White Gold: வெள்ளைத் தங்கம் லித்தியம் கண்டுபிடிப்பு.. பணக்கார நாடாகுமா இந்தியா?!

இந்தியாவிலேயே லித்தியம் கிடைக்கிறது எனில்… இந்தியா விரைவில் பணக்கார நாடாகுமா? இதில் என்னென்ன சாதகங்கள்? பாதகங்கள் எவை? என்பதனை இப்பதிவில் காணலாம்.

Lithium (Photo Credit: Wikipedia)

அக்டோபர் 03, புதுடெல்லி (New Delhi): அரிதான உலோகமான `வெள்ளைத் தங்கம்’ என்று அழைக்கப்படும் உலோகம், லித்தியம் (White Gold Lithium). இது இருக்கும் நாடுகளை மட்டுமல்ல, உலகின் தலைவிதியையே மாற்றக்கூடிய வல்லமை படைத்தது. அப்படிப்பட்ட லித்திய, இந்தியாவில் லட்சக்கணக்கான டன் இருப்பதாக அண்மையில் மத்திய அரசு அறிவித்தது. உலக நாடுகள் லித்தியத்துக்காக போட்டிப் போடும் நிலையில், இந்தியாவிலேயே லித்தியம் கிடைக்கிறது எனில்… இந்தியா விரைவில் பணக்கார நாடாகுமா? இதில் என்னென்ன சாதகங்கள்? பாதகங்கள் எவை?

இவ்வளவு லித்தியமா?:

உலக அளவில் மின்சார வாகனங்களுக்கான தேவை மிக அதிகமாக அதிகரித்து வருகிறது. 2030-க்குள் வாகனங்களின் மொத்த விற்பனையில் இவற்றின் பங்கு 30%-க்கும் அதிகமாக இருக்கும். இந்தியா கடந்த ஏப்ரல் - டிசம்பர் காலகட்டத்தில் லித்திய இறக்குமதிக்காக ₹.16300 கோடி செலவழித்துள்ளது. இன்றுவரை லித்தியத்துக்கு இந்தியா இறக்குமதியை மட்டுமே நம்பியுள்ளது. இந்த நிலையில் தான் ஜம்மு காஷ்மீர் பகுதியில் சுமார் 5.9 மில்லியன் டன் அளவுக்கு லித்தியம் படிவுகள் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. இதன்மூலம், பொலிவியா, அர்ஜெண்டினா, அமெரிக்கா, சிலி ஆஸ்திரேலியா, சீனா நாடுகளுக்கு அடுத்து உலகில் லித்தியம் அதிகம் உள்ள 7-வது நாடாக இந்தியா உருவெடுத்துள்ளது. Stock Market Crash: மத்திய கிழக்கில் நிலவி வரும் பதற்றம்.. அதலபாதாளத்திற்கு சென்ற பங்கு..!

லித்தியம் - ஏன் முக்கியம்?:

லித்தியம் இருப்பது கண்டறியப்பட்ட நாடுகள் பணக்கார நாடுகளாக அல்லது பணக்கார நாடுகளாக மாறக் கூடியவையாக கருதப்படுகின்றன. பூமியில் மிக அரிதாகவே கிடைக்கும், மிக லேசான உலோகமாக இருப்பதால் இது `வெள்ளை தங்கம்’ என்று அழைக்கப்படுகிறது. சுற்றுச்சூழலை பாதிக்கும் புதைப்படிவ (பெட்ரோல், டீசல்) எரிபொருளை பயன்படுத்தும் வாகனங்களை குறைக்க வேண்டுமானால், மின்சார வாகனங்கள் பயன்பாடு அதிகரிக்க வேண்டும். அதற்கான பேட்டரிகளுக்கு லித்தியம் தான் முக்கிய மூலப் பொருளாக உள்ளது. இதுமட்டுமல்லாமல், பல்வேறு துறைகளிலும் லித்தியம் தேவைப்படுகிறது. இப்போதுள்ள கார்பன் உமிழ்வு வேகத்தில், புவி வெப்பமயமாதலை தடுக்க வேண்டுமானால், உலகத்துக்கு குறைந்தது 200 கோடி மின்சார வாகனங்கள் தேவை.

லித்தியம் - எதற்கெல்லாம் தேவை?:

பின்வரும் பொருட்கள் தயாரிப்புக்கு லித்தியம் மிக முக்கியமான தேவையாக உள்ளது:

  • ரீசார்ஜபில் பேட்டரிகள்
  • மின்சார வாகனங்கள், மொபைல் ஃபோன்கள், லேப்டாப்கள்
  • டிஜிட்டல் கேமராக்கள்
  • விமான பாகங்கள்
  • இலகுரக உலோகங்கள் உற்பத்தி
  • சில வகை மருந்துகள்
  • செராமிக் மற்றும் கண்ணாடி உற்பத்தி

உலக பொருளாதார மாமன்ற ஆய்வின்படி, 2025-ம் ஆண்டுக்குள்ளாகவே லித்தியம் தட்டுப்பாடு உருவாகிவிடும்.

இந்தியாவில் எப்போது கிடைக்கும்?:

லித்தியத்தை கண்டறிவதில் இந்தியா தற்போது முதல் நிலையில் (inferred stage) உள்ளது. அதாவது இந்த அளவுக்கு லித்தியம் இருக்கும் என்று உத்தேசமாக கண்டறியப்பட்டு உள்ளது. ஆனால், இன்னும் சரியாக மதிப்பிடப்படாமல் உள்ளது. லித்தியத்தின் சரியான இருப்பிடத்தை கணித்து, அதன் அளவை உறுதியாக மதிப்பிட்டு, பிரித்தெடுக்கும் பணியை தொடங்க (மூன்றாம் நிலையான measured stage-க்கு) இன்னும் 10 ஆண்டுகள் தேவைப்படும் என்று கூறப்படுகிறது. ஏனென்றால், சுரங்கங்கள் அமைத்து லித்தியத்தை வெட்டியெடுத்து, பிரித்தெடுத்து வணிகப் பொருளாக மாற்றுவதற்கான தொழில்நுட்பத்தை இந்தியா இனிதான் பெற வேண்டும். Pregnancy Gadgets: கர்ப்பமாக இருக்கிறீர்களா? அப்போ உங்களுக்கான அசத்தல் சாதனங்களின் முழு லிஸ்ட் இதோ..!

இந்தியா எதிர்கொள்ளும் சவால்கள்:

கடந்த 2021-ம் ஆண்டிலேயே கர்நாடக மாநிலத்தில் 1600 டன் லித்தியம் படிமங்கள் இருப்பதாக கண்டறியப்பட்டது. ஆனால், அதை பிரித்தெடுத்து பயன்படுத்துவது வணிகரீதியாக லாபகரமானது இல்லை என்பதால், அந்த முயற்சி கைவிடப்பட்டது. லித்தியம் கண்டறியப்பட்டுள்ள ஜம்மு காஷ்மீர் முழுவதுமே, இமயமலைத் தொடரில் அமைந்துள்ளது. இது நிலநடுக்க ஆபத்து அதிகமான Zone IV-ல் அமைந்துள்ளது.

உலகம் முழுவதும் லித்தியம் சுரங்கம் அமைந்துள்ள இடங்களில் பெரும் போராட்டங்கள் நடந்து வருகின்றன. இதற்கு காரணம், அவை ஏற்படுத்தும் சுற்றுச்சூழல் பாதிப்புகள் அவ்வளவு அதிகம். லித்தியம் பிரித்தெடுக்க மிக அதிக அளவில் தண்ணீர் தேவைப்படும். இதனால், இந்த பகுதிகளில் தண்ணீர் பிரச்சனை ஏற்படும். மேலும், லித்தியம் பிரித்தெடுக்கும் போது அதிக அளவில் கார்பன் டை ஆக்சைடு வாயு வெளியேறும். இது சூழலுக்கு நல்லதல்ல.

இந்தியா பணக்கார நாடாகுமா?:

ஜம்மு காஷ்மீரில் உள்ள லித்தியத்தை பிரித்தெடுத்து பயன்படுத்த எவ்வளவு காலம் பிடிக்கும்? எத்தகைய சவால்களை சந்திக்க வேண்டியிருக்கும் என்பதெல்லாம் இன்னும் தெளிவாகவில்லை. மேலும், ஏற்கனவே வட இந்தியாவில் நிலநடுக்க ஆபத்து அதிகமாக உள்ள நிலையில், லித்தியம் சுரங்கங்களால் ஆபத்து ஏற்படாமல் இருப்பதை உறுதிச்செய்ய வேண்டும். ஏற்கனவே தீவிரவாதத்தால் பாதிக்கப்பட்டுள்ள காஷ்மீரில், லித்தியத்தால் என்ன பிரச்சனை வரும் என யோசிக்க வேண்டியுள்ளது. லித்தியத்துக்காக சில நாடுகள் காஷ்மீர் பிரச்சனையை தீவிரமாக்க முயற்சிக்கலாம். சூழல் பாதிப்புகளை ஒப்பிடுகையில் இது லாபகரமானதா என்றும் பார்க்க வேண்டும். இவை எல்லாவற்றுக்கும் மேலாக, இந்த சுரங்கங்கள் யாருக்கு வழங்கப்படுமோ… இதெல்லாம் கடந்து லித்தியம் கிடைத்தால், நாட்டுக்கு வருமானம் கிடைக்கும்.

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement