Aadi Perukku 2024: ஆடிப்பெருக்கு 2024 வழிபாட்டு முறைகள் என்னென்ன..? அதன் சிறப்புகள் பற்றிய விவரம் இதோ..!

ஆடிப்பெருக்கு அன்றைய தினம் மேற்கொள்ள வேண்டிய சிறப்பு பிராத்தனைகள் பற்றிய முழு விவரங்களை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.

Aadi Peruku 2024 (Photo Credit: Team LatestLY)

ஆகஸ்ட் 02, சென்னை (Festival News): ஆடிப்பெருக்கு (Aadi Perukku) விழா தமிழகத்தின் ஒவ்வொரு பகுதிகளிலும் ஒவ்வொரு விதமாக, ஆடி 18-ஆம் நாள் (Aadi 18) கொண்டாடப்படும். இது நீர் நிலைகளுக்கு நன்றி தெரிவித்து, பூஜை செய்து, வழிபடும் நாளாக உள்ளது. அன்றைய தினம் சுமங்கலி பெண்கள் தாலிச்சரடு மாற்றிக் கொள்வதற்கான நாளாக மட்டுமே பலரும் கருதுகின்றனர். ஆனால் இது பெருக்கத்திற்கான மிக சிறப்பான நாளாகும்.

ஆடி பெருக்கு:

ஆடி மாதத்தின் 18-வது நாளில் தமிழகத்தில் உள்ள ஆறுகளில் நீர் பெருக்கெடுத்து ஓடும். இந்த நாளில் நதிகளை தங்கள் வீட்டு பெண்ணாக பாவித்து, வரவேற்று, அதனை வழிபடுவது தமிழர்களின் வழக்கம். இந்த வழக்கத்தை தான் நாம் ஆடிப்பெருக்கு, ஆடி 18, ஆடி பதினெட்டாம் பெருக்கு என பலவிதமான பெயர்களில் கொண்டாடுகிறோம். ஆடிப் பெருக்கு அன்று நீர் நிலைகளுக்கு சென்று பூஜை செய்து வழிபட்டால் நம்முடைய வாழ்க்கையிலும் மகிழ்ச்சியும், மங்கலங்களும் பெருகும் என்பது நம்பிக்கை. Aadi Perukku 2024: மழையையும் மாரியம்மனையும் இணைக்கும் ஆடிப்பெருக்கு; 2024 ஆடிப்பெருக்கு நல்ல நேரம், வழிபாடு முறைகள் விபரம் இதோ.!

ஆடி மாதத்தில் சுப காரியங்கள் எதுவும் செய்யக் கூடாது என கூறுவார்கள். ஆனால் ஆடிப்பெருக்க அன்று புதிய தொழில் துவங்குவது, தொழில் விருத்திக்கான முதலீடுகள் செய்வது, திருமணம் போன்ற சுப காரிய பேசுக்களை துவங்குவது, சுப காரியங்களுக்கு புடவை, நகை போன்ற பொருட்கள் வாங்குவது ஆகியவற்றை மக்கள் வழக்கமாக வைத்துள்ளனர். இந்த நாளில் எதை துவங்கினாலும் அது பெருகிக் கொண்டே போகும் என்பது ஐதீகமாக உள்ளது.

வழிபடும்முறை:

அன்று காலையிலேயே ஆற்றங்கரை அல்லது கடற்கரைகளுக்கு குடும்பத்துடன் சென்று, மஞ்சளில் பிள்ளையார் பிடித்து, அதற்கு அருகம்புல் படைத்து முதலில் வழிபடுவார்கள். பிறகு மஞ்சள், குங்குமம், வெற்றிலை பாக்கு, தேங்காய் பழம் ஆகியவை வைத்து, விளக்கேற்றி, குல தெய்வத்தையும், நீர் மகளையும் வழிபட்டு, பல வகையான சாதங்கள் படைத்தும் வழிபடுவர். புதிதாக திருமணமான தம்பதிகள் ஆற்றில் சென்று நீராடி, கிழக்கு முகமாக நின்று, தங்களின் திருமண மாலைகளை ஆற்றில் விட்டு, தங்களின் இல்லற வாழ்க்கையில் அனைத்து செல்வங்களும் குறைவில்லாமல் பெருகி வர வேண்டும் என வேண்டிக் கொள்வர். ஆடிப்பெருக்கில் தாலிச்சரடு மாற்றினால், கணவரின் ஆயுள் நீடிக்கும் என்பது ஐதீகம். மேலும், திருமணமாகாத கன்னிப் பெண்கள் தங்களுக்கு விரைவில் நல்ல கணவர் அமைய வேண்டும் என நீர் மகளை வழிபட்டு, மஞ்சள் கயிறு கழுத்தில் அணிந்து கொள்வார்கள்.

ஆடி பெருக்கு நாள்:

இந்த வருடம் ஆடிப்பெருக்கு விழா வருகின்ற ஆகஸ்ட் 03-ஆம் தேதி (நாளை) சனிக்கிழமை வருகின்றது. அன்றைய தினம் மாலை 04.55 வரை சதுர்த்தசி திதியும், அதற்கு பிறகு அமாவாசை திதி துவங்கி விடுகிறது. இது முன்னோர் வழிபாட்டிற்குரிய ஆடி அமாவாசை தினம் ஆகும். சனிக்கிழமை என்பதால் காலை 9 முதல் 10.30 வரையிலான நேரம் ராகு கால நேரமாகவும், பகல் 01.30 முதல் 3 மணி வரையிலான நேரம் எமகண்ட நேரமாகவும் உள்ளது. அதனால் இந்த நேரங்கள் தவிர்த்து மற்ற நேரங்களில் ஆடிப்பெருக்கு வழிபாட்டினை மேற்கொள்ளலாம்.

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement