Mahalaya Amavasya (Photo Credit: LatestLY)

அக்டோபர் 02, சென்னை (Festival News): ஒரு மாதத்தின் சரிபாதியே பட்சம் எனப்படும். அமாவாசையை நோக்கிச் செல்லும் நாட்களை கிருஷ்ண பட்சம் எனவும் பௌர்ணமியை நோக்கி நகரும் நாட்கள் சுக்கில பட்சம் எனவும் நமது முன்னோர்கள் கூறியுள்ளனர். அதே போல மகாளய பட்சம் என்பதும் பதினைந்து நாட்கள் கொண்ட ஒரு காலம் ஆகும். ஆவணி மாதப் பௌர்ணமியை அடுத்த பிரதமையிலிருந்து புரட்டாசி அமாவாசை வரை உள்ள நாட்கள் மகாளய பட்சம் (Mahalaya Amavasya) என்று அழைக்கப்படுகிறது.

மகாளய அமாவாசை: நம் முன்னோர்கள் ஆடி அமாவாசையின் போது பித்ரு லோகத்திலிருந்து கிளம்பி நாம் வசிக்கும் பூமியை நோக்கிப் பயணப்படுவார்களாம். அப்படிப் புறப்பட்டவர்கள் சரியாக ஆவணி மாத பௌர்ணமி நாளுக்கு அடுத்த நாள் பூமிக்கு வந்து சேர்வார்கள். அடுத்த பதினைந்து நாள்களும் அவர்கள் நம்மோடு பூமியிலேயே தங்கி இருந்து நாம் அளிக்கும் நீரையும் உணவையும் ஏற்றுக்கொண்டு திருப்தியாகி மகாளய அமாவாசை முடிந்ததும் மீண்டும் பித்ரு லோகம் நோக்கிப் புறப்படுவார்களாம். அந்த 15 நாள்களும் நாம் முன்னோர்களுக்குத் தர்ப்பணம் தந்து வழிபட வேண்டும். ஆனால் அனைவருக்கும் அது சாத்தியம் இல்லை. எனவே மகாளய அமாவாசை அன்று தர்ப்பணம் தரவேண்டும். Gandhi Jayanti 2024: "தோல்வியின் போது தான் வீரன் உருவாகிறான்" தேசத்தந்தை மகாத்மா காந்தி ஜெயந்தி..!

மகாளய அமாவாசை எப்போது?: இந்த வருடம் அக்டோபர் 2ம் தேதி புதன்கிழமையான இன்று மஹாளய அமாவாசை வழிபடப்படுகின்றது. இன்றைய நாளில் காலை 6 மணியிலிருந்து 1 மணி வரை தர்ப்பணம் கொடுக்கலாம் (Today Amavasya Timing). நீர் நிலைகளிலும் கோயில் மண்டபங்களிலும் சென்று இதைச் செய்வது விசேஷம். ராமேஸ்வரம், திருச்சி அம்மா மண்டபம், திருப்பூவணம் போன்ற தலங்களில் இது விசேஷமான தினம். பக்தர்கள் லட்சக்கணக்கில் குவிவார்கள்.

வழிபாட்டு நேரமும், முறையும்: முன்னோர்களுக்கு படையல் இட்டு வழிபடும் வழக்கம் உள்ளவர்கள் பகல் 12 மணிக்கு இலை போட்டு படையல் இடலாம். அப்படி முடியாதவர்கள் பகல் 01.35 மணிக்கு பிறகு இலை போட்டு படையல் இட்டு வழிபட்டு, காகத்திற்கு சாதம் வைத்து விட்டு, பிறகு தாங்கள் உணவு உண்ணலாம். மாலை 6 மணிக்கு பிறகு கோவிலுக்கு சென்றோ அல்லது வீட்டிலோ முன்னோர்களின் படத்திற்கு முன்பாக தனியாக ஒரு மண் அகலில், நல்லெண்ணையில் பஞ்சு திரியிட்டு தீபம் ஏற்ற வேண்டும். இது நம்முடைய முன்னோர்களுக்கு மோட்சத்தை அளிக்கக் கூடிய தீபம் ஆகும்.

12 ராசிக்காரர்களும் செய்ய வேண்டிய தானங்கள்:

  • மேஷம்: கோதுமை தானம்

  • ரிஷபம்: பச்சரிசி, வெல்லம், பருப்பு
  • மிதுனம்: கொண்டைக்கடலை தானம்
  • கடகம்: பச்சரிசி தானம்
  • சிம்மம்: கோதுமை, கருப்பு உளுந்து, நல்லெண்ணெய் தானம்
  • கன்னி: கொண்டைக்கடலை தானம்
  • துலாம்: பால் தானம்
  • விருச்சிகம்: சுமங்கலிகளுக்கு வஸ்திர தானம்
  • தனுசு: அன்னதானம்
  • மகரம்: பச்சரிசி, கருப்பு உளுந்து, நல்லெண்ணெய் தானம்
  • கும்பம்: பசுமாட்டுக்கு உணவளிப்பது
  • மீனம்: ஆதரவற்றவர்களுக்கு ஆடைகள் தானம்