
ஜூன் 29, சென்னை (Chennai News): ஒவ்வொரு மாதமும் அரசின் சார்பில் புதிய உத்தரவுகள் அமல்படுத்தப்படும். முன்னதாகவே அறிவிக்கப்பட்ட உத்தரவுகள் மாதத்தின் தொடக்கத்தில் அல்லது மத்திய பகுதியில் மக்களின் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும். அந்த வகையில், ஜூலை 2025ல் செயல்படுத்தப்படும் புதிய நடைமுறைகள் குறித்து இப்பதிவில் விரிவாக காணலாம்.
பான் கார்டுடன் ஆதார் இணைப்பு (Pan Card - Aadhar Card Link) :
ஜூலை 1 முதல் அமலாகும் உத்தரவுகளில் பான் கார்டு விதியும் அடங்கும். முன்னதாகவே ஆதார் மற்றும் பான் கார்டு இரண்டும் இணைக்கப்பட்டிருப்பது அவசியம் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இதனை இணைப்பதற்கு 31 டிசம்பர் 2025 வரை அவகாசமும் அளிக்கப்பட்டுள்ளது. இதனால் இனி பான் கார்டுக்கு விண்ணப்பிக்க ஆதார் கட்டாயம் என ஜூலை 1 முதல் மத்திய நேரடி வரி வாரியம் செயல்படுத்த இருக்கிறது.
உயரும் ரயில் கட்டணம் (Train Ticket Price) :
ஜூலை 1 ஆம் தேதி முதல் விரைவு ரயில்களில் கட்டணத்தை உயர்த்த மத்திய ரயில்வே முடிவு செய்துள்ளது. ஏசி அல்லாத விரைவு ரயில்களில், ஒரு கிலோ மீட்டர் கட்டணத்துக்கு 1 பைசா வீதம் உயர்த்த திட்டமிடப்பட்டுள்ளது. ஏசி விரைவு ரயில்களில் 2 பைசா வீதமும் டிக்கெட் கட்டணம் உயர்த்தப்படுகிறது.
தட்கல் புக்கிங் (Tatkal Ticket Booking Rules) :
ரயில்களில் அவசர காலத்தில் தட்கல் டிக்கெட் புக் செய்ய ஜூலை 1 ஆம் தேதி முதல் ஆதார் போன்ற அடையாள அட்டைகள் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மேலும் தட்கல் பதிவுக்கு 30 நிமிடங்களுக்கு முன் முகவர்கள் பதிவு செய்யவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. ஏசி பெட்டிகளில் காலை 10:00 மணி முதல் 10:30 மணிக்குள்ளும், ஸ்லீப்பர் பெட்டிகளில் காலை 11:00 முதல் 11:30 மணிக்குள்ளும் முகவர்கள் டிக்கெட் புக்கிங் செய்ய இயலாது.
ஆதார் கட்டாயம் (IRCTC Aadhar Update) :
ஜூலை 1 அமல்படுத்தப்படும் புதிய விதிகளில் ஒன்றாக ஐஆர்சிடிசி இணையதளம் மற்றும் செயலி மூலமாக டிக்கெட் புக்கிங் செய்ய ஆதார் இணைப்பு மற்றும் சரிபார்ப்பு கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது. தட்கல் முன்பதிவு செய்ய ஆதார் எண் மற்றும் OTP சரிபார்ப்பு கட்டாயமாக்கப்படுகிறது.
SBI கிரெடிட் கார்டு (SBI Credit Card) :
எஸ்பிஐ கிரெடிட் கார்டு வைத்துள்ளவர்களுக்கு ஜூலை 15 முதல் குறைந்தபட்ச டியூ தொகை கணக்கீடு, பணம் செலுத்தும் முறை, இலவச ஏர் ஆக்சிடென்ட் இன்சூரன்ஸ் நிறுத்தம் போன்ற மாற்றங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
UPI பணப்பரிவர்த்தனையில் மாற்றம் (UPI Payment) :
இந்திய தேச கொடுப்பனவுக் கழகம் சார்பில் ஜூன் 30-ம் தேதி முதல் பணப்பரிவர்த்தணையின் போது பணம் செலுத்தும் நபரின் பேங்கிங் அக்கவுண்ட் நம்பர் மட்டுமே இனி காண்பிக்கப்படும். பெயர்கள் போன்ற விஷயங்கள் இனி காண்பிக்கப்படாது. இது மோசடிகளில் இருந்து தவிர்க்க புதிய நடைமுறையாக கொண்டு வரப்படுகிறது.
ICICI ஏடிஎம் கட்டணம் (ICICI ATM Transaction) :
ஐசிஐசிஐ வங்கியின் வாடிக்கையாளர்கள் இனி மாதம் 3 முறைக்கு மேல் வேறு ஏடிஎம்மில் பணம் எடுக்கும் பட்சத்தில் ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் ரூ.23 வசூலிக்கப்படும்.
சிலிண்டர் விலை (Cylinder Price) :
ஒவ்வொரு மாதம் முதல் தேதியிலும் எல்பிஜி சிலிண்டர் விலை நிர்ணயிக்கப்படும். அந்த வகையில் ஜூலை மாதமும் சிலிண்டர் விலையில் மாற்றம் ஏற்படும்.