ஆகஸ்ட் 07, திருப்பூர் (Tiruppur News): திருப்பூர் மாவட்டத்தில் தொழிலதிபர் மகள் ரிதன்யா வரதட்சணை கொடுமை காரணமாக தற்கொலை செய்ததன் தாக்கம் தற்போது வரை குறையவில்லை. இந்த சம்பவம் தமிழ்நாட்டையே மிகப்பெரிய அளவில் உலுக்கிய நிலையில், இப்போது அடுத்த சோகம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. திருமணமான 10 மாதத்தில் இளம்பெண் வரதட்சணை கொடுமையால் உயிரிழந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டம் பிரண்ட்ஸ் கார்டன் பகுதியில் வசித்து வந்தவர் ப்ரீத்தி. ஈரோடு பகுதியைச் சேர்ந்தவர் சதீஷ்வர். இவர்கள் இருவருக்கும் திருமணம் செய்ய பெற்றோரால் நிச்சயிக்கப்பட்டு கடந்த 2024ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 15ஆம் தேதி திருமணம் நடைபெற்று முடிந்தது.
120 சவரன் நகை, ரூ.25 லட்சம் ரொக்கம், இன்னோவா கார் வரதட்சணை :
திருமணத்தின் போது பெண் வீட்டார் சார்பில் மணமகனுக்கு 120 சவரன் நகைகள், ரூ.25 லட்சம் ரொக்கம், ரூ.38 லட்சம் மதிப்புள்ள இனோவா கார் போன்றவை வரதட்சணையாக கொடுக்கப்பட்டுள்ளது. பெண் வீட்டார் செலவில் மணமகனுக்கு சீர்வரிசையாக கொடுக்கப்பட்டது மட்டுமே ரூ.1.5 கோடி, இதை தவிர்த்து மண்டப செலவு, உடை , சமையல் , இன்னும் பிற செலவுகள் என சேர்த்தால் அதன் மதிப்பும் ரூ.50 லட்சம் வரை தொடலாம். ஆகவே திருமண செலவு மட்டும் ரூ.2 கோடி ஆகிய நிலையில், இதெல்லாம் போதாது என கூடுதலாக ரூ.50 லட்சம் பணம் கேட்டு கொடுமை நடந்துள்ளது.
ரூ.50 லட்சம் பணம் கேட்டு கொடுமை :
சமீபத்தில் ப்ரீத்தியின் பூர்வீக சொத்து ஒன்றை விற்பனை செய்த நிலையில், அந்த பணத்தில் ரூ.50 லட்சம் பணம் கேட்டு வாங்கி வருமாறு பிரீத்தியின் கணவர் மற்றும் அவரது குடும்பத்தினர் கொடுமைப்படுத்தி உள்ளனர். இதனால் கடந்த ஒரு மாதமாகவே ப்ரீத்தி கடுமையான மன உளைச்சலில் இருந்து வந்த நிலையில், குடும்பத்தினரிடம் இதனை தெரிவித்து கலங்கி இருக்கிறார். இதனிடையே வீட்டில் தனியாக இருந்தவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். "இனிமே யாருக்காக நான் வாழனும்" - காதலன் இறந்த அதே தேதியில் உயிரை மாய்த்த காதலி.. கன்னியாகுமரியில் சோகம்.!
திருமணமான 10 மாதத்தில் இளம்பெண் தற்கொலை :
இதனால் பெண்ணின் உறவினர்கள் நேற்று சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில், இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த நல்லூர் போலீசார் பிரீத்தியின் கணவர் சதீஸ்வர், மாமனார் விஜயகுமார் மற்றும் மாமியார் உமாவை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். வரதட்சணை கொடுமையால் சமீப காலமாக நிகழும் மரணங்கள் அதிகரித்துள்ளதால் இதற்கு விரைவில் ஒரு முற்றுப்புள்ளி வைக்க அரசு ஏதேனும் செய்ய வேண்டும் என மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
தற்கொலை தடுப்பு மற்றும் மனநல உதவி எண்கள்:
டெலி மனாஸ் (Tele Manas) சுகாதார அமைச்சகம் - 14416 அல்லது 1800 891 4416; நிம்ஹான்ஸ் (NIMHANS) + 91 80 26995000 / 5100 / 5200 / 5300 / 5400; பீக் மைண்ட் (Peak Mind) - 080 456 87786; வந்த்ரேவாலா அறக்கட்டளை - 9999 666 555; அர்பிதா தற்கொலை தடுப்பு உதவி எண் - 080-23655557; iCALL - 022-25521111 மற்றும் 9152987821; COOJ மனநல அறக்கட்டளை - 0832-2252525, தற்கொலை தடுப்பு மையம் கோயம்புத்தூர் - 0422-2300999, சினேகா தற்கொலை தடுப்பு மையம் சென்னை - +91 44 2464 0060 மற்றும் +91 44 2464 0050..