Kalamassery Bomb Blast: கேரளாவில் மதவழிபாட்டு தலத்தில் குண்டுவெடிப்பு விவகாரம்; காவல்நிலையத்தில் ஒருவர் சரண்..!
கேரளா முதல்வர் டெல்லியில் நடைபெறும் இஸ்ரேலுக்கு எதிரான எதிர்க்கட்சிகள் போராட்டத்தில் கலந்துகொள்ள சென்றுள்ள நிலையில், கேரளாவில் கிறிஸ்துவ மாதவழிபாட்டு கூட்டத்தில் குண்டு வெடிப்பு நிகழ்ந்து இந்தியாவையே பதறவைத்துள்ளது.
அக்டோபர் 29, எர்ணாகுளம் (Kerala News): கேரளா மாநிலத்தில் உள்ள எர்ணாகுளம், களமச்சேரி பகுதியில் கிறிஸ்துவ மாதவழிபாடு கூட்டம் இன்று நடைபெற்ற நிலையில், திடீரென குண்டு வெடிப்பு நிகழ்ந்தது.
இந்த சம்பவத்தில் ஒருவர் பலியாகிவிட, 35 பேர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விவகாரம் தொடர்பாக மாநில முதல்வர் பினராயி விஜயனுடன், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆலோசனை மேற்கொண்டார்.
கேரளா மாநிலம் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்ட நிலையில், தமிழ்நாடு, டெல்லி ஆகிய மாநிலத்திலும் கூடுதல் பாதுகாப்பு பொதுஇடங்களில் ஏற்படுத்தப்பட்டது. தமிழ்நாடு - கேரளா எல்லையில் அதிகாரிகள் உஷார் நிலையில் இருக்கவும் அறிவுறுத்தப்பட்டது.
தேசிய பாதுகாப்பு குழுவின் சார்பில் 8 பேர் கொண்ட அதிகாரிகளும் கேரளாவுக்கு நேரில் வந்து குண்டு வெடிப்பு தொடர்பாக விசாரணை நடத்தவுள்ளனர். கேரளா முதல்வரும் நாளை காலை 10 மணிக்கு அனைத்துக்கட்சி கூட்டத்திற்கு ஏற்பாடுகள் செய்துள்ளார்.
இந்நிலையில், கமலச்சேரி குண்டுவெடிப்பு விவகாரத்திற்கு காரணம் நான்தான் என கூறி, காவல் நிலையத்தில் சரணடைந்த நபரிடம் அதிகாரிகள் ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தி வருவதாக தெரிவிக்கப்ட்டுள்ளது.