பள்ளி தண்ணீர் தொட்டியில் விஷம் கலந்த பயங்கரம்.. இந்துத்துவ கும்பல் அட்டூழியம்.!
கர்நாடக மாநிலத்தில் உள்ள அரசுப்பள்ளியின் தண்ணீர் தொட்டியில் மதவெறியால் இந்துத்துவ வலதுசாரி கும்பலை சேர்ந்த சிலர் விஷம் கலந்த பயங்கரம் நிகழ்ந்துள்ளது.
ஆகஸ்ட் 04, கர்நாடகா (Karnataka News): கர்நாடக மாநிலத்தில் உள்ள பெல்காம் மாவட்டம் ஹூலிகட்டி கிராமத்தில் அரசு பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் உள்ள குடிநீர் தொட்டியில் மர்ம நபர்கள் சிலர் பூச்சி மருந்து கலந்துள்ளனர். கடந்த 15 நாட்களுக்கு முன்னதாக நடந்த இந்த சம்பவத்தில் குழந்தைகள் பலரும் கடுமையான உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர். இதனை தொடர்ந்து காவல்துறைக்கும் தகவல் தெரிய வரவே, சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் குடிநீர் தொட்டியின் மாதிரிகளை சேகரித்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
பள்ளி தண்ணீர் தொட்டியில் விஷம் கலந்த கும்பல் :
முதல் கட்ட விசாரணையில் பூச்சிமருந்து கலந்தது உறுதி செய்யப்படவே, குற்றவாளிகளுக்கு போலீசார் வலைவீசினர். இந்த நிலையில் மதவெறியால் இந்துத்துவ வலதுசாரி கும்பலை சேர்ந்த சிலர் பள்ளியின் தண்ணீர் தொட்டியில் விஷம் கலந்தது தெரியவந்துள்ளது. இதனை தொடர்ந்து குற்றசெயலில் ஈடுபட்டவர்களை கைது செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தியதில், பள்ளியின் தலைமை ஆசிரியரை பணி மாற்றம் செய்வதற்காக இந்த அவலத்தை அரங்கேற்றியது அம்பலமானது. காதலனுக்கு ஜூஸில் பூச்சிமருந்து கொடுத்து கொலை.. கேரளாவில் மீண்டும் திடுக்கிடும் சம்பவம்.!
குற்ற செயலில் ஈடுபட்டவர்கள் வாக்குமூலம் :
இந்த விஷயத்தில் ஸ்ரீராம் சேனாவின் தாலுகா தலைவர் சாகர் பாட்டீல் என்பவரும் கைது செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பாக குற்ற செயலில் ஈடுபட்டவர்கள் கூறுகையில், "சம்பந்தப்பட்ட பள்ளியில் உள்ள தலைமை ஆசிரியர் முஸ்லீம் என்பதால் அவர் மீது பழி சுமத்தி வேறு பள்ளிக்கு பணிமாற்றம் செய்வதற்காக பள்ளியின் தண்ணீர் தொட்டியில் விஷம் கலந்தோம்" என தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இந்த விஷயத்தை மேற்கோளிட்டு கர்நாடக மாநில முதல்வர் சித்தராமையா கண்டனம் தெரிவித்துள்ளார்.