Operation Sindoor: அத்துமீறிய பாகிஸ்தான்.. தக்க பதிலடி கொடுக்கும் இந்திய ராணுவம்..!
ஆபரேஷன் சிந்தூர் குறித்தும், பாகிஸ்தான் ட்ரோன் தாக்குதல் குறித்தும் இந்திய பாதுகாப்பு அமைச்சகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
மே 08, டெல்லி (Delhi News): ஜம்மு காஷ்மீரில் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடியாக, நேற்று (மே 07) 'ஆபரேஷன் சிந்தூர்' ராணுவ நடவடிக்கை நிகழ்த்தப்பட்டது. இதுகுறித்த செய்தியாளர் சந்திப்பின் போது, பாகிஸ்தான் ராணுவ நிலைகள் குறிவைக்கப்படவில்லை என இந்தியா தனது பதிலை விளக்கமாக எடுத்துரைத்துள்ளது. இந்திய ராணுவ இலக்குகள் மீதான எந்தவொரு தாக்குதலுக்கும் பொருத்தமான பதிலடி வழங்கப்படும் என்றும் மீண்டும் உறுதிப்படுத்தப்பட்டது. Operation Sindoor: எல்லை தாண்டி ஊடுருவ முயற்சி; பாகிஸ்தானியர் சுட்டுக்கொலை..!
பாகிஸ்தான் தாக்குதல்:
இந்நிலையில், இன்று (மே 08) அதிகாலை பாகிஸ்தான், வடக்கு மற்றும் மேற்கு இந்தியாவில் உள்ள அவந்திபுரா, ஸ்ரீநகர், ஜம்மு, பதான்கோட், அமிர்தசரஸ், கபுர்தலா, ஜலந்தர், லூதியானா, ஆதம்பூர், பட்டிண்டா, சண்டிகர், நல், பலோடி, உத்தரலாய் மற்றும் பூஜ் உள்ளிட்ட பல ராணுவ இலக்குகளை ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகளைப் பயன்படுத்தி தாக்க முயன்றது. இந்தியாவின் ஒருங்கிணைந்த வான் பாதுகாப்பு அமைப்புகளால் இவை தடுக்கப்பட்டன. இதனையடுத்து, இன்று காலை இந்திய ஆயுதப்படைகள் பாகிஸ்தானின் பல இடங்களில் உள்ள வான் பாதுகாப்பு ரேடார்களையும், அமைப்புகளையும் குறிவைத்தன. பாகிஸ்தானுக்கு, இந்தியா களத்தில் தக்க பதிலடி அளித்தது. லாகூரில் உள்ள ஒரு வான் பாதுகாப்பு அமைப்பு செயலிழக்கச் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியா பதிலடி:
ஜம்மு காஷ்மீரில் உள்ள குப்வாரா, பாரமுல்லா, உரி, பூஞ்ச், மெந்தர் மற்றும் ரஜோரி துறைகளில் உள்ள பகுதிகளில், பாகிஸ்தான், மோர்டார் மற்றும் கனரக பீரங்கிகளைப் பயன்படுத்தி தாக்குதல் நடத்தியுள்ளது. இதில், 3 பெண்கள் மற்றும் 5 குழந்தைகள் உட்பட 16 பேர் பரிதாபமாக பலியாகியுள்ளன. பாகிஸ்தான் ராணுவம் எல்லை மீறி தாக்குதலில் ஈடுப்பட்டுள்ளது. இதற்கு, இந்தியா தக்க பதிலடி அளித்து வருகிறது. இதனால், இந்தியா-பாகிஸ்தான் எல்லைப் பகுதிகளில் போர் பதற்றம் நிலவி வருகிறது.