"பாலியல் வன்கொடுமையை தவிர்க்க வீட்டிலேயே இருங்கள்" - போலீசாரின் சர்ச்சை போஸ்டர்.!
நள்ளிரவு நேரத்தில் பார்ட்டிகளுக்கு செல்ல வேண்டாம். நீங்கள் பலாத்காரம் செய்யப்படவோ அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட நபர்களால் கூட்டுப் பாலியல் வன்கொடுமையை எதிர்கொள்ளும் நிலையோ ஏற்படும் என குஜராத் காவல்துறையினர் சார்பில் போஸ்டர் ஒட்டப்பட்ட சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
ஆகஸ்ட் 03, அகமதாபாத் (Gujarat News): குஜராத் மாநிலத்தின் அகமதாபாத்தில் காவல்துறையினர் சார்பில் பல இடத்தில் விழிப்புணர்வு வாசகம் அடங்கிய போஸ்டர் ஒட்டப்பட்டு இருந்தன. அதில் பெண்களுக்கு அறிவுரை சொல்வதாக சில வசனங்களும் இருந்தன. அதன்படி "நள்ளிரவு நேரத்தில் பார்ட்டிகளுக்கு செல்ல வேண்டாம். நீங்கள் பலாத்காரம் செய்யப்படவோ அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட நபர்களால் கூட்டுப் பாலியல் வன்கொடுமையை எதிர்கொள்ளும் நிலையோ ஏற்படும். உங்களது நண்பராக இருந்தாலும் அவருடன் இருட்டான இடங்களுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும். இதனால் கற்பழிப்பு, கூட்டு பாலியல் வன்கொடுமை போன்றவை நேரிடலாம்" என வசனங்கள் இருந்துள்ளன.
சர்ச்சையை உண்டாக்கிய போஸ்டர்கள் :
இந்த வசனங்கள் அடங்கிய போஸ்டர்கள் நகரின் பல இடங்களிலும், தடுப்புச்சுவர்களிலும் விளம்பரமாக பதிவு செய்யப்பட்டது. இந்த விஷயம் மாநிலத்தில் பெரும் விவாத பொருளை ஏற்படுத்தி சர்ச்சையை உண்டாக்கியது. மேலும் பொதுமக்களிடமும் எதிர்ப்பு கிளம்பியது. இதனை அடுத்து உடனடியாக அங்கிருந்த போஸ்டர்கள் அகற்றப்பட்டுள்ளன. மாநில அளவில் எதிர்க்கட்சிகளும் கடுமையான எதிர்ப்பு தெரிவித்து அரசை விமர்சித்து வருகின்றன. பெண்களின் பாதுகாப்பு மாநிலத்தில் கேள்விக்குறியாக இருப்பதாகவும் குற்றம் சாட்டின. இதனிடையே போஸ்டர் குறித்து அகமதாபாத் காவல்துறையினர் விளக்கம் அளித்துள்ளனர்.
காவல்துறை அதிகாரி விளக்கம் :
இந்த விஷயம் தொடர்பாக காவல்துறை உயர் அதிகாரி ஒருவர் கூறுகையில், "போஸ்டர் தன்னார்வத்தொண்டு நிறுவனத்தால் அன்பளிப்பாக கொடுக்கப்பட்டு இருக்கிறது. அது சாலை பாதுகாப்புக்காக வழங்கப்பட்டது. பெண்களின் தனிப்பட்ட பாதுகாப்பு என விஷமத்தனமான எண்ணத்துடன் இந்த தகவல் பகிரப்படுகிறது. பள்ளி, கல்லூரிகளில் விழிப்புணர்வை ஏற்படுத்த ஏற்பாடுகளும் செய்யப்பட்டு இருந்தது. ஆனால் இந்த போஸ்டரை கவனத்திற்கு கொண்டு வராமலேயே தன்னார்வத்தொண்டு நிறுவனம் வெளியிட்டுள்ளது" என தெரிவித்துள்ளார்.
விழிப்புணர்வு போஸ்டரின் புகைப்படம் :
அகமதாபாத் போஸ்டர் விவகாரம் தொடர்பாக போலீசார் விளக்கம் :