Ariyalur News: குழந்தையின் காதை கிழித்துவிட்டு, இன்ஸ்டா காதலனுடன் கம்பி நீட்டிய காதலி.. அரியலூரில் பரபரப்பு.!

அரியலூர் மாவட்டம் கீழப்பழுவூரில் காதலியை மீட்க நண்பர்களுடன் வாடகை காரில் சென்று சாகசம் செய்த இளைஞர், சினிமா பட பாணியில் காதலியுடன் கம்பி நீட்டினார்.

Ariyalur News: குழந்தையின் காதை கிழித்துவிட்டு, இன்ஸ்டா காதலனுடன் கம்பி நீட்டிய காதலி.. அரியலூரில் பரபரப்பு.!
Ariyalur Couple Runs Away in Car (Photo Credit : Youtube)

ஆகஸ்ட் 10, அரியலூர் (Ariyalur News): அரியலூர் மாவட்டத்தில் உள்ள கீழப்பழுவூர், செங்கராயன் கட்டளை கிராமத்தில் வசித்து வருபவர் மதியழகன். இவரது மகள் அனுசியா சென்னை கிளம்பாக்கத்தில் உள்ள மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றி வருகிறார். இவருக்கும் புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த குமரேசன் என்பவருக்கும் இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கமானது காதலாக மலர்ந்துள்ளது. குமரேசன் சிங்கப்பூரில் வேலை செய்து வந்த நிலையில், கடந்து சில வாரங்களுக்கு முன்னதாக இருவரும் நேரில் சந்தித்துள்ளனர்.

காதலனுடன் சென்ற காதலி :

இதனைத் தொடர்ந்து காதலி அனுசியாவை குமரேசன் தனது பெற்றோரிடம் அறிமுகப்படுத்தவே, அவர்கள் காதலை ஏற்க மறுத்துள்ளனர். இதனால் திருச்சியில் உள்ள தனியார் விடுதியில் சில நாட்கள் இருவரும் தங்கியுள்ளனர். இது குறித்து இளைஞரின் பெற்றோருக்கு தெரியவரவே, இளம்பெண்ணின் பெற்றோருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதனால் ஆத்திரமடைந்தவர்கள் திருச்சி சென்று அனுசியாவை வீட்டிற்கு அழைத்து வந்துள்ளனர். வானிலை: தமிழகத்தில் இடி, மின்னலுடன் வெளுத்துவாங்கும் கனமழை.. சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு.! 

காதலனுக்கு ரகசிய தகவல் :

இதனை அடுத்து அவரது செல்போனையும் பிடுங்கி வைத்துக் கொண்டு காதலை கைவிட வற்புறுத்தியுள்ளனர். மேலும் அனுசியாவின் மூத்த சகோதரி வீட்டில் அவரை கடந்த 10 நாட்களாக தங்க வைத்த நிலையில், இது தொடர்பாக காதலனுக்கு செல்போன் மூலம் அனுசியா ரகசிய தகவல் அளித்துள்ளார். இந்த தகவலை அறிந்த காதலன் உடனடியாக தனது நண்பர்களுடன் வாடகை கார் மூலம் அங்கு சென்றுள்ளார்.

சினிமா பட பாணியில் காதலியை மீட்க சாகசம் :

தெருமுனையில் காரை நிறுத்தியவர்கள் வீட்டிற்கு திருமண அழைப்பிதழ் கொடுப்பது போல மஞ்சள் பையுடன் சென்று நண்பரின் காதலியை மீட்டு காதலனுடன் சேர்த்து வைத்துள்ளனர். இதனை கண்ட அவரது சகோதரி ஐஸ்வர்யா உடனடியாக கூச்சலிட்டு கதறிய நிலையில், தனது குழந்தையுடன் தங்கையை மீட்க சென்றுள்ளார். அப்போது கூட்டம் கூடவே, இளைஞர்கள் கையில் வைத்திருந்த கத்தியை வைத்து மிரட்டியுள்ளனர். இதில் குழந்தையின் காது பகுதியில் கத்தி பட்டு காயம் ஏற்பட்டது.

குழந்தையின் காதில் கத்தியால் கிழித்து கம்பி நீட்டிய காதல் ஜோடி :

இதனை வாய்ப்பாக பயன்படுத்தி கும்பல் காருடன் கம்பி நீட்டியது. குழந்தை கதறி அழுவதை கண்ட அருகில் இருந்தவர்கள் தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து காவல்துறையினருக்கும் தகவல் தெரிவிக்கவே, சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் தப்பி சென்ற காதல் ஜோடியை தேடி வருகின்றனர். காதல் ஜோடி காரில் தப்பித்தது தொடர்பாக அருகில் இருந்தவர்கள் எடுத்த வீடியோ தற்போது இணையதளங்களில் வெளியாகி பதற்றத்தை உண்டாக்கியுள்ளது.

(The above story first appeared on LatestLY on Aug 10, 2025 03:46 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).