வானிலை: இடி, மின்னலுடன் 2 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு.. வானிலை மையம் தகவல்..!
தமிழகத்தில் இன்று மற்றும் நாளை ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் அறிவித்துள்ளது.
அக்டோபர் 29, நுங்கம்பாக்கம் (Chennai News): வானிலையில் கடந்த 24 மணிநேரத்தில் ஏற்பட்ட மாற்றத்தைப் பொறுத்தவரையில், தமிழகத்தில் ஒருசில இடங்களில் மழை பெய்துள்ளது. புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவியது. நேற்று (28-10-2025) காலை மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய "மோன்தா" தீவிரப்புயல் மேற்கு - வடமேற்கு திசையில் நகர்ந்து, ஆந்திரா - யானம் கடலோரப் பகுதிகளில், மசூலிப்பட்டினம் - கலிங்கப்பட்டனத்திற்கு இடையே காக்கிநாடாவிற்கு தெற்கே, நரசாபூருக்கு அருகில், நேற்று நள்ளிரவு 23.30 மணி - 00.30 மணியளவில் கரையை கடந்தது. இன்று (29-10-2025) அதிகாலை 2.30 மணி அளவில் புயலாக வலுக்குறைந்து, இன்று காலை 08:30 மணி அளவில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மேலும் வலுக்குறைந்து, ஆந்திரப் பகுதிகளில் நிலவுகிறது. இது, மேலும் வடக்கு - வடமேற்கு திசையில் நகர்ந்து, அடுத்த 6 மணிநேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மேலும் வலுக்குறையக்கூடும். நேற்று (28-10-2025) மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் நிலவியை காற்றழுத்த தாழ்வு மண்டலம், இன்று (29-10-2025) காலை 8.30 மணியளவில் அதே பகுதிகளில் நிலவுகிறது. இது, அடுத்த 36 மணிநேரத்தில் மேலும், வடக்கு - வடகிழக்கு திசையில் நகர்ந்து, மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதிகளை கடந்து நகரக்கூடும். நாளைய வானிலை: பலத்த காற்றுடன் வெளுக்கப்போகும் கனமழை.. 9 மாவட்டங்கள் உஷார்.!
இன்றைய வானிலை (Today Weather), நாளைய வானிலை (Tomorrow Weather):
இன்று (29-10-2025) மற்றும் நாளை (30-10-2025), தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
31-10-2025 முதல் 04-11-2025 வரை, தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னை வானிலை (Chennai Weather):
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பை பொறுத்தவரையில், இன்று (29-10-2025) வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 33-34° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 24-25° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும். நாளை (30-10-2025) வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 34° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 25° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
மீனவர்களுக்கான எச்சரிக்கை:
தமிழக கடலோரப்பகுதிகள்:
29-10-2025, வடதமிழக கடலோரப்பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும், தென்தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)