Operation Sindoor: துல்லிய தாக்குதல்.. மக்களுக்கு பாதிப்பு இல்லாமல் பயங்கரவாதிகளை வேரறுத்த இந்தியா.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!
ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைகள் குறித்து பெண் அதிகாரிகள் கர்னல் சோபியா குரேஷி, விங் கமாண்டர் வியோமிகா சிங் ஆகியோர் விளக்கமளித்தனர்.
மே 07, டெல்லி (Delhi News): ஜம்மு காஷ்மீரில் பஹல்காம் பகுதியில் கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி பயங்கரவாத தாக்குதலில் (Pahalgam Terror Attack) 26 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். இதனைத்தொடர்ந்து, பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வந்தது. இதனால் இரு நாடுகளிடையே போர் பதற்றம் அதிகரித்துள்ளது. இந்நிலையில், இன்று (மே 07) அதிகாலை 1 மணிக்கு மேல் 'ஆபரேஷன் சிந்தூர்' என்ற ராணுவ நடவடிக்கையை தொடங்கியது. ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையில் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் மொத்தம் 9 இடங்களில் 21 பயங்கரவாத முகாம்கள் அழிக்கப்பட்டன. Operation Sindoor: ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்கு பதில் சொன்ன பெண் அதிகாரிகள்.. பேராயுதத்தை கையில் எடுத்த இந்தியா..!
வெளியுறவுத்துறை செயலாளர் விளக்கம்:
இதுதொடர்பாக இன்று (மே 07) காலை மத்திய வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி, கர்னல் சோபியா குரேஷி (Colonel Sophia Qureshi), விங் கமாண்டர் வியோமிகா சிங் ஆகியோர் உடன் செய்தியாளர்களை சந்தித்து விளக்கம் அளித்தார். வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி கூறுகையில், பஹல்காம் தாக்குதலுக்கு ரெசிஸ்டன்ஸ் ஃப்ரண்ட் என்ற தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. இக்குழு லஷ்கர்-இ தொய்பாவுடன் தொடர்புடையது. பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் பாகிஸ்தானுக்கும் பயங்கரவாதிகளுக்கும் உள்ள தொடர்புகளை அம்பலப்படுத்தியுள்ளது. ஜம்மு-காஷ்மீரின் வளர்ச்சியைக் கண்டு, சமூக நிலைமையை சீர்குலைக்கும் நோக்கில் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாக அவர் கூறினார். மேலும், பாகிஸ்தான் நீண்ட காலமாக எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை ஆதரித்து வருகிறது என்றார்.
விளக்கமளித்த பெண் அதிகாரிகள்:
இதுகுறித்து பெண் அதிகாரிகள் கர்னல் சோபியா குரேஷி, விங் கமாண்டர் வியோமிகா சிங் (Wing Commander Vyomika Singh) கூறுகையில், 21 பயங்கரவாத முகாம்கள் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் மற்றும் பாகிஸ்தானில் கண்டறியப்பட்டுள்ளது. இந்திய ராணுவ தாக்குதலில் பாகிஸ்தான் பொதுமக்கள் யாரும் உயிரிழக்கவில்லை. பாகிஸ்தானில் கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக பயங்கரவாதிகளுக்கான கட்டமைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. அவர்களுக்கு தொடர்ந்து பயிற்சிகளும் வழங்கப்பட்டு வருகின்றன. போரை தூண்டும் வகையில் இந்த தாக்குதலை நடத்தவில்லை எனவும், தீவிரவாத கும்பலை குறிவைத்து தாக்குதல் நடத்தியதாக ராணுவ பெண் அதிகாரிகள் விளக்கம் அளித்தனர்.