செப்டம்பர் 11, வாஷிங்டன் (World News): அமெரிக்காவின் உட்டா பல்கலைக்கழகத்தில், மாணவர்களுடனான கலந்துரையாடல் நிகழ்வில் பங்கேற்றிருந்த அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் ஆதரவாளரான சார்லி கிர்க் (Charlie Kirk) சுட்டுக் கொல்லப்பட்டார். இந்நிகழ்ச்சியில், துப்பாக்கியால் சுட்டவுடன், உடனே சார்லி கிர்க்கை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறினர். Nepalese Gen Z Protests: நேபாளத்தில் வன்முறை.. முன்னாள் பிரதமரின் மனைவி உயிருடன் எரித்துக்கொலை.. பதறவைக்கும் சம்பவம்.!
அதிபர் டிரம்ப் கண்டனம்:
இதனையடுத்து, சார்லி கிர்க் படுகொலைக்கு ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சியினர் உட்பட பலரும் கடும் கண்டனங்களை தெரிவித்துள்ளனர். அதிபர் டிரம்ப் இதனை வன்மையாகக் கண்டித்துள்ளார். மேலும், தனது ஆதரவாளரின் மரணத்தால் தான் மிகவும் வேதனையடைந்திருப்பதாக தெரிவித்துள்ளார். கொலையாளியை தேடும் பணியில் காவல்துறையினர் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர். இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சார்லி கிர்க் யார்?
சார்லி கிர்க் (வயது 31) அமெரிக்காவின் சிகாகோ நகரில் பிறந்தார். இவருக்கு எரிகா ஃப்ராட்ஸ்வே என்ற மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர். இவர், ஒரு பழமைவாத சிந்தனையாளர் மற்றும் வலதுசாரி அரசியல் பிரமுகர்களில் ஒருவராவார். எழுத்தாளர், பேச்சாளர், வர்ணனையாளர் எனப் பன்முகத்தன்மை கொண்டவரான இவர், தேசிய கொள்கைக்கான கவுன்சிலிங் உறுப்பினராகவும் இருந்துள்ளார். கடந்த 2016ஆம் ஆண்டு முதல் சார்லி கிர்க் - டொனால்ட் டிரம்ப் நட்பு தொடர்ந்தது. சார்லி கிர்க்கை, ‘ஒளியின் போராளி’ என்று டிரம்ப் புகழாரம் சூட்டியுள்ளார். இவர், தனது 18 வயதில் 'டர்னிங் பாய்ண்ட் யுஎஸ்ஏ' (Turning Point USA) என்ற அமைப்பை உருவாக்கி, மாணவர்களுக்கு வலதுசாரி சிந்தனையை எடுத்துரைத்துள்ளார்.