TCS Layoff Controversy: 12,000+ ஊழியர்கள் கட்டாய ராஜினாமா.. பணியாளர்களை மிரட்டி வெளியேற்றும் டிசிஎஸ்?
டாடா கன்சல்டன்சி நிறுவனம் 12,000க்கும் மேற்பட்ட ஊழியர்களை கட்டாயப்படுத்தி பணிநீக்கம் (TCS Layoffs) செய்ததாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. ராஜினாமா செய்யுமாறு அழுத்தம் கொடுத்ததாகவும், ராஜினாமா கடிதத்தில் தனிப்பட்ட காரணங்கள் என குறிப்பிட வற்புறுத்தியதாகவும் இணையத்தில் TCS நிறுவன ஊழியர்கள் குமுறி வருகின்றனர்.
செப்டம்பர் 22, புதுடெல்லி (Technology News): டாடா கன்சல்டன்சி நிறுவனம் (TATA Consultancy Services Company) இந்தியாவின் மிகப்பெரிய தனியார் நிறுவனத்தில் ஒன்றாகும். இந்நிறுவனத்தில் நேரடியாக 6 லட்சத்துக்கும் அதிகமான தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகின்றனர். ஒவ்வொரு மாநிலத்திலும் டாடா நிறுவனம் தனது தொழில்நுட்ப சேவையையும் வழங்கி வருகிறது. 2025-26 ஆம் ஆண்டில் 12,000 ஊழியர்களை பணி நீக்கம் செய்ய திட்டமிட்டுள்ளதாக முன்னதாகவே தெரிவித்திருந்த நிலையில், தற்போது பணிநீக்கம் செய்யப்படும் ஊழியர்களின் எண்ணிக்கை உயர வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன. இதனால் டாடா கன்சல்டன்சி நிறுவனம் கடும் சர்ச்சையில் சிக்கியுள்ளது.
வேலை இழப்பு அபாயம் :
கடந்த சில வாரங்களாகவே கட்டாய ராஜினாமா, முன்கூட்டிய ஓய்வு, பணிநீக்கம் மற்றும் HR தாக்குதல் குறித்து டாடா நிறுவனம் மீது தொடர் குற்றச்சாட்டுகள் எழுந்த வண்ணம் இருக்கின்றன. இது ஊழியர்களையும், தொழிற்சங்கங்களையும் அதிருப்தியடைய செய்துள்ளது. இந்நிலையில் டாடா கன்சல்டன்சி நிறுவனம் செயல்பட்டு வரும் பல்வேறு பெருநகரங்களில் பணியாளர்களை நிறுவனம் கட்டாயப்படுத்தி வேலையை விட்டு அனுப்புவதாக ரெடிட் போன்ற வலைதளங்களில் தகவல்கள் வெளியாகி உள்ளன. சமீபத்தில் கூட மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள போபால் டாடா நிறுவனத்தில் இருந்து 1000 ஊழியர்கள் கட்டாயப்படுத்தி பணிநீக்கம் செய்யப்பட்டதாக தகவல் வெளியானது. ஆனால் இந்த குற்றச்சாட்டுக்கு டாடா தரப்பில் மறுப்பு தெரிவித்து அறிக்கையும் வெளியிடப்பட்டது.
டாடா நிறுவனம் மறுப்பு:
இதனிடையே சமூக ஊடகங்களில் வெளியான தகவலின் படி, மொத்தமாக தற்போது வரை சுமார் 12,000க்கும் மேற்பட்ட டாடா பணியாளர்கள் கட்டாயப்படுத்தி நிறுவனத்திலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளதாகவும், இதனால் அவர்களின் பணி கேள்விக்குறியாகி உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன, இந்த குற்றச்சாட்டுகளுக்கு டாடா தரப்பு மறுப்பு தெரிவித்து, எந்த விதமான பணி நீக்க நடவடிக்கையிலும் ஈடுபடவில்லை என்று கூறியுள்ளது. ஆனால் ஊழியர்கள் தரப்பில் நிறுவனம் கட்டாயப்படுத்தி தங்களை வெளியே அனுப்புவதாகவும், தாங்கள் எழுதிக் கொடுத்து வேலையை விட்டு செல்வதை போன்ற பிம்பத்தை உருவாக்குவதாகவும் கூறி வருகின்றனர். TCS Layoff Controversy: 1000 பேரின் வேலைக்கு ஆப்பு வைத்த டிசிஎஸ்? அதிரடி விளக்கத்தை கொடுத்த நிர்வாகம்.!
டாடா நிறுவன ஊழியர்கள் கட்டாய பணிநீக்கம்:
அதன்படி Fluidity List என்ற மறைக்கப்பட்ட பணிநீக்கம் செய்ய வேண்டிய பணியாளர்களின் விபரங்களை தனியே தரவாக சேமித்து அவர்களை பாரபட்சம் இன்றி பணியில் இருந்து நீக்குவதாகவும் சொல்லப்படுகிறது. எந்தவிதமான முன்னறிவிப்பும் இன்றி இந்த நடவடிக்கை நடைபெறுவதால் வேலைக்குச் சென்ற பலரும் அன்றைய நாளே வேலையை விட்டு வரும் சூழலை எதிர்கொண்டுள்ளனர். முதலில் ராஜினாமா செய்ய அழுத்தம் தந்து, ஊழியர்கள் மறுக்கும் பட்சத்தில் நேரடி பணிநீக்கம் நடைபெறுகிறது.
இழப்பீடு இல்லை:
ரெடிட் தளத்தில் இதுதொடர்பாக 30 ஆண்டுகள் பணியாற்றிய ஊழியர் ஒருவர் கூறுகையில், 20 நிமிடங்களுக்குள் இரண்டு விருப்பங்களில் ஒன்றை தேர்வு செய்ய டாடா நிறுவனத்தில் இருந்து கூறியதாக தெரிவித்துள்ளார். அதன்படி, முன்கூட்டிய ஓய்வு ஏற்க வேண்டும் அல்லது பணிநீக்கம் செய்யப்பட வேண்டும் என்ற இரண்டில் ஒன்றை தேர்வு செய்ய கூறியுள்ளனர். மேலும் அவருக்கு எந்தவித நிவாரணத் தொகையையும், இழப்பீட்டையும் வழங்கவில்லை என்று தெரிவித்தார்.
பணியாளர்கள் மீது தாக்குதல் புகார்:
அதேபோல உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள நொய்டாவை சேர்ந்த ஊழியர் ஒருவர் HR எந்தவித முன்னறிவிப்பும் இன்றி தன்னை பணிநீக்கம் செய்து விட்டதாக தெரிவித்தார். இதுகுறித்து அவர் தெரிவிக்கையில், "எனது செல்போன் எண்ணுக்கு நான் பணிநீக்கம் செய்யப்பட்டதாக அறிவிப்பு வந்தது. இதனால் உடனடியாக நான் எனது HRக்கு மெசேஜ் செய்தேன். ஆனால் அவர்கள் பதில் கூறவில்லை. இதனால் நேரில் சென்று கேட்டேன். எனது பாதுகாப்புக்காக செல்போன் மூலம் வீடியோவும் எடுத்தேன். அப்போது மற்றொரு HR என்னை தாக்கி என் கையை முறுக்கினார். இதனால் உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் நான் பாதிக்கப்பட்டேன்" என கூறினார்.
மிரட்டி பணியாளர்களை வெளியேற்றும் டிசிஎஸ்?
இதனை தொடர்ந்து புதிதாக சேர்ந்த சில ஊழியர்களை HR 15 நிமிடங்களுக்குள் ராஜினாமா செய்யுமாறு அழுத்தம் கொடுத்ததாகவும், ராஜினாமா கடிதத்தில் தனிப்பட்ட காரணங்கள் என குறிப்பிட வற்புறுத்தியதாகவும் குற்றச்சாட்டை முன்வைத்தனர். அதனை மறுக்கும் பட்சத்தில் நெகட்டிவ் ரிலீஸ் லெட்டர் (Negative Release Letter) வழங்கப்படும் என மிரட்டப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இதனால் இந்திய ஐடி துறையில் பணிநீக்கம் என்பது சாதாரணமாக மாறிவிட்டன என விமர்சனங்கள் எழுந்துள்ளன. இந்த தகவல்கள் தற்போது பரபரப்பை உண்டாக்கி இருக்கிறது. ஆனால் இந்த குற்றச்சாட்டுஜளை ஏற்க மறுத்துள்ள டாடா கன்சல்டன்ஸி, எங்கள் ஊழியர் பிரிவுகள் எப்போதும் நெறிமுறையுடனும், வெளிப்படைத்தன்மையுடனும் செயல்படுவதாகதெரிவித்துள்ளது.
ஊழியர்கள் கட்டாய பணிநீக்கம் குறித்த அதிர்ச்சி தகவல் :
(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)