Trichy News: எடப்பாடி பழனிச்சாமி கூட்டத்தில் புகுந்த 108 ஆம்புலன்ஸ்.. ஓட்டுநர் மீது தாக்குதல்.. அதிமுக தொண்டர்கள் ஆவேசம்.!
திருச்சியில் நடைபெற்ற அதிமுக பிரச்சார கூட்டத்துக்குள் 108 ஆம்புலன்ஸ் வந்தது. இதனால் அதிமுக தொண்டர்கள் ஆம்புலன்ஸ் மீது தாக்குதல் நடத்தினர். எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் நடக்கும் கூட்டத்தில் இடையூறு செய்ய ஆம்புலன்ஸ் அனுப்பப்படுவதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
ஆகஸ்ட் 25, திருச்சி (Trichy News): 2026 ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு அதிமுக மக்களிடையே தேர்தல் பிரச்சார வியூகத்தை களமிறக்கி இருக்கிறது. அதன்படி 'மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம்' என்ற தலைப்பில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மக்களை சந்தித்து வருகிறார். இதற்காக தமிழக அளவில் அனைத்து நகரங்களிலும் தேர்தல் பிரச்சாரங்களும் விறுவிறுப்புடன் நடைபெற்று வருகிறது. இதனிடையே வேலூர் மாவட்டம் அணைக்கட்டு பகுதியில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் காலியாக உள்ள ஆம்புலன்ஸ் அனுப்பி கூட்டத்துக்கு இடையூறு செய்ததாக எடப்பாடி பழனிசாமி அவசர ஊர்தி ஓட்டுநரை கடிந்து கொண்டார். இந்த விஷயம் அரசியல் மட்டத்தில் பேசுபொருளாகி சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில் திருச்சி மாவட்டம் பகுதிகளில் அவர் பிரச்சாரம் செய்து வந்தார். Gold Rate Today: சரிந்தது தங்கம் விலை.. இன்றைய விலை நிலவரம் என்ன?.!
திருச்சியில் இபிஎஸ் தலைமையில் பிரச்சார பயணம்:
ஞாயிற்றுக்கிழமை அன்று திருச்சி புறநகர் வடக்கு மாவட்டம், மண்ணச்சநல்லூர் கடைவீதி பகுதிகளில் பிரச்சாரம் தொடங்கி நடைபெற்றது. அப்போது எடப்பாடி பழனிசாமி உரையாற்றி வந்தார். அவர் கூட்டத்தில் பேசிக்கொண்டிருக்கும் போதே அந்த வழியாக ஆம்புலன்ஸ் ஒன்று செல்ல முயன்றது. இதனை அதிமுகவினர் சுற்றிவளைத்த நிலையில், நோயாளி இருக்கிறாரா? என பரிசோதனை செய்தனர். அப்போது நோயாளி இல்லாததால் வலுக்கட்டாயமாக அதனை திருப்பி அனுப்பிய நிலையில், துறையூரில் விபத்தில் சிக்கியவரை மீட்க வந்த ஆம்புலன்ஸை அதிமுகவினர் திருப்பி அனுப்பி விட்டதாக கூறப்படுகிறது. மேலும் ஆம்புலன்ஸ் ஓட்டுனரை அதிமுகவினர் தாக்கியதில் அவர் காயமடைந்து துறையூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், விபத்தில் சிக்கியவரை மீட்க ஆம்புலன்ஸ் ஓட்டுநர் சென்றது உறுதி செய்யப்பட்டால் ஓட்டுநரை தாக்கிய அதிமுகவினர் கைது செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
வேலூரில் நடந்த கூட்டத்திலேயே அடுத்த முறை ஆம்புலன்ஸ் இவ்வாறு வருகை தந்தால் அவசர ஊர்தி ஓட்டுனர் அதே ஆம்புலன்ஸில் செல்ல நேரிடும் என மிரட்டும் தோணியில் எடப்பாடி பழனிச்சாமி பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.