Indian Rupee Symbol: தமிழ்நாடு அரசு எடுத்த முடிவு.. இனி '₹' க்கு பதில் 'ரூ'.. பாஜக கடும் எதிர்ப்பு, திமுக தரப்பு ஆதரவு.!
நாளை தமிழ்நாடு சட்டப்பேரவையில் பட்ஜெட் தொடங்கவுள்ள நிலையில், தமிழ்நாடு அரசு செய்த ஒரு மாற்றம் தேசிய அளவில் கவனிக்கப்பட்டு இருக்கிறது. இந்த விசயத்திற்கு மாநில பாஜக எதிர்ப்பும் தெரிவித்துள்ளது.
மார்ச் 13, சென்னை (Chennai News): இந்திய அரசியலில் முக்கிய இடத்தினை தக்கவைத்துள்ள திமுக தலைமையிலான தமிழ்நாடு மாநில அரசுக்கும், மத்தியில் ஆட்சி செய்து வரும் பாஜக தலைமையிலான அரசுக்கும் இடையே கருத்து மோதல் சமீபகாலமாக நிலவி வருகிறது. மும்மொழிக்கொள்கை அடங்கிய புதிய தேசிய கல்விக்கொள்கையை ஏற்றுக்கொள்ள திமுக அரசு மறுப்பு தெரிவிப்பதால், திமுக - பாஜக (DMK Vs BJP) இடையே வார்தைப்போர் நடந்து வருகிறது. சமீபத்தில், பாராளுமன்றத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன் எழுப்பிய கேள்விக்கு, மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதில் அளிக்கும்போது, சர்ச்சைக்குரிய வகையில் திமுகவினரை விமர்சித்தார். பின் அவரின் வார்த்தைகளை திரும்பி பெற்றுக்கொள்வதாக கூறினார். எனினும், இந்த விவகாரம் கடும் ஆத்திரத்தை திமுக தொண்டர்கள் இடையே எழுப்ப, திமுகவினர் மாநிலம் தழுவிய அளவில் மத்திய அமைச்சருக்கு எதிராக போராட்டம் நடத்தினர். மேலும், சில இடங்களில் மத்திய அமைச்சரின் உருவப்படம் எரிக்கப்பட்டது.
தேவநாகிரிக்கு பதில் தமிழ்:
இந்நிலையில், நாளை (14 மார்ச் 2025) தமிழ்நாடு பட்ஜெட் கூட்டத்தொடர் 2025 தொடங்கி நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு தமிழ்நாடு முதல்வர் முக ஸ்டாலினின் (MK Stalin) வலைப்பக்கத்தில், தமிழ்நாடு பட்ஜெட் 2025 தொடர்பான அறிவிப்பு வெளியிடப்பட்டது. அப்போது, இதுவரை அரசு சார்பில் பயன்படுத்தப்பட்டு வந்த '₹' என்ற குறியீடுக்கு பதில், 'ரூ' என்ற வார்த்தை மாற்றப்பட்டது. இந்த விஷயம் மிகப்பெரிய அளவிலும் கவனத்தை பெற்றுள்ளது. மேலும், தமிழ்நாடு மாநில திட்டக்குழு துணைத்தலைவர் ஜெயரஞ்சன், தேவநாகிரி எழுத்தில் '₹' இருந்ததால், அதனை தவிர்த்துவிட்டு 'ரூ' பயன்படுத்தப்பட்டுள்ளது என விளக்கம் அளித்தார். Toll Plaza Smashed: பயன்பாட்டுக்கு வந்த அன்றே சம்பவம்.. விவசாயிகள், பொதுமக்களால் சூறையாடப்பட்ட சுங்கச்சாவடி..!
முதல்வரின் பதிவு, அண்ணாமலையின் (BJP K. Annamalai) எதிர்ப்பு:
"சமூகத்தின் அனைத்துத் தரப்பினரும் பயன்பெறும் வகையில் தமிழ்நாட்டின் பரவலான வளர்ச்சியை உறுதி செய்திட தமிழ்நாடு பட்ஜெட் 2025" என முதல்வர் எக்ஸ் வலைப்பதிவு வெளியிட்டுள்ளார். அதேநேரத்தில், பாஜக தமிழ்நாடு மாநில தலைவர் அண்ணாமலை, தமிழ்நாடு அரசின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், தனது எக்ஸ் பக்கத்தில் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், "தமிழர் ஒருவரால் உருவாக்கப்பட்டு, பாரத தேசத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்ட விஷயத்தை திமுக அரசு மாற்றி இருக்கிறது. இது முட்டாள்தனமான செயல்" என கண்டனம் தெரிவித்துள்ளார்.
₹ வரலாறு தெரியுமா? (Indian Rupee Symbol)
கடந்த 2010ம் ஆண்டு டாலர் உட்பட பிற நாடுகள் பயன்படுத்தி வரும் குறியீடுகளை போல, இந்தியாவுக்கும் ரூபாய்க்கான குறியீடு வேண்டும் என முடிவெடுக்கப்பட்டது. அப்போது, தேவநாகிரி எழுத்தில் இருந்தும், லத்தின் எழுத்தில் இருந்தும் இணைக்கப்பட்ட '₹' குறியீடு பணத்தை குறிக்கும் அடையாளமாக உருவாக்கப்பட்டது. இதனை உருவாக்கியவர் முன்னாள் திமுக சட்டமன்ற உறுப்பினரின் மகன் உதயகுமார் தர்மலிங்கம் ஆவார். ஒட்டுமொத்த இந்தியாவால் 2010க்கு பின்னர், ரூபாயை எளிய முறையில் குறிப்பிட '₹' என்ற இலச்சினை பயன்படுத்தப்பட்டது. தமிழ் ஆர்வலர்கள் முன்னரில் இருந்த பணமதிப்புக்கு முன்பு ரூ அல்லது ரூபாய் என எழுதி பயன்படுத்தி வந்தனர். அதனை இன்று அரசு அதிகாரபூர்வமாக முன்னெடுத்து இருக்கிறது. ஆனால், சர்ச்சைக்குரிய விவாதங்கள் நடைபெற்றபோது, திமுக அரசு இலச்சினை மாற்றியது ஆதரவு, எதிர்ப்பு என இருவிமர்சனங்களையும் எதிர்கொள்கிறது.
முக ஸ்டாலின் வெளியிட்ட பட்ஜெட் 2025 தொடர்பான எக்ஸ் வலைப்பதிவு: