VIJAY (Photo Credit: @tvkvijayhq X)

மார்ச் 08, சென்னை (Chennai): நடிகர் விஜய் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்ந்து வருகிறார். இவர் நடிப்பில் கடைசியாக வெளியான லியோ படம் 600 கோடிக்கு மேல் வசூல் செய்து மிகப் பெரிய சாதனை படைத்தது. தொடர்ந்து தற்போது இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் யுவன் சங்கர் ராஜா இசையில் ஒரு படம் நடித்து வருகிறார். இந்நிலையில் நடிகர் விஜய் அரசியல் கட்சி தொடங்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அவர் நீண்ட காலமாகவே அரசியலில் குதிப்பதற்கான பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தார். ஆரம்பத்தில் அரசியல் சம்பந்தப்பட்ட படங்களில் அதிகமாக நடித்தார்.

தொடர்ந்து பல சர்ச்சைகளிலும் சிக்கி வருகிறார். அதுமட்டுமின்றி 10, 12 ஆம் வகுப்பில் சிறந்து விளங்கிய மாணவர்களுக்கு பாராட்டு விழா நடத்தினார். அது போல் அம்பேத்கர், காமராஜரை படியுங்கள் என்றார். மேலும் காசுக்காக ஓட்டு போடாதீர்கள் என்றும் காசுக்காக ஓட்டு போடக் கூடாது என உங்கள் பெற்றோருக்கு நீங்கள் அறிவுறுத்துங்கள் என்றும் விஜய் அந்த விழாவில் கேட்டுக் கொண்டார்.

தமிழக வெற்றிக் கழகம்: இந்த நிலையில்தான் நடிகர் விஜய் கடந்த சில நாட்களுக்கு முன்பு பனையூரில் மக்கள் இயக்க நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனை கூட்டத்தில் சென்னை, கோவை, திருச்சி, மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து 200 க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் சென்றனர். அப்போதே அவர் இன்னும் ஒரு மாதத்தில் கட்சி தொடங்குவதற்கான அறிவிப்பை வெளியிடுவார் என்று பலர் கூறினர். தொடர்ந்து, நடிகர் விஜய் கட்சி தமிழக வெற்றிக் கழகம் (VIJAY MAKKAL IYAKKAM) என்று கட்சி தொடங்கினார். Women's Day 2024: இன்று சர்வதேச மகளிர் தினம்... ஏன் கொண்டாடப்படுகிறது?

விஜய் வெளியிட்ட வீடியோ: இந்நிலையில் நடிகர் விஜய் தனது தமிழக வெற்றிக் கழகம் கட்சியில் உறுப்பினராக சேர அழைப்பு விடுத்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். கட்சியின் அதிகாரபூர்வ எக்ஸ் தள பக்கத்தில் அந்த வீடியோ பதிவிடப்பட்டுள்ளது. அவர் பேசியிருக்கும் வீடியோவில், “இது எங்களுடைய ஐடி கார்டு. தமிழக வெற்றிக் கழகத்தின் உறுப்பினர் அட்டை. நான் எடுத்துக்கொண்டேன். பிறப்புக்கும் எல்லா உயிர்க்கும் என்ற அடிப்படை சமத்துவ கொள்கையை பின்பற்றி, வரப்போகும் சட்டமன்ற தேர்தலை நோக்கி, என்னுடைய பயணத்தில் இணைந்து மக்கள் பணி செய்ய, நாங்கள் ஏற்கனவே வெளியிட்ட கட்சியின் உறுதிமொழியை படியுங்கள். உங்களுக்கு பிடித்திருந்தால், நீங்கள் விருப்பப்பட்டால் உறுப்பினராக சேருங்கள்” என தெரிவித்துள்ளார்.

மேலும் விஜய் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- தமிழ்நாட்டு மக்களின் வெற்றிக்கான நமது பயணத்தில், தோழர்களாக இணைந்து மக்கள் பணி செய்ய விரும்பினால் நமது கட்சியின் உறுதிமொழியைப் படித்துவிட்டு, கீழே உள்ள உறுப்பினர் சேர்க்கை QR-Code இணைப்புகளைப் பயன்படுத்தி, மிகவும் எளிய முறையில் உறுப்பினர் அட்டையை உடனடியாகப் பெற்றுக்கொள்ளலாம் அன்புடன், விஜய், இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

முன்னதாக விஜய் உறுதி மொழி ஒன்றையும் வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:- பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்! நமது நாட்டின் விடுதலைக்காகவும், நமது மக்களின் உரிமைகளுக்காகவும் தமிழ் மண்ணில் இருந்து தீரத்துடன் போராடி உயிர் நீத்த எண்ணற்ற வீரர்களின் தியாகத்தை எப்போதும் போற்றுவேன். நமது அன்னைத் தமிழ் மொழியைக் காக்க உயிர்த்தியாகம் செய்த மொழிப்போர் தியாகிகளின் இலக்கை நிறைவேற்றும் வகையில் தொடர்ந்து பாடுபடுவேன். இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் மீதும், இறையாண்மை மீதும் நம்பிக்கை வைத்து, அனைவருடன் ஒற்றுமை.

சகோதரத்துவம், மதநல்லிணக்கம், சமத்துவம் ஆகியவற்றைப் பேணிக்காக்கின்ற பொறுப்புள்ள தனிமனிதராகச் செயல்படுவேன். மக்களாட்சி, மதச்சார்பின்மை, சமூக நீதிப் பாதையில் பயணித்து, என்றும் மக்கள் நலச் சேவகராகக் கடமை ஆற்றுவேன் என உறுதி அளிக்கின்றேன். சாதி, மதம், பாலினம், பிறந்த இடம் ஆகியவற்றின் பெயரில் உள்ள வேற்றுமைகளைக் களைந்து, மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி, அனைவருக்கும் சம வாய்ப்பு, சம உரிமை கிடைக்கப் பாடுபடுவேன். பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற சமத்துவக் கொள்கையை கடைப்பிடிப்பேன் என்று உளமார உறுதி கூறுகின்றேன். இவ்வாறு அதில் விஜய் கூறியுள்ளார்.