PM Modi & US Pres Donald Trump (Photo Credit: @Narendra X / @ANI X)

ஏப்ரல் 23, வாஷிங்க்டன் டிசி (World News): ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் உள்ள பஹல்கம் (Pahalgam Terrorist Attack) பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் 29 பேர் கொல்லப்பட்டுள்ளனர். உள்ளூர் மக்கள் மற்றும் சுற்றுலாப்பயணிகள் என 29 பேர் கொடூர கொலை செய்யப்பட்டுள்ளது தேசிய அளவில் பதற்றத்தையும், அதிர்ச்சியையும் உண்டாக்கி இருக்கிறது. லஸ்கர்-இ-தொய்பாவின் நிழல் அமைப்பு இத்தாக்குதலுக்கு பொறுப்பேற்று இருக்கிறது. இதனால் ஜம்மு காஷ்மீர் மாநிலம் முழுவதும் உஷார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. Pahalgam Terrorist Attack: பயங்கரவாத தாக்குதலின் நெஞ்சை பதறவைக்கும் காணொளி.. பொறுப்பேற்ற அமைப்பு..! பலி எண்ணிக்கை கிடுகிடு உயர்வு.! 

மத்திய அமைச்சரவை கூட்டம்:

ஜம்மு காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, தேசிய பாதுகாப்பு செயலாளர் அஜித் தோவால் தலைமையில் முதற்கட்ட ஆலோசனை கூட்டம் நடைபெற்று முடிந்தது. அதனைத்தொடர்ந்து, பிரதமர் நரேந்திர மோடி தனது அமீரக பயணத்தை அவசர கதியில் ரத்து செய்து தாயகம் திரும்பியுள்ளார். விரைவில் அவரின் தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெறவுள்ளது. முன்னதாகவே பயங்கரவாதிகளுக்கு எதிராக பதில் நடவடிக்கை எடுக்கப்படும் என இந்திய அரசு எச்சரித்துவிட்டது. இதனால் தாக்குதல் திட்டம் மற்றும் வியூகம், அதனால் வரும் பிரச்சனையை சமாளித்தல், தேசிய அளவில் பாதுகாப்பை உறுதி செய்தல் போன்ற நடவடிக்கையில் ஈடுபடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனும் பெரு நாட்டுக்கு அரசுப்பயணம் செய்த நிலையில், அவரும் இன்று தாயகம் திரும்புகிறார். ஜம்மு காஷ்மீரில் நடந்த பயங்கரவாத தாக்குதல் விஷயத்துக்கு உலகளவில் கண்டனமும் தெரிவிக்கப்பட்டு இந்தியாவுக்கு ஆதரவாக இருப்பதாக உலக நாடுகள் தெரிவித்துள்ளன.

அதிபர் டிரம்ப் கண்டனம்:

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், "காஷ்மீரில் இருந்து கிடைத்த செய்திகள் கவலையை தருகிறது. பயங்கரவாதத்துக்கு எதிராக அமெரிக்காவுடன் இந்தியா உறுதியாக நிற்கும். உயிரிழந்தவர்களின் ஆன்மா சாந்தியடைய வேண்டுகிறோம். காயமடைந்தவர்கள் நலம்பெற வேண்டும். பிரதமர் மோடி & இந்திய மக்களுக்கு எங்களின் முழு ஆதரவு உண்டு. எங்களின் இதயங்கள் உங்களுடன் இருக்கின்றன" என தெரிவித்துள்ளார். இதேபோல ஆஸ்திரேலியா அதிபர் அல்போன்ஸ், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, நேபாள பிரதமர் ஷர்மா ஒளி, நியூசிலாந்து வெளியுறவுத்துறை அமைச்சர் வின்ஸ்டன், இங்கிலாந்து பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் உட்பட பலரும் தங்களின் இரங்கல் மற்றும் கண்டனத்தை பதிவு செய்துள்ளனர்.