இஸ்ரேல் - ஈரான் போர்; ஈரானில் இருந்து இந்தியர்கள் வெளியேற்றம் - வெளியுறவுத் துறை அறிவிப்பு..!
ஈரானில் நிலவும் போர் பதற்றம் காரணமாக, அங்குள்ள இந்தியர்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டதாக இந்திய வெளியுறவுத் துறை அறிவித்துள்ளது.
ஜூன் 18, டெல்லி (Delhi News): உலக நாடுகளின் கண்டனத்தை மீறி இஸ்ரேல் ராணுவம் ஈரான் மீது தொடர் தாக்குதல் நடத்தி வருகிறது. ஹமாஸ் அமைப்புக்கு உதவி செய்வதாக ஈரான், லெபனான் நாட்டிலும் தாக்குதல்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. ஈரான் நாடு அணு ஆயுதம் தங்களிடம் இருப்பதாக தொடர்ந்து மிரட்டல் விடுத்து, அச்சுறுத்தலை வெளிபடுத்தி வந்தது. இந்நிலையில், கடந்த ஜூன் 13ஆம் தேதி இஸ்ரேல் இராணுவம் ஈரானின் (Israel Strikes Iran) 8 நகரங்களை குறிவைத்து வான்வழி தாக்குதலை நடத்தியது. இந்த தாக்குதலில் ஈரானின் முப்படை தளபதி உட்பட பலரும் இறந்தனர். ஈரானில் உள்ள அணு ஆயுத மையம், அதனை உற்பத்தி செய்யும் இடங்கள், அணு ஆயுத பணியில் ஈடுபட்டு வந்தவர்களை குறிவைத்து தாக்குதல்கள் நடந்ததாகவும் கூறப்படுகிறது. இந்த தாக்குதலுக்கு பின்னணியில் அமெரிக்கா இருப்பதாக ஈரான் தெரிவித்தது. ஆனால், இஸ்ரேல் தன்னிச்சையாக நடத்தும் தாக்குதலுக்கு அமெரிக்கா பொறுப்பேற்காது. இந்த தாக்குதலுக்கும் அமெரிக்காவுக்கும் தொடர்பு இல்லை என திட்டவட்டமாக கூறியது. Iran Strikes Tel Aviv: இஸ்ரேல் தலைநகரில் உச்சகட்ட பதற்றம்.. ஈரான் பதிலடி தாக்குதல்.. போர் பதற்றம்.!
இஸ்ரேல் - ஈரான் போர் (Israel - Iran War):
இந்நிலையில், ஈரானின் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு பதிலடியாக இஸ்ரேலின் டெல் அவிவ் நகரம் மீது ஈரான் தாக்குதலை (Iran Strikes Israel) முன்னெடுத்துள்ளது. இதனால் மத்திய கிழக்கு நாடுகளில் போர் பதற்றம் மேலும் அதிகரித்துள்ளது. இதனால் இஸ்ரேலில் உள்ள இந்தியர்கள் கவனமாக இருக்குமாறு ஏற்கனவே இந்திய அரசு சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், ஈரானில் இருந்து இந்திய மாணவர்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டதாக இந்திய வெளியுறவுத் துறை தெரிவித்துள்ளது. ஈரானில் இந்தியாவை சேர்ந்த, 10,000க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர்.
இந்தியர்கள் வெளியேற்றம்:
ஈரான் தலைநகர் டெஹ்ரானில் உள்ள ஏராளமான இந்திய மாணவர்கள், இந்திய துாதரகத்தின் உதவியால் அங்கிருந்து பாதுகாப்பாக வெளியேறியதாக வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. தொடர்ந்து, அவர்களுடன் இந்திய துாதரக அதிகாரிகள் தொடர்பில் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், டெஹ்ரானில் வசிக்கும் இந்தியர்கள் மற்றும் இந்திய வம்சாவளியினர் உடனடியாக பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
(The above story first appeared on LatestLY on Jun 18, 2025 11:23 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

