TN Weather Report: கொட்டித் தீர்க்கும் கனமழை.. மீனவர்களுக்கான எச்சரிக்கை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!
தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
மே 23, சென்னை (Chennai): சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, நேற்று தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி வடகிழக்கு திசையில் நகர்ந்து இன்று காலை 08:30 மணி அளவில் மத்தியமேற்கு மற்றும் அதனை ஒட்டியுள்ள தெற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக நிலவுகிறது. இது மேலும் வடகிழக்கு திசையில் நகர்ந்து, நாளை காலை மத்திய வங்கக்கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுபெறக்கூடும். அதன் பிறகு, இது மேலும் வடகிழக்கு திசையில் நகர்ந்து புயலாக வலுப்பெற்று, 25.05.2024 காலை மத்தியகிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவக்கூடும். அதன் பிறகு, இது, வடக்கு திசையில் நகர்ந்து, தீவிர புயலாக வலுப்பெற்று, வங்க தேசம் மற்றும் அதனை ஒட்டியுள்ள மேற்குவங்காள கடற்கரையை நோக்கி நகரக்கூடும்.
கேரள கடற்கரையை ஒட்டிய தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. அதன் காரணமாக, தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 30 கிலோமீட்டர் முதல் 40 கிலோமீட்டர் வரை) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, கோயம்புத்தூர் மாவட்ட மலைப்பகுதிகள் மற்றும் நீலகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், ஈரோடு, திருப்பூர், தேனி, திண்டுக்கல், மதுரை மற்றும் விருதுநகர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் (The Chennai Meteorological Department) அறிக்கை வெளியிட்டுள்ளது. Dinesh Karthik Retirement: ஐபிஎல் தொடரில் இருந்து ஓய்வு அறிவித்த தினேஷ் கார்த்திக்.. சோகத்தில் ரசிகர்கள்..!
மீனவர்களுக்கான எச்சரிக்கை: தென் மற்றும் அதனை ஒட்டிய மத்திய வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். அந்தமான் கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் அதனால் இன்று மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள். மேலும் ஆழ்கடல் மீனவர்கள் கரைக்குத் திரும்புமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)