Muhammad Deif (Photo Credit: @manniefabian X)

ஆகஸ்ட் 01, காசா (World News): இஸ்ரேல்-ஹமாஸ் இடையிலான போர் (Israel Hamas War) கடந்தாண்டு அக்டோபரிலிருந்து நடந்து வருகிறது. இந்த போரில் காசா தரப்பில் இதுவரை சுமார் 39 ஆயிரம் பேர் பலியாகி உள்ளனர். இதற்கிடையே போரை நிறுத்துவது குறித்த பேச்சுவார்த்தைக்கு வருமாறு இஸ்ரேலுக்கு அமெரிக்கா அழைப்பு விடுத்திருந்தது. ஆனால் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அதனை நிராகரித்து விட்டார். மேலும் 14 இலட்சத்துக்கும் அதிகமான பாலஸ்தீன மக்கள் ரஃபாவில் தஞ்சமடைந்தனர்.

ரஃபா தாக்குதல்: அதனைத் தொடர்ந்து இஸ்ரேல் தெற்கு காசாவின் ரஃபா பகுதியில் தான் தாக்குதல் நடத்தியது. தெற்கு காசாவில் உள்ள ரஃபா நகரத்தில் தற்காலிக முகாம்கள் மீது இஸ்ரேல் படைகள் மே 26 ஆம் தேதி குண்டு வீசி தாக்குதல் நடத்தின. இதில், பெண்கள், குழந்தைகள் உட்பட 45 பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டதாகவும், 249 பேர் காயமடைந்ததாகவும் காசாவில் உள்ள சுகாதார அமைச்சகம் தெரிவித்தது. இஸ்ரேலின் இந்த தாக்குதலுக்கு உலக நாடுகள் அனைத்தும் கண்டனம் தெரிவித்தன.

பசியால் இறக்கும் குழந்தைகள்: அதுமட்டுமின்றி ஐ.நா வல்லுநர்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தும் தகவலைத் தெரிவித்துள்ளனர். அதாவது கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் முதல் இதுவரை சுமார் 34 பாலஸ்தீனியர்கள் பட்டினியால் உயிரிழந்துள்ளனர். இதில் பெரும்பாலானவர்கள் குழந்தைகள் என தெரிவித்துள்ளனர். மேலும் ஊட்டச்சத்து குறைபாட்டால் பல குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். Putin Condoles Wayanad Landslide Deaths: வயநாடு நிலச்சரிவு மரணங்கள்; ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் இரங்கல்.!

ஹமாஸின் ராணுவத் தலைவர் முகமது டெய்ஃப்: இதனிடையே ஹமாஸ் ஆயுதக்குழுவின் தலைவரான இஸ்மாயில் ஹனியே கொல்லப்பட்டதாக, ஈரான் நாட்டின் ராணுவ புரட்சிகரப் படைப்பிரிவு அதிகாரிகள் உறுதிப்படுத்தினர். அவரது படுகொலைக்கு இஸ்ரேலை பழிவாங்குவோம் என ஈரான் தெரிவித்துள்ளது. இந்த நிலையில், இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஹமாஸ் ராணுவ தளபதி முகமது டெய்ஃப் (Hamas Military Leader Muhammad Deif) படுகொலை செய்யப்பட்டதாக இஸ்ரேல் பாதுகாப்பு படை தெரிவித்துள்ளது.

கடந்த ஆண்டு அக்டோபர் 7ஆம் தேதி இஸ்ரேல் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட முகமது டெய்ஃப், ஹமாஸின் ஆயுதப் பிரிவான Ezzedine al-Qassam படைப்பிரிவின் தலைவராக இருந்துள்ளார். பல ஆண்டுகளாக அவர் இஸ்ரேலின் மிகவும் தேடப்படும் நபர்களில் ஒருவராக இருந்தார்.