Tomorrow weather (Photo Credit: LatestLY)

செப்டம்பர் 25, நுங்கம்பாக்கம் (Chennai News): வானிலையில் (Weather) கடந்த 24 மணி நேரத்தில் நிலவிய மாற்றத்தை பொறுத்தவரையில், தமிழகத்தில் ஒரு சில இடங்களில், வட தமிழகத்தில் ஒரு சில இடங்களில், தென்தமிழகத்தில் ஒரு சில இடங்களில், புதுவையில் மழை பெய்துள்ளது. காரைக்கால் பகுதியில் வறண்ட வானிலை நிலவியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் கடலூர், காவேரிப்பாக்கம், மதுராந்தகம், குன்றத்தூர், கொளத்தூர், தாம்பரம், மதுரவாயல், சோழவரம், நீலகிரி, திருத்தணி, அவலூர்பேட்டை, அரக்கோணம், பந்தலூர், மரக்காணம், பண்ருட்டி, காஞ்சிபுரம், வால்பாறை ஆகிய இடங்களில் மழை பெய்துள்ளது. அதிகபட்ச வெப்பநிலையாக மதுரை விமான நிலையத்தில் 40.6 டிகிரி செல்சியசும், குறைந்தபட்ச வெப்பநிலையாக ஈரோட்டில் 19.6 டிகிரி செல்சியசும் பதிவாகியுள்ளது.

வரும் 7 நாட்களுக்கு வானிலை தமிழ்நாட்டில் எப்படி?

அடுத்த ஏழு நாட்களுக்கான வானிலை முன்னறிவிப்பு மற்றும் எச்சரிக்கையை பொறுத்தவரையில், மேற்கு திசைக் காற்றின் வேக மாறுபாடு காரணமாக 25ஆம் தேதி முதல் ஒன்றாம் தேதி வரை, வடதமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், தென்தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுச்சேரி-காரைக்கால் பகுதிகளிலும் இடி-மின்னலுடன் கூடிய லேசான மழை முதல் மிதமான மழை பெய்யலாம். தமிழகத்தில் அடுத்த இரண்டு நாட்களுக்கு அதிகபட்ச வெப்பநிலை ஒருசில இடங்களில் இரண்டு டிகிரி முதல் நான்கு டிகிரி வரை வெப்பம் அதிகமாக இருக்கக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை மற்றும் ஈரப்பதம் காரணமாக அசௌகரியம் ஏற்படலாம். பாரா ஒலிம்பிக் போட்டியில் பதக்கம்; தமிழக வீரர்களுக்கு ரூ.5 கோடி வழங்கி கௌரவித்த தமிழ்நாடு முதல்வர் மு.க ஸ்டாலின்.! 

தலைநகர் சென்னையின் வானிலை:

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை (Chennai Weather Update) முன்னறிவிப்பை பொறுத்தவரையில், அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலையாக 35 டிகிரி செல்சியசும், குறைந்தபட்ச வெப்பநிலையாக 27 டிகிரி செல்சியசும் பதிவாகலாம்.

மீனவர்களுக்கான அறிவுறுத்தல்:

மீனவர்களுக்கான எச்சரிக்கையாக 25ஆம் தேதி முதல் 28ஆம் தேதி வரையில் மன்னார் வளைகுடா, தென் தமிழக கடலோரப்பகுதி, தெற்கு வங்கக்கடல், மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய வட மேற்கு வங்கக்கடல், தெற்கு மற்றும் மத்திய வங்கக் கடல், வடக்கு ஆந்திர கடலோரப்பகுதி ஆகிய இடங்களில் சூறாவளிக்காற்று 35 கிலோமீட்டர் வேகம் முதல் 45 கிலோமீட்டர் வேகம் வரை, இடையிலேயே 55 கிலோமீட்டர் வேகம் வரையிலும் வீசலாம். அரபிக்கடலைப் பொறுத்தவரையில் 25ஆம் தேதி முதல் 29ஆம் தேதி வரை தென்மேற்கு அரபிக்கடல், தென்மேற்கு அரபிக்கடலின் மேற்கு பகுதிகள், கேரள-கர்நாடக மாநில கடலோரப்பகுதி, லட்சத்தீவு கடலோரப்பகுதி ஆகிய இடங்களில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 கிலோமீட்டர் வேகம் முதல் 55 கிலோமீட்டர் வரை வேகத்திலும், இடையிடையே 65 கிலோமீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்பதால், இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று வானிலை ஆய்வு மையத்தின் சார்பில் எச்சரிக்கப்படுகிறது.