Maha Kumbh Mela 2025: 75 ஆயிரம் காவலர்களுக்கு போனஸ், பதக்கம், 7 நாள் விடுப்பு.. முதல்வர் யோகி அதிரடி அறிவிப்பு..!

உத்தர பிரதேசத்தில் மகா கும்பமேளாவில் சிறப்பாக பணிபுரிந்த 75 ஆயிரம் காவலர்களுக்கு, அம்மாநில முதல்வர் யோகி போனஸ், பதக்கம் உள்ளிட்ட சிறப்பு சலுகைகளை அறிவித்துள்ளார்.

CM Yogi Adityanath (Photo Credit: @ANI X)

பிப்ரவரி 28, பிரயாக்ராஜ் (Uttar Pradesh News): உத்தர பிரதேச மாநிலம், பிரயாக்ராஜ் (Prayagraj) நகரில் மகா கும்பமேளா, ஜனவரி 13ஆம் தேதி தொடங்கி நேற்று முன்தினம் (பிப்ரவரி 26) முடிவடைந்தது. கங்கை, யமுனை, சரஸ்வதி நதிகள் சங்கமிப்பதாக கருதப்படும் அந்த நகரில், நாடு முழுவதும் இருந்தும் 66 கோடி பக்தர்கள் அங்கு சென்று புனித நீராடியுள்ளனர். திரிவேணி சங்கமம் என்று அழைக்கப்படும் கங்கா, யமுனா, சரஸ்வதி ஆகிய மூன்று நதிகள் ஒன்றுகூடும் இடத்தில் புனித நீராடினால் மோட்சம் கிடைக்கும் என்று நம்பப்படுகிறது. இந்தியாவில் மட்டுமல்லாமல் உலக அளவில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் இதில் பங்கேற்று புனித நீராடினர். 144 வருடங்களுக்கு ஒரு முறை நடைபெற்ற இந்த மகா கும்பமேளா (Maha Kumbh Mela) உலகின் மிக பெரிய ஆன்மிக வழிபாடாக பார்க்கப்படுகிறது. Maha Shivaratri 2025: மகா சிவராத்திரி 2025; மகாசிவராத்திரியன்று செய்யப்படும் சிவபெருமானுக்கு நான்கு ஜாம பூஜைகள்.!

முதல்வர் யோகி ஆதித்யநாத் பெருமிதம்:

இந்நிலையில், நேற்று (பிப்ரவரி 27) பிரயாக்ராஜ் நகருக்கு சென்று முதல்வர் யோகி ஆதித்யநாத் (CM Yogi Adityanath) பேசுகையில், பிரயாக்ராஜில் நடந்த மகா கும்பம் உண்மையிலேயே ஒரு உலகளாவிய நிகழ்வாக மாறியது. மேலும், இந்த பெருமை பிரதமர் மோடியின் தொலைநோக்கு தலைமைக்கு உரித்தானது. அவரது தொலைநோக்கு இந்த மாபெரும் நிகழ்வை வெற்றிகரமாக செயல்படுத்த எங்களுக்கு பெரும் உதவியாக இருந்தது. கடந்த 2024ஆம் ஆண்டில் மட்டும், 64 கோடி யாத்ரீகர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் உத்தர பிரதேசம் முழுவதும் அயோத்தி, வாரணாசி, மதுரா, பிரயாக்ராஜ், சித்ரகூட், விந்தியாச்சல், கோரக்பூர், நைமிஷாரண்யா உட்பட பல்வேறு வழிபாட்டுத் தலங்களுக்குச் சென்றுள்ளனர். ஆனால், கடந்த 45 நாட்களில் மட்டும் 66.3 கோடிக்கும் அதிகமான யாத்ரீகர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் பிரயாக்ராஜ் மகா கும்பமேளாவிற்கு வருகை தந்தனர். இது மத சுற்றுலாவில் புதிய உலக சாதனைகளை படைத்துள்ளது’ என்று மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

சிறப்பு ஏற்பாடுகள்:

மகா கும்பமேளாவில் சுமார் 4 ஆயிரம் ஹெக்டேர் பரப்பில் பல்வேறு கடைகள் அமைக்கப்பட்டு இருந்தது. மேலும், தெருவோர வியாபாரிகளும் குவிந்து இருந்தனர். பக்தர்கள் வருகைக்காக 10 ஆயிரம் ஏக்கரில் முன்னேற்பாடு வசதிகள் செய்யப்பட்டு இருந்தது. 1800 ஹெக்டேர் பரப்பளவில் வாகன நிறுத்த வசதிகள் செய்யப்பட்டு இருந்தன. 2,750 கேமராக்கள், 15,000 துப்புரவு பணியாளர்கள், 25 ஆயிரம் தொழிலாளர்கள் 24 மணி நேரமும் பணியாற்றினார்கள். மேலும், 74 நாடுகளின் தூதர்கள் உட்பட 100க்கும் மேற்பட்ட நாடுகளின் பிரதிநிதிகள் மகா கும்பமேளாவில் கலந்துகொண்டனர். 12 நாடுகளைச் சேர்ந்த அதிபர்கள், அமைச்சர்கள் பங்கேற்றனர். மகாகும்பமேளாவில் நிரந்தர மற்றும் தற்காலிக உள்கட்டமைப்புக்காக தோராயமாக ரூ.7,500 கோடி செலவிட்டதாக முதல்வர் யோகி கூறினார். இதில் 200 சாலைகள், 14 மேம்பாலங்கள், சுரங்கப்பாதைகள் பிரயாக்ராஜில் கட்டப்பட்டுள்ளன. மகா கும்பமேளா பகுதியில் 30,000 சிசிடிவி கேமராக்கள் வைக்கப்பட்டு, ஏஐ தொழில்நுட்பத்தில் கண்காணிக்கப்பட்டது.

காவலர்களுக்கு போனஸ்:

வரலாற்று சிறப்புமிக்க இந்த மகா கும்பமேளாவில், சிறப்பாக பணியாற்றிய 75 ஆயிரம் காவல்துறையினருக்கு உத்தர பிரதேச அரசு ரூ.10,000 சிறப்பு போனஸ். ‘மகா கும்ப சேவா பதக்கம்’ மற்றும் 7 நாள் விடுமுறை வழங்குவதாக உபி முதல்வர் யோகி அறிவித்தார். மேலும், சிறப்பான பணியை மேற்கொண்ட காவல்துறையினரை பாராட்டினார். இந்நிகழ்ச்சி முடிந்து செல்லும் போது, காவல்துறையினருடன் சமூக விருந்தில் கலந்துகொண்டு, மகா கும்பமேளாவில் செய்த சேவைகளுக்கு நன்றி தெரிவித்தார்.

வீடியோ இதோ:

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement