குழாய் பதிக்கும் பணியில் சோகம்.. மண்சரிந்து 4 பேர் பரிதாப பலி.!
ராஜஸ்தான் பரத்பூரில் குடிநீர் குழாய்களை அமைக்கும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டபோது திடீரென மண் சரிந்து விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
ஜூன் 29, ராஜஸ்தான் (Rajasthan News): ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள பரத்பூர் மாவட்டம் ஜன்கி கா நக்லா என்ற கிராமத்தில் குடிநீர் குழாய்கள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த பணியில் 15க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இந்த நிலையில் இன்று காலை நேரத்தில் தொழிலாளர்கள் குழாய் பதிப்பதற்காக குழி தோண்டும் பணியில் ஈடுபட்டனர். அப்போது எதிர்பாராத விதமாக மண் சரிந்து விபத்து ஏற்பட்டுள்ளது.
மண்சரிவில் 4 பேர் பலி :
இந்த மண் சரிவில் தொழிலாளர்கள் அனைவரும் சிக்கிக் கொண்ட நிலையில், தகவலறிந்த மீட்பு படையினர் நிகழ்விடத்திற்கு விரைந்து மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். மண் சரிவில் சிக்கிய 11 தொழிலாளர்கள் காயத்துடன் மீட்கப்பட்டுள்ள நிலையில், 4 பேர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த விஷயம் குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள காவல்துறையினர் ஒப்பந்த பணிகளை மேற்கொண்ட நிறுவனத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்க வழக்குப்பதிவு செய்து இருக்கின்றனர்.