IND Vs SL: சமனில் முடிந்த பரபரப்பான போட்டி.. சூப்பர் ஓவரில் இந்தியா வெற்றி.., இலங்கை போராடி தோல்வி..!
ஆசிய கோப்பை 2025 (Asia Cup 2025) சூப்பர் 4 சுற்றில் இந்தியா எதிர் இலங்கை அணிகள் மோதிய 18வது போட்டியில், சூப்பர் ஓவரில் இந்தியா வெற்றி பெற்றது.
செப்டம்பர் 27, துபாய் (Sports News): ஆசிய கோப்பை 2025 (Asia Cup 2025) டி20 கிரிக்கெட் தொடர், கடந்த செப்டம்பர் 09ஆம் தேதி ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடங்கியது. இத்தொடர், சோனி ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சி மற்றும் சோனி லிவ் ஓடிடி தளத்தில் நேரலையில் ஒளிபரப்பு செய்யப்படுகிறது. மொத்தம் 8 அணிகள் பங்கேற்ற இத்தொடரில், சூப்பர் 4 சுற்றுக்கு இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேச அணிகள் தகுதிபெற்றன. இதில், ஏற்கனவே இந்தியா - பாகிஸ்தான் அணிகள் செப்டம்பர் 28ஆம் தேதி துபாயில் நடைபெறும் இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்றுவிட்டன. IND Vs SL: இந்தியா அதிரடி பேட்டிங்.. அபிஷேக் சர்மா அதிரடியால் 202 ரன்கள் குவிப்பு..!
இந்தியா எதிர் இலங்கை (India Vs Sri Lanka):
இந்நிலையில், இன்று (செப்டம்பர் 26) சூப்பர் 4 சுற்றில் 18வது போட்டியில், இந்தியா - இலங்கை அணிகள் மோதின. இந்திய நேரப்படி இரவு 8 மணிக்கு தொடங்கிய இப்போட்டி, துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில், டாஸ் வென்ற இலங்கை அணியின் கேப்டன் சரித் அசலங்கா முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி, முதலில் களமிறங்கிய இந்தியா 20 ஓவர்களில் 5 விக்கெட்களை இழந்து 202 ரன்கள் அடித்தது. அதிகபட்சமாக அதிரடி தொடக்க வீரர் அபிஷேக் சர்மா 31 பந்தில் 61 ரன்களும், திலக் வர்மா 49*, சஞ்சு சாம்சன் 39 ரன்களும் அடித்தனர். இலங்கை சார்பில் தசுன் ஷனக்க, வனிந்து ஹசரங்க, துஷ்மந்த சமீர, மஹீஷ் தீக்ஷன, சரித் அசலங்கா ஆகியோர் தலா 1 விக்கெட்டை வீழ்த்தினர்.
சமனில் முடிந்த போட்டி:
இதனையடுத்து களமிறங்கிய இலங்கை அணிக்கு ஆரம்பத்திலேயே குசல் மெண்டிஸ் டக் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தார். இதன்பின்னர், பதும் நிஸ்ஸங்க - குசல் பெரேரா இணை அதிரடியாக விளையாடினர். குசல் பெரேரா 58 ரன்கள் அடித்து அவுட்டானார். அடுத்து வந்த சரித் அசலங்கா 5, கமிந்து மெண்டிஸ் 3 ரன்னில் விக்கெட்டை இழந்தனர். மறுபுறம், அதிரடியாக விளையாடி சதமடித்த பதும் நிஸ்ஸங்க 107 ரன்னில் அவுட்டானார். பரபரப்பான இறுதி ஓவரில் வெற்றிக்கு 12 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், 202-5 என போட்டி சமனில் முடிந்தது.
சூப்பர் ஓவர்:
சூப்பர் ஓவரில், இலங்கை அணி முதலில் களமிறங்கியது. முதல் பந்தில் குசல் பெரேரா டக் அவுட்டானார். இலங்கை அணி 5 பந்தில் 2 விக்கெட்டை இழந்து 2 ரன்கள் மட்டுமே அடித்தது. இதனையடுத்து, இந்திய அணிக்கு கேப்டன் சூர்யகுமார் யாதவ் - சுப்மன் கில் இணை களமிறங்கியது. சூப்பர் ஓவரின் முதல் பந்திலேயே 3 ரன்களை அடித்து இந்தியா வெற்றி பெற்றது.
இந்திய அணி வீரர்கள்:
அபிஷேக் சர்மா, சுப்மன் கில், சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), திலக் வர்மா, சஞ்சு சாம்சன், ஹர்திக் பாண்டியா, அக்சர் படேல், ஹர்ஷித் ராணா, குல்தீப் யாதவ், அர்ஷ்தீப் சிங், வருண் சக்ரவர்த்தி.
இலங்கை அணி வீரர்கள்:
பதும் நிஸ்ஸங்க, குசல் மெண்டிஸ், குசல் பெரேரா, சரித் அசலங்கா (கேப்டன்), ஜனித் லியனகே, கமிந்து மெண்டிஸ், தசுன் ஷனக்க, வனிந்து ஹசரங்க, துஷ்மந்த சமீர, மஹீஷ் தீக்ஷன, நுவன் துஷார.
(The above story first appeared on LatestLY on Sep 27, 2025 12:36 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

