ஏப்ரல் 17, குற்றாலம் (Tenkasi News): தென்காசி மாவட்டம், குற்றாலம் (Courtallam) அருகே உள்ள காசிமேஜர்புரம் பகுதியைச் சேர்ந்த குமாரசாமி என்பவரது மகன் குத்தாலிங்கம் (வயது 35). இவருடைய மனைவி தனலட்சுமி. இத்தம்பதிக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். இந்நிலையில், தனது மனைவியின் ஊரான தென்காசி அருகே உள்ள கீழப்புலியூரில், கடந்த 3 மாதங்களாக வசித்து வந்தார். அப்பகுதியில் கார்மென்ட்ஸ் நிறுவனம் மற்றும் ஜவுளிக்கடை நடத்தி வந்துள்ளார். கொடுத்த பணத்தை திருப்பி கேட்டதால் ஆத்திரம்.. நண்பர் அதிர்ச்சி செயல்..!

கொடூர கொலை:

இந்நிலையில், நேற்று (ஏப்ரல் 16) மதியம் கீழப்புலியூரில் உள்ள ரேஷன் கடைக்கு குத்தாலிங்கம் மற்றும் அவரது மனைவி தனலட்சுமி சென்றனர். ரேஷன் கடையில் பொருட்கள் வாங்குவதற்காக குத்தாலிங்கம் வரிசையில் நின்று கொண்டிருந்தபோது, அங்கு வந்த 4 பேர் கொண்ட மர்மகும்பல் திடீரென குத்தாலிங்கத்தை அரிவாளால் சரமாரியாக வெட்டினர். இதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த மனைவி தனலட்சுமி அவர்களை தடுக்க முயன்றார். இதில், படுகாயமடைந்த குத்தாலிங்கம், ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்தார். மேலும், ஆத்திரம் தீராத மர்மநபர்கள் குத்தாலிங்கத்தின் தலையை துண்டித்து கொடூரமாக கொலை (Murder) செய்தனர். அவரது தலையுடன் மர்மநபர்கள் வெளியே ஓடி வந்தனர். அங்கு 2 இருசக்கர வாகனங்களில் மர்மகும்பல் அங்கிருந்து தப்பி சென்றது. பின்னர், அந்த கும்பல் காசிமேஜர்புரம் அம்மன் கோவில் முன்பு குத்தாலிங்கத்தின் தலையை வீசிச் சென்றது.

மர்ம கும்பல் வெறிச்செயல்:

இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தென்காசி காவல்துறையினர், காசிமேஜர்புரம் அம்மன் கோவில் முன்பு கிடந்த குத்தாலிங்கத்தின் தலையையும், கீழப்புலியூர் ரேஷன் கடையில் இருந்த அவரது உடலயைும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இதன் முதற்கட்ட விசாரணையில், காசிமேஜர்புரத்தில், கடந்த 3 மாதங்களுக்கு முன்பு திருமண விழாவில் பேனர் வைப்பது தொடர்பாக ஏற்பட்ட தகராறில், அம்மன் கோவில் முன்பாக பட்டுராஜ் என்ற வாலிபர் கொலை செய்யப்பட்டார். இதில், குத்தாலிங்கத்தின் தம்பிக்கு தொடர்பு இருப்பதாக கூறப்பட்டது. எனவே, பட்டுராஜ் கொலைக்கு பழிக்குப்பழியாக குத்தாலிங்கத்தை கொலை செய்து, பட்டுராஜ் உடல் கிடந்த இடத்திலேயே குத்தாலிங்கத்தின் தலையை வீசிச் சென்றிருக்கலாம் என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.