Karuvepillai Kulambu Recipe: கறிவேப்பிலை குழம்பு இப்படி செய்யுங்க எல்லாரும் விரும்பி சாப்பிடுவாங்க.. அசத்தல் டிப்ஸ் இதோ..!

இந்த பதிவில் கறிவேப்பிலை குழம்பு செய்வது எப்படி என்று தெரிந்து கொள்ளலாம்.

Karuvepillai Kulambu (Photo Credit: YouTube)

அக்டோபர் 02, சென்னை (Cooking Tips): கறிவேப்பிலையை வைத்துக் குழம்பு, தோசை செய்யலாம். அவ்வளவு சுவையாக இருக்கும். அது தவிர நான் அடைக்கு அரைக்கும் போது நிறையக் கறிவேப்பிலை போட்டு அரைத்துத் தான் பார்ப்பேன். அடையும் பச்சை நிறத்தில் இருப்பதோடு, நல்ல சுவையாகவும் இருக்கும். அதோடு பருப்பு உசிலி செய்ய அரைக்கும் போதும் நிறையக் கறிவேப்பிலை சேர்த்துத் தான் அரைப்பேன். ரசம், சாம்பாரில் நிறையக் கறிவேப்பிலை போடுவேன். ரசம்/ சாம்பார் கொதிக்கும் போது கறிவேப்பிலையின் சாறு இறங்கி ரசம், சாம்பார் அவ்வளவு மணமாகவும், சுவையாகவும் இருக்கும். இப்போது கறிவேப்பிலை குழம்பு எப்படிச் செய்யலாம் என்று பார்ப்போமா?

தேவையானவை:

வறுத்து அரைக்க:

கறிவேப்பிலை - 2 கைப்பிடி அளவு

மிளகாய் வற்றல் - 10

ஜீரகம் - 1/2 டீஸ்பூன்

மிளகு - 1 டீஸ்பூன்

உளுந்தம் பருப்பு - 1 டீஸ்பூன்

துவரம் பருப்பு - 1 டீஸ்பூன்

புளி - சின்ன எலுமிச்சம் பழம் அளவு

நல்லெண்ணெய் - 2 டீஸ்பூன்

தாளிக்க:

கடுகு, உ. பருப்பு - தலா 1 டீஸ்பூன்

பெருங்காயத் தூள் - 1/2 டீஸ்பூன்

மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்

நல்லெண்ணெய் - ஒரு குழிக் கரண்டி

உப்பு - தேவையானது Mahalaya Amavasya 2024: மகாளய அமாவாசை 2024.. மேஷம் முதல் மீனம் வரை.. எல்லா ராசிக்காரர்களும் செய்ய வேண்டிய தானம் என்ன?!

செய்முறை:

ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு அடுப்பில் வைக்கவும். காய்ந்ததும் புளியை நார் இல்லாமல் பிய்த்துப் போடவும். பிறகு மிளகாய் வற்றல், ஜீரகம், மிளகு, உளுந்தம் பருப்பு, துவரம்பருப்பு போட்டு வறுத்து, கடைசியில் கறிவேப்பிலையையும் போட்டு வதக்கவும். அடுப்பை அணைத்து விட்டு ஆறிய பிறகு, தண்ணீர் சேர்த்து விழுது பதத்தில் அரைத்து எடுக்கவும்.

ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு அடுப்பில் வைக்கவும். காய்ந்ததும் கடுகு, உளுந்தைப் போடவும். பொரிந்ததும் பெருங்காயத் தூள், மஞ்சள் தூள் போடவும். பிறகு அரைத்து வைத்து இருக்கும் விழுதைப் போட்டுக் கிளறவும். ஐந்து நிமிடங்கள் வரை கிளறி, தேவையான தண்ணீர் விட்டுக் கொதிக்க விடவும். எண்ணெய் பிரிந்து வரும் போது அடுப்பை அணைத்து விடவும். இப்போது தேவையான உப்பைப் போட்டுக் கலந்தால் ஆரோக்கியமான, சுவையான கறிவேப்பிலை குழம்பு தயார். இதைச் சூடான சாதத்தில் போட்டு, நல்லெண்ணெய் விட்டுக் கலந்து சாப்பிட்டால் அவ்வளவு ருசியாக இருக்கும்.