Thanjavur Rains: தஞ்சை தரணியை நனைத்த மழை: குளுகுளு சூழ்நிலையால் மக்கள் மகிழ்ச்சி..!
வானிலை ஆய்வு மையத்தின் அறிவிப்புப்படி இன்று மாலை முதலாக பல மாவட்டங்களில் கனமழையானது வருகிறது. இடி மின்னலுடன் தொடர்மழை காரணமாக மக்கள் வெயிலின் தாக்கத்திலிருந்து விடுபட்டு இருக்கின்றனர்.
ஜூன் 5, தஞ்சாவூர் (Thanjavur News): தமிழகத்தின் வளிமண்டல பகுதிகளில் நிலவும் கீழடுக்க சுழற்சி காரணமாக இன்று பெரும்பாலான மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே அறிவித்திருந்தது. அதன்படி, இன்று மாலை 4 மணி முதல், இரவு 7 மணி மற்றும் 10 மணி வரையில் சிவகாசி, புதுக்கோட்டை, மதுரை, விருதுநகர தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, அரியலூர், பெரம்பலூர், கடலூர், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் கன மழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அதேபோல, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், திருவண்ணாமலை, வேலூர் மாவட்டங்களில் லேசான மழை முதல் மிதமான கனமழைக்கான மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மக்களை குளிர்விக்க தொடரும் மழை: வானிலை ஆய்வு மையத்தின் அறிவிப்புப்படி, மாலை 3 மணிக்கு மேலாகவே சிவகங்கை, மயிலாடுதுறை, தஞ்சாவூர் உட்பட பல மாவட்டங்களில் தொடர்ந்து இடி மின்னலுடன் கனமழையானது கொட்டி தீர்த்து வரும் நிலையில், இரவு 6 மணிக்கு மேல் கடலூர், அரியலூர், பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களிலும் மேகங்கள் சூழ்ந்து மழை பெய்ய தொடங்கியது. தற்போது பல மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழையானது தொடர்ந்து வெளுத்து வாங்கி வருவதால்ஃ வெயிலின் தாக்கத்தினால் மக்கள் அவதிப்பட்டு இருந்த நிலையில் குளுகுளு சூழ்நிலையை அனுபவித்து வருகின்றனர்.