Operation Sindoor: இந்தியாவில் நடந்த பயங்கரவாத தாக்குதல்.. பட்டியலிட்டு பதிலடி கொடுத்த இந்திய இராணுவம்.. வெளியான வீடியோ..!
இந்தியா மீது நடத்தப்பட்ட எல்லை தாண்டிய பயங்கரவாத தாக்குதல் சம்பவங்களையும் அதன் பாதிப்புகளையும் பட்டியலிட்டு ஒரு வீடியோ ஒன்றை அரசு வெளியிட்டுள்ளது.
மே 07, டெல்லி (Delhi News): ஜம்மு காஷ்மீரில் பஹல்காம் பகுதியில் கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி நடந்த பயங்கரவாத தாக்குதலில் (Pahalgam Terror Attack) 26 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். இதனையடுத்து, பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வந்தது. இதனால் இரு நாடுகளிடையே போர் பதற்றம் அதிகரித்துள்ளது. இந்நிலையில், இன்று (மே 07) அதிகாலை 1 மணிக்கு மேல் 'ஆபரேஷன் சிந்தூர்' என்ற ராணுவ நடவடிக்கையை தொடங்கியது. இதில், பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் மொத்தம் 9 இடங்களில் 21 பயங்கரவாத முகாம்கள் அழிக்கப்பட்டன. சுமார் 100 பயங்கரவாதிகள் வரை கொல்லப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. GLEX 2025: இந்தியாவில் 250க்கும் மேற்பட்ட விண்வெளி தொடக்க நிறுவனங்கள்.. பிரதமர் மோடி பெருமிதம்..!
இந்தியா இராணுவம் வீடியோ வெளியீடு:
இதுதொடர்பாக, மத்திய வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி, கர்னல் சோபியா குரேஷி, விங் கமாண்டர் வியோமிகா சிங் ஆகியோர் செய்தியாளர்களை சந்தித்து விளக்கம் அளித்தனர். செய்தியாளர்கள் சந்திப்புக்கு முன்பு, 2001ஆம் ஆண்டு பாராளுமன்றத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதல், அக்சர்தாம் கோயில் தாக்குதல் 2002, மும்பை தாக்குதல் 2008, 2016ஆம் ஆண்டு ஊரித் தாக்குதல், புல்வாமா தாக்குதல் 2019 மற்றும் சமீபத்தில் நடந்த பஹல்காம் தாக்குதல் குறித்த வீடியோக்களை இந்தியா இராணுவம் வெளியிட்டுள்ளது. கடந்த 30 ஆண்டுகளில் மட்டும் 350க்கும் மேற்பட்ட பொதுமக்களும், 600க்கும் மேற்பட்ட பாதுகாப்பு படை வீரர்களும், எல்லை தாண்டிய பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்துள்ளனர். மேலும், பொதுமக்கள் 800 பேர் மற்றும் 1400க்கும் மேற்பட்ட ராணுவ வீரர்கள் காயமடைந்துள்ளனர். தற்போது, இத்தகைய தாக்குதல் சம்பவத்திற்கு தக்க பதிலடியாக, ஆபரேஷன் சிந்தூர் தாக்குதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக வீடியோவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.