Avani Avittam 2025 (Photo Credit: Team LatestLY)

ஆகஸ்ட் 06, சென்னை (Festival News): ஆவணி அவிட்டம் (Avani Avittam) என்பது இந்து மதத்தில் குறிப்பாக பிராமண சமூகத்தினரால் கொண்டாடப்படும் ஒரு முக்கியமான பண்டிகை ஆகும். இது உபாகர்மம் என்றும் அழைக்கப்படுகிறது. காயத்ரி மந்திரத்தை மீண்டும் உச்சரித்து, புதிய பூணூல் அணிவதன் மூலமும், வேதங்களை மீண்டும் பயிலத் தொடங்குவதன் மூலமும் ஆன்மிக ரீதியில் தூய்மையாவதற்கான ஒரு வாய்ப்பை வழங்குகிறது. ஆவணி அவிட்டம் ஏன் இவ்வளவு முக்கியமானது, அதன் சடங்குகள் என்ன, மற்றும் அதன் ஆன்மிக அர்த்தம் என்ன என்பதை இப்பதிவில் விரிவாகப் பார்ப்போம். Tiruvannamalai Girivalam: ஆடி பௌர்ணமி 2025.. திருவண்ணாமலை கிரிவலம் செல்ல உகந்த நேரம்..!

ஆவணி அவிட்டம் - பொருள் மற்றும் வரலாறு:

உபாகர்மம் என்ற சொல்லுக்கு "மீண்டும் தொடங்குதல்" என்று பொருள். ஆவணி அவிட்டம் நாளன்று, வேதங்களை பயில்வது மீண்டும் தொடங்கப்படுகிறது. இது பிரம்மச்சாரிய வாழ்க்கையின் தொடக்கத்தைக் குறிக்கிறது. பிராமணர்கள் சிறு வயதிலேயே உபநயனம் எனப்படும் சடங்கின் மூலம் பூணூல் அணிவார்கள். பூணூல் அணிவது, வேதக் கல்வியைத் தொடங்குவதற்கான தகுதியையும், ஆன்மிக கடமைகளை நிறைவேற்றுவதற்கான உரிமையையும் குறிக்கிறது. ஆண்டுதோறும் ஆவணி அவிட்டம் அன்று, பழைய பூணூலை நீக்கிவிட்டு, புதிய பூணூலை அணிந்துகொள்கிறார்கள். இது ஆன்மிக வாழ்க்கையில் ஒரு புதிய அத்தியாயத்தைத் தொடங்குவதைக் குறிக்கிறது. இந்த விழா பிரம்மச்சாரியம், இல்லறம், வானப்பிரஸ்தம், சந்நியாசம் ஆகிய 4 ஆசிரமங்களுக்கும் பொருந்தும். இந்த நான்கு நிலைகளில் இருப்பவர்களும் தங்கள் கடமைகளை நினைவுகூர்ந்து, ஆன்மிக வாழ்வை மேம்படுத்தும் நோக்கில் இம்முறைகளை பின்பற்றுகிறார்கள்.

ஆவணி அவிட்டம் தேதி மற்றும் நல்லநேரம்:

ஆவணி அவிட்டம் 2025ஆம் ஆண்டு ஆகஸ்ட் 09ஆம் தேதி சனிக்கிழமை வருகிறது. அன்று காலை 07:00 மணி முதல் 10:00 மணி வரை நல்ல நேரம் உள்ளது. புதிய பூணூல் அணிந்து, வேதங்களை சொல்லி, இறைவனை வழிபடுவது சிறந்தது. ராகு காலம் மற்றும் குளிகை நேரங்களைத் தவிர்த்து மற்ற நேரங்களில் சுப காரியங்களைச் செய்யலாம். ஆவணி அவிட்டம் அன்று நல்ல நேரம் குறித்த துல்லியமான தகவல்களுக்கு உள்ளூர் பஞ்சாங்கத்தைப் பார்ப்பது நல்லது.

ஆவணி அவிட்டத்தின் முக்கிய மூன்று பிரிவுகள்:

1. ஹோமம் மற்றும் தர்ப்பணம்:

விழாவின் தொடக்கத்தில், பூணூல் அணிபவர்கள் ஒரு ஹோமத்தை நடத்துகிறார்கள். இந்த ஹோமத்தில் காயத்ரி மந்திரம் மற்றும் வேத மந்திரங்கள் ஓதப்படுகின்றன. ஹோமத்திற்குப் பிறகு, நம் முன்னோர்களுக்கு தர்ப்பணம் அளிக்கப்படுகிறது. இந்த தர்ப்பணம், குடும்பத்தில் உள்ள அனைத்து உறுப்பினர்களின் நலனுக்காகவும், முன்னோர்களின் ஆசீர்வாதத்தைப் பெறுவதற்காகவும் செய்யப்படுகிறது.

2. காயத்ரி ஜபம்:

ஆவணி அவிட்டத்தின் மிக முக்கியமான பகுதி காயத்ரி ஜபம். ஒரு பிராமணனுக்கு காயத்ரி மந்திரம் ஒரு ஆன்மிகக் கவசம் போன்றது. இந்த மந்திரத்தை உபநயனத்தின்போது உபதேசிக்கப்படுகிறது. காயத்ரி ஜபம் என்பது மந்திரத்தை மீண்டும் மீண்டும் உச்சரித்து, அதன் ஆற்றலை உணர்வதாகும். ஆவணி அவிட்டத்தன்று, காயத்ரி ஜபம் 1008 முறை அல்லது அதற்கும் அதிகமாகச் செய்யப்படுகிறது. இந்த மந்திர உச்சரிப்பானது வேதங்களின் சாராம்சத்தையும், படைப்பின் மூலத்தையும் உணர்த்துவதாக நம்பப்படுகிறது. Tamil Amman Movies: ஆன்மீக பக்தர்களுக்கு அம்மன் திரைப்படங்கள்.. இந்த படங்களை மிஸ் பண்ணிடாதீங்க..!

3. புதிய பூணூல் அணிதல்:

அன்றைய நாளில், பழைய பூணூலை நீக்கிவிட்டு, புதிய பூணூலை அணிவார்கள். பூணூல் என்பது 3 முக்கிய இழைகளைக் கொண்டது. இவை பிரம்மன், விஷ்ணு, சிவன் ஆகிய மும்மூர்த்திகளையும் குறிப்பதாகக் கருதப்படுகிறது. மேலும், இது மனது, பேச்சு, செயல் ஆகிய மூன்றையும் குறிப்பதாகவும் கூறப்படுகிறது. புதிய பூணூல் அணிவதன் மூலம், ஒரு புதிய ஆன்மிகப் பொறுப்பை ஏற்றுக்கொள்வதாகப் பொருள்படும்.

ஆவணி அவிட்டத்தின் ஆன்மிக முக்கியத்துவம்:

  • இவ்விழா, ஆன்மிக வாழ்க்கைக்கு ஒரு புத்துயிர் அளிக்கும் வாய்ப்பை வழங்குகிறது. ஒரு ஆண்டில் நாம் அறிந்தோ அறியாமலோ செய்த தவறுகளிலிருந்து விடுபட்டு, மீண்டும் தூய்மையாகத் தொடங்குவதற்கு இது உதவுகிறது.
  • ஆவணி அவிட்டம், வேதங்களின் முக்கியத்துவத்தை வலியுறுத்துகிறது. வேதங்கள் மனித வாழ்வின் ஆன்மிக மற்றும் தத்துவார்த்த வழிகாட்டுதல்களைக் கொண்டுள்ளன. இந்நாளில் வேதங்களைப் பயிலத் தொடங்குவது, அவற்றின் ஞானத்தை மீண்டும் நினைவூட்டுகிறது.
  • பூணூல் அணிவது என்பது ஒரு சடங்கு மட்டும் அல்ல. இது ஒரு ஒழுக்கமான மற்றும் அறநெறி சார்ந்த வாழ்க்கையை வாழ்வதற்கான ஒரு உறுதிமொழி ஆகும். ஒருவருக்குள் இருக்கும் நல்ல குணங்களையும், பொறுப்புகளையும் வளர்க்க உதவுகிறது.