Bangladesh Earthquake: வங்கதேச நிலநடுக்கத்தால் 6 பேர் மரணம்.. கொல்கத்தா, அசாமிலும் நில அதிர்வு.!
வங்கதேசத்தின் நர்சிங் டி அருகே 5.7 ரிக்டர் நிலநடுக்கம் ஏற்பட்டு 6 பேர் உயிரிழந்துள்ளனர். மீட்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. கொல்கத்தா, அசாம், கவ்ஹாத்தி பகுதிகளிலும் அதிர்வு உணரப்பட்டுள்ளது.
நவம்பர் 21, வங்கதேசம் (World News): வங்கதேச நாட்டில் இன்று காலை சுமார் 10 மணியளவில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.7 புள்ளிகளாக பதிவாகியுள்ளது. அங்குள்ள தலைநகர் டாக்காவில் இருந்து சுமார் 25 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் நர்சிங் டி என்ற மாவட்டத்தை மையமாகக் கொண்டு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் காரணமாக 6 பேர் வரை உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகி உள்ள நிலையில், 10க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து இருப்பதாக கூறப்படுகிறது. இவர்கள் அனைவரும் உடனடியாக மீட்கப்பட்டு அங்குள்ள மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். World News: 8 மாத கர்ப்பிணி மீது கார் மோதி சோகம்.. இந்திய பெண் ஆஸ்திரேலியாவில் பலி.!
இந்தியாவில் உணரப்பட்ட நிலநடுக்கம்:
முதற்கட்டமாக 6 பேரின் மரணம் உறுதி செய்யப்பட்டுள்ளது. நர்சிங் டி மாவட்டத்தின் தென்மேற்கு திசையில் 13 கிலோமீட்டர் தொலைவில், பூமிக்கடியில் 10 கிலோமீட்டர் ஆழத்தில் மையம் கொண்டு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. வங்கதேசம் மட்டுமல்லாது இந்த நிலநடுக்கத்தின் தாக்கம் கொல்கத்தா, அசாம் மாநிலம், கவ்ஹாத்தி உட்பட பல பகுதிகளிலும் உணரப்பட்டுள்ளது. இதனால் அச்சமடைந்த மக்கள் பலரும் வீடுகளில் இருந்து வெளியேறி சாலைகளில் தஞ்சம் புகுந்து இருந்தனர். அதேபோல பாகிஸ்தான் நாட்டில் 5.2 அளவுகோலில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. இந்திய, யுரேசிய டெக்டோனிக் பிளேட்டுகளின் மோதல் காரணமாக இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது.