
ஜூன் 25, திருநெல்வேலி (Sports News): தமிழ்நாடு பிரீமியர் லீக் (TNPL 2025) கிரிக்கெட் தொடரின், 9வது சீசன் கடந்த ஜூன் 05ஆம் தேதி கோலாகலமாக தொடங்கியது. நடப்பு தொடரின், முதல் சுற்று லீக் ஆட்டங்கள் கோவையிலும், 2வது சுற்று லீக் ஆட்டங்கள் சேலத்திலும் நடைபெற்று முடிந்தன. தற்போது, இறுதிகட்டத்தை எட்டியுள்ள நிலையில், 3வது சுற்று லீக் ஆட்டங்கள் திருநெல்வேலியில் இந்தியன் சிமெண்ட் கம்பெனி மைதானத்தில் நடைபெறுகிறது. அனைத்து போட்டிகளும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 1 மற்றும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 1 தமிழ் தொலைக்காட்சி (TNPL Live Watching) மற்றும் ஃபேன்கோடு (Fancode) என்ற இணையதளத்திலும், மொபைல் செயலியிலும் பார்க்கலாம். இந்நிலையில், இன்று (ஜூன் 25) திருச்சி கிராண்ட் சோழஸ் - சீசெம் மதுரை பாந்தர்ஸ் (TGC Vs SMP, Match 23) அணிகள் மோதின. TGC Vs SMP: திருச்சி அணி அபார பந்துவீச்சு.. வெற்றி பெற 132 ரன்கள் இலக்கு..!
திருச்சி கிராண்ட் சோழஸ் எதிர் சீசெம் மதுரை பாந்தர்ஸ் (Trichy Grand Cholas Vs Siechem Madurai Panthers):
ஜெயராமன் சுரேஷ் குமார் தலைமையிலான திருச்சி அணி, என்.எஸ்.சதுர்வேத் தலைமையிலான மதுரை அணியை எதிர்கொண்டது. நடப்பு தொடரில், திருச்சி அணி 5 போட்டிகளில் விளையாடி 1 போட்டியில் மட்டுமே வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் 7வது இடத்தில் உள்ளது. மதுரை அணி 5 போட்டிகளில் விளையாடி 2 போட்டிகளில் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் 6வது இடத்தில் உள்ளது. இப்போட்டியில், டாஸ் வென்ற திருச்சி அணியின் கேப்டன் ஜெயராமன் சுரேஷ் குமார் முதலில் பவுலிங்கை தேர்வு செய்தார்.
மதுரை அணி சொதப்பல்:
அதன்படி, முதலில் களமிறங்கிய மதுரை அணிக்கு தொடக்க வரிசை வீரர்கள் ராம் அரவிந்த் 14, பால்சந்தர் அனிருத் 7, அஜய் சேத்தன் 0, கேப்டன் என்.எஸ்.சதுர்வேத் 4 ரன்கள் என சொற்ப ரன்களில் விக்கெட்டை இழந்தனர். ஒருபுறம் நிதானமாக விளையாடிய அதீக் உர் ரஹ்மான் 32 பந்துகளில் 30 ரன்கள் அடித்து அவுட்டானார். இறுதியில், மதுரை அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்களை இழந்து 131 ரன்கள் அடித்தது. அதிகபட்சமாக சி.சரத்குமார் 37* ரன்கள் அடித்தார். திருச்சி அணி தரப்பில் கே ஈஸ்வரன், அதிசயராஜ் டேவிட்சன், சரவண குமார் தலா 2 விக்கெட்களை வீழ்த்தினர்.
திருச்சி அணி வெற்றி:
இதனையடுத்து, திருச்சி அணி 132 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை துரத்தியது. திருச்சி அணி 18.1 ஓவர்களில் 6 விக்கெட்டை இழந்து 137 ரன்கள் அடித்தது. இதன்மூலம், 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதிகபட்சமாக கேப்டன் சுரேஷ் குமார் 44, ராஜ்குமார் 37* ரன்கள் அடித்தனர். மதுரை அணி தரப்பில் தாமரைக்கண்ணன், கார்த்திக் மெய்யப்பன் தலா 2, குர்ஜப்னீத் சிங், சரவணன் தலா 1 விக்கெட்களை வீழ்த்தினர்.