ஜூன் 08, டெல்லி (Delhi News): இந்தியாவில் கடந்த சில ஆண்டுகளாகவே போதைப்பொருள் கடத்தல் விவகாரம் என்பது பெரும் அச்சுறுத்தலாக ஏற்பட்டிருக்கிறது. குஜராத், சென்னை, கேரளா, ஆந்திரா, மேற்குவங்கம், அசாம், மணிபூர் ஆகிய மாநிலங்களில் போதைப்பொருள் கடத்தல் செயலில் ஈடுபடுவோர் கும்பலாக கைது செய்யப்படுவதும், அவர்களிடம் இருந்து பல கோடிக்கணக்கான தொகை மதிப்பிலான போதை வஸ்துக்கள் பறிமுதல் செய்யப்படுவதும் தொடருகிறது‌. இவ்வாறான கும்பல் புதுப்புது வழியில் போதை பொருட்களை கடத்தினாலும், அதனை அதிகாரிகள் கண்டறிந்து சட்டவிரவாத கும்பலை கைது செய்து அவர்களின் முயற்சியை முறியடித்து வருகின்றனர்‌. எனினும், போதைப்பொருள் விற்பனை தொடர்கிறது.

நைஜுரிய நாட்டவர் இருவர் கைது: இந்த நிலையில், டெல்லி காவல்துறையினர் சட்ட விரோதமாக டெல்லியில் தங்கி இருந்து போதைப்பொருள் விற்பனையை முன்னெடுத்த இரண்டு நைஜீரியர்களை கைது செய்துள்ளனர். இவர்கள் இருவரிடமும் நடந்த ஆய்வில், இருவரும் சர்வதேச அளவிலான போதைப்பொருள் கடத்தல் கும்பலுடன் தொடர்பு வைத்திருந்ததும், இந்தியாவுக்குள் அதனை கொண்டு வருவதில் முக்கிய புள்ளிகளாகவும் திகழ்ந்தது அம்பலமாகியுள்ளது. போலியான பாஸ்போர்ட் கொண்டு இவர்கள் இந்தியாவுக்குள் நுழைந்து போதைப்பொருள் சார்ந்த விற்பனையை முன்னெடுத்து இருக்கின்றனர். இவர்கள் இருவரிடம் தற்போது காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.