School Driver Malaiyappan | MK Stalin (Photo Credit: @im_inba1 / @mkstalin X)

ஜூலை 26, காங்கேயம் (Tiruppur News): திருப்பூர் மாவட்டத்தில் உள்ள காங்கேயம் பகுதியில் வசித்து வருபவர் மலையப்பன். வெள்ளகோவில், அய்யலூர் பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளியில், இவர் வேன் ஓட்டுநராக வேலை பார்த்து வருகிறார். நேற்று முன்தினம் மாலை நேரத்தில் 20 க்கும் மேற்பட்ட குழந்தைகளை தன்னுடன் வேனில் ஏற்றுக்கொண்ட மலையப்பன், அவர்களை வீட்டிற்கு செல்ல வாகனத்தை செலுத்தி இருக்கிறார். இந்த வாகனம் கோவை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சென்றபோது, மலையப்பனுக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டுள்ளது. இதனால் அவர் வாகனத்தை சாலையோரம் நிறுத்திய நொடிப்பொழுதில் மயங்கி விழுந்து உயிரிழந்தார். வாகனத்தில் இருந்தவர்கள் அலறிய சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர், மலையப்பனை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். வேனில் மலையப்பனின் மனைவி லதா உதவியாளராகவும் வேலை பார்த்து வருகிறார். Special Bus for Weekend: சென்னையில் இருந்து சொந்த ஊர் செல்லும் பயணிகளுக்கு உற்சாக செய்தி; போக்குவரத்துத்துறை அறிவிப்பு.! 

முதல்வர் இரங்கல் & நிவாரண உதவி அறிவிப்பு:

மருத்துவமனையில் மலையப்பனை பரிசோதனை செய்த மருத்துவர்கள், அவரின் உயிரிழப்பை உறுதி செய்தனர். இந்த விஷயம் செய்தியாக வெளியாகி மலையப்பனுக்கு பலரும் தங்களின் இரங்கலை தெரிவித்து வந்தனர். இந்நிலையில், இந்த விசயத்திற்கு தமிழ்நாடு முதல்வர் மு.க ஸ்டாலினும் தனது இரங்கலை பதிவு செய்துள்ளார். அந்த ட்விட் பதிவில், "இறக்கும் தருவாயிலும் இளம் பிஞ்சுகளின் உயிர்காத்த திரு. மலையப்பன் அவர்களது மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவரது மனிதநேயமிக்க செயலால் புகழுருவில் அவர் வாழ்வார்!" என தெரிவித்துள்ளார். முதல்வரின் பொதுநிவாரண நிதியில் இருந்து ரூ.5 இலட்சம் தொகையை விடுவிப்பதாக அறிவித்துள்ள முதல்வர், அவரின் குடும்பத்திற்கு தேவையான உதவிகளை செய்வதாகவும் தெரிவித்துள்ளார்.