Madhya Pradesh Shocker: ஊராட்சி மன்ற தலைவர் நடுரோட்டில் சுட்டுக்கொலை: கொலை வழக்கில் தப்பிக்க நடந்த மற்றொரு கொலையால் உறவினர்கள் கொந்தளிப்பு..!
2021 இல் நடந்த கொலையை நேரில் பார்த்த சாட்சியான ஊராட்சி மன்ற தலைவர், நடுரோட்டில் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் மத்திய பிரதேசத்தை அதிர வைத்துள்ளது. அரசியல் கட்சி பிரமுகரின் கொலையால் உறவினர்கள் போராட்டம் செய்து வருவார் அப்பகுதியில் பதற்றம் நிலவுகிறது.
அக்டோபர் 10, குவாலியர் (Madhya Pradesh News): மத்திய பிரதேசம் மாநிலத்தில் உள்ள குவாலியர், பன்ஹரி பகுதியில் வசித்து வரும் கிராம பஞ்சாயத்து தலைவர் விக்ராந்த் சிங் ராவத். இவரின் சகோதரர் கடந்த 2021ல் நிலத்தகராறில் கொல்லப்பட்டுள்ளார்.
இந்த கொலை சம்பவத்தில் முக்கிய சாட்சியாக இருந்து வந்த விக்ராந்துக்கு, உயிர் பாதுகாப்பு அச்சுறுத்தல் என்பது இருந்து வந்துள்ளது. இதனால் அவருக்கு காவல்துறை பாதுகாப்பு வழங்கப்பட்டு வந்த நிலையில், சமீபத்தில் அது திரும்ப பெறப்பட்டது.
இவ்வழக்கில் தொடர்புடைய ஒருவர் ஜாமின் பெற்று சமீபத்தில் வெளியே வந்துள்ளார். ஏற்கனவே இருந்த நிலத்தகராறு, வழக்கில் விக்ரம் குற்றவாளிகளுக்கு எதிராக செயல்பட்டது என பல காரணங்களால் அவரை கொலை செய்ய எதிர் தரப்பு முடிவு எடுத்துள்ளது.
இதனையடுத்து, அவர் எங்கு செல்கிறார்? என்பது தொடர்பான கண்காணிப்பும் நடந்து வந்துள்ளது. சம்பவத்தன்று, தனியே இருந்த அவர் இரண்டு பேர் கும்பலால் நான்கு முறை துப்பாக்கியால் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளார்.
விக்ராந்த் கொலையானது அறிந்து ஆத்திரமடைந்த உறவினர்கள், எதிர் தரப்பின் சொத்துக்களை சேதப்படுத்தியிருக்கின்றனர். நிலவரத்தை புரிந்து கொண்ட காவல் துறையினர், கூடுதல் காவல் துறையினரை களம் இறக்கி பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
மறைந்த விக்ராந்த் சிங் ராவத் காங்கிரஸ் கட்சி பிரமுகர் என்பதும் குறிப்பிடத்தக்கது. தற்போது காவல்துறையினர் குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.
நவம்பர் மாதம் ஏழாம் தேதி மத்திய பிரதேச மாநிலத்தில் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், தற்போது முன்பு விரோதம் மற்றும் பிற பிரச்சனைகள் காரணமாக ஊராட்சி மன்ற தலைவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.