Rape & Murder Case Accused Dhasvanth (Photo Credit: YouTube)

ஏப்ரல் 29, செங்கல்பட்டு (Chengalpattu News): சென்னையில் மாங்காடு அடுத்த மவுலிவாக்கம், மாதா நகர் பகுதியை சேர்ந்த சிறுமி ஹாசினி (வயது 6), கடந்த 2017ஆம் பிப்ரவரி மாதம் 5ஆம் தேதி பாலியல் வன்கொடுமை (Sexual Assault) செய்யப்பட்டு, கொடூரமாகக் கொல்லப்பட்டார். இந்த வழக்கில், அதே குடியிருப்பில் தங்கியிருந்த தஷ்வந்த் (வயது 24) கைது செய்யப்பட்டார். வழக்கை செங்கல்பட்டு மகளிர் நீதிமன்றம் விசாரித்து வந்த நிலையில், தஷ்வந்த்தை அவரது தந்தை ஜாமீனில் வெளியே கொண்டு வந்தார். பின்னர், ஜாமீனில் வெளியே வந்த தஷ்வந்த், குன்றத்தூரில் சம்பந்தம் நகர் ஸ்ரீராம் சாலையில் உள்ள ஒரு வீட்டில் தனது தந்தை சேகர், தாயார் சரளா ஆகியோருடன் வசித்து வந்தார். 2 குழந்தைகளை தண்ணீர் தொட்டியில் வீசி கொலை.. தாய் கொடூர செயல்.., கணவருக்கு அதிர்ச்சி சம்பவம்..!

சிறுமி கொலை வழக்கு:

இந்நிலையில், கடந்த 2018ஆம் ஆண்டு ஜனவரி 2ஆம் தேதி வீட்டில் செலவுக்கு பணம் கொடுக்காததால், தஷ்வந்த் தனது தாயார் சரளாவை கொடூரமாக கொலை (Murder) செய்துவிட்டு, வீட்டில் இருந்த 25 பவுன் நகைகளை திருடிக்கொண்டு தப்பி சென்றுவிட்டார். பின்னர், மும்பையில் பதுங்கி இருந்த தஷ்வந்தை காவல்துறையினர் கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர். இதனிடையே, சிறுமி ஹாசினி கொலை வழக்கு தொடர்பான விசாரணை, செங்கல்பட்டு மகளிர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. சிறுமி ஹாசினி கொலை வழக்கில் தஷ்வந்த் குற்றவாளி என செங்கல்பட்டு மகளிர் நீதிமன்றம் அறிவித்து, தூக்குத் தண்டனை வழங்கி தீர்ப்பளித்தது. உயர்நீதிமன்றம் தூக்கு தண்டனையை உறுதி செய்ய நிலையில், உச்சநீதிமன்றத்தில் செய்யப்பட்ட மேல்முறையீட்டில், தூக்கு தண்டனைக்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டது.

தாய் கொலை வழக்கில் விடுதலை:

இதனையடுத்து, தஷ்வந்த் தனது தாயை கொலை செய்தாக தந்தை சேகர் அளித்த புகாரின்பேரில், மாங்காடு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கு கடந்த 2018ஆம் ஆண்டு முதல் செங்கல்பட்டு மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இதில், இன்று தீர்ப்பு வழங்குவதாக நீதிபதி மேவிஸ் தீபிகா சுந்தரவதனா உத்தரவிட்டார். அதன்படி, இன்று மாலை 3 மணிக்கு செங்கல்பட்டு மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் தஷ்வந்தை விடுதலை செய்து தீர்ப்பளிக்கப்பட்டது. இதில், தஷ்வந்தின் தந்தை சேகர் பிறழ்சாட்சியாக (Hostile Witness) மாறியுள்ளார். தஷ்வந்த் தனது தாயை கொலை செய்ததை யாரும் பார்க்காததாலும், போதிய ஆதாரங்கள் இல்லாததாலும், தஷ்வந்த் விடுதலை செய்யப்பட்டார்.