 2,151 கோடி ரூபாய் நிதியை உடனடியாக விடுவிக்க வேண்டுமென்று மத்திய அரசை அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்." என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement