Ladakh protest: லடாக்கில் பற்றி எரியும் பாஜக அலுவலகம்.. பறிபோன 4 உயிர்கள், 80 பேர் படுகாயம்.. ஊரடங்கு உத்தரவு பிறப்பிப்பு.!
லடாக்கில் தனி மாநில அந்தஸ்து கோரி நடைபெற்ற போராட்டம் வன்முறையில் (Ladakh Protest) முடிந்தது. இந்த சம்பவத்தில் 4 பேர் பலியாகி, 80-க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததால் லே நகரில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
செப்டம்பர் 24, லடாக் (Ladakh News): கடந்த சில மாதங்களாகவே பல்வேறு நாடுகளில் அரசாங்கத்தை எதிர்த்து போராட்டங்கள் நடந்து வருகிறது. அந்த வகையில் யூனியன் பிரதேசமாக உள்ள லடாக் பகுதிகளிலும் பல்வேறு கோரிக்கைகளை முன்னிறுத்தி போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. அரசியல் அமைப்பின் ஆறாவது அட்டவணையில் லடாக்கை சேர்க்க வேண்டும் எனவும், தனி மாநில அந்தஸ்து வழங்க வேண்டும் எனவும் கோரிக்கையை முன்னிறுத்தி போராட்டம் நிகழ்ந்து வந்தது.
போலீசாரிடம் மல்லுக்கட்டிய போராட்டக்காரர்கள் :
இந்த சம்பவம் தொடர்பாக மத்திய அரசு சார்பில் விரைவில் பேச்சுவார்த்தை நடத்தி முடிவு எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. இருப்பினும் போராட்டம் தொடர்ந்ததால் அக்டோபர் மாதம் 6-ஆம் தேதி முடிவை கூறுவதாக மத்திய அரசு தெரிவித்திருந்தது. இதனிடையே முழு அடைப்பு போராட்டத்திற்கான அழைப்பு விடுக்கப்பட்டு காலை முதலே பல்வேறு இடங்களில் போராட்டம் நிகழ்ந்து வருகிறது. இதனால் போராட்டக்காரர்களுக்கும், காவல்துறையினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டு ஒரு கட்டத்தில் வன்முறையில் முடிந்தது. Kolkata Floods: கொல்கத்தாவில் வரலாறு காணாத மழை.. வெள்ளத்தில் சிக்கி 12 பேர் உயிரிழப்பு..!
உயிரிழப்பு அதிகமாவதால் ஊரடங்கு பிறப்பிப்பு :
மேலும் காவல்துறையினரின் வாகனங்களுக்கு தீ வைத்த போராட்டக்காரர்கள், மத்திய அரசுக்கு எதிராக முழக்கமிட்டு பாஜக அலுவலகத்தின் ( Ladakh BJP Office Attack) மீது கல்வீசி தாக்குதல் நடத்தி தீ வைத்தனர். இந்த சம்பவத்தில் பலரும் காயமடைந்த நிலையில், காவல்துறையினர் கண்ணீர் புகை குண்டுகளை வீசி போராட்டக்காரர்களை கலைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். இந்த வன்முறையில் இதுவரை 80-க்கும் மேற்பட்ட நபர்கள் படுகாயமடைந்த நிலையில், 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சம்பவத்தால் தற்போது லே நகரில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. மேலும் காவல்துறையினரும் அப்பகுதியில் குவிக்கப்பட்டு கண்காணித்து வருகின்றனர்.