Tamilnadu Rains File Pic (Photo Credit : @ETVBharatTN X)

அக்டோபர் 07, நுங்கம்பாக்கம் (Chennai News): வடதமிழகத்தில் ஒருசில இடங்களிலும், தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் மழை பெய்துள்ளது. புதுவையில் வறண்ட வானிலை நிலவியது. நேற்று மத்தியமேற்கு மற்றும் அதனை ஒட்டிய வடமேற்கு அரபிக்கடல் பகுதிகளில் நிலவிய "சக்தி" புயல், நேற்று நள்ளிரவு 23:30 மணி அளவில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுகுறைந்து அதே பகுதிகளில் நிலவியது. இன்று மேலும் தென்கிழக்கு திசையில் நகர்ந்து மேலும் வலுகுறைந்து காலை 08:30 மணி அளவில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக அதே பகுதிகளில் நிலவுகிறது. இது துவாரகாவிலிருந்து (குஜராத்) மேற்கு-தென்மேற்கே சுமார் 970 கிலோ மீட்டர் தொலைவில் நிலைக்கொண்டுள்ளது. இது மேலும் தென்கிழக்கே மத்தியமேற்கு மற்றும் அதனை ஒட்டிய வடமேற்கு அரபிக்கடல் பகுதிகளில் நகர்ந்து வலுவிழக்க கூடும். தென்மேற்கு வங்ககடலில் தமிழக கடலோர பகுதிகளுக்கு அப்பால் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.

இன்றைய வானிலை (Today Weather):

தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இன்று தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஒரிரு இடங்களில் பலத்த தரைக்காற்று மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். தேனி, திண்டுக்கல், விருதுநகர், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, திருச்சிராப்பள்ளி, சேலம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் கனமழை பெய்யவாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிக்கையில் தெரிவித்திருந்தது. நாளைய வானிலை: அடுத்த 6 நாட்களுக்கு மிரட்டப்போகும் கனமழை.. இன்றைய, நாளைய வானிலை நிலவரம்.!

இரவு 7 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள்:

இந்நிலையில் தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு 24 மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, சென்னை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர், சேலம், நாமக்கல், கரூர், அரியலூர், பெரம்பலூர், திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, ராமநாதபுரம், திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மாவட்ட மலைப்பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

சென்னை வானிலை (Chennai Weather):

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பை பொறுத்தவரையில், இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.