PM Narendra Modi BJP | Ex MLA Velayuthan (Photo Credit: Facebook / @yuvaswapan X).jpg

மே 08, சென்னை (Chennai): கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பத்மநாபபுரம் தொகுதி முன்னாள் தமிழ்நாடு சட்டப்பேரவை உறுப்பினர் வேலாயுதன் (BJP MLA Velayuthan). இவர் பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் முதல் முறையாக, தென் தமிழகத்தில் இருந்து தேர்வு செய்யப்பட்ட சட்டப்பேரவை உறுப்பினர் ஆவார். தற்போது வயது மூப்பு மற்றும் மாரடைப்பு காரணமாக, அவர் தனது 73வது வயதில் இயற்கை எய்தினார்.

அடுத்தடுத்த 2 தேர்தலில் போட்டி: இந்துத்துவ கொள்கையின் மீது தீவிர பற்றுக்கொண்ட வேலாயுதன், தனது 13 வது வயதிலேயே 1963ல் ஆர்.எஸ்.எஸ் அமைப்பில் இணைந்தார். அதனைத்தொடர்ந்து 1982ல் நடைபெற்ற மண்டைக்காடு கலவரத்திற்கு பின்னர் இந்து முன்னணி நிர்வாகியாக நியமனம் செய்யப்பட்டவர், 1989ல் தனது 39 வயதில் சட்டப்பேரவை தேர்தலுக்காக தனது நிலத்தை விற்பனை செய்து, கோவிலில் உண்டியல் அமைத்து டெபாசிட் தொகை வசூலித்து கட்டி போட்டியிட்டார்.

5 ஆண்டுகள் எம்.எல்.ஏ பதவி: பல எதிர்பார்ப்புடன் களமிறங்கிய முதல் தேர்தலில் நான்காவது இடம் கிடைக்க, 1991 சட்டப்பேரவை தேர்தலிலும் தோல்வி கிடைத்தது. இறுதியாக, மூன்றாவது முறை 1996ல் அவர் முதல் வெற்றியை அடைந்தார். அதுவே தென் தமிழகத்தில் பாஜக பெற்ற முதல் வெற்றியும் ஆகும். அங்கிருந்து சட்டப்பேரவைக்கு சென்றவர் தொகுதியாக பல நற்பணிகளை செய்திருந்தார். அவரின் செயலை பாராட்டி மறைந்த முதல்வர் கருணாநிதியும் சிறந்த உறுப்பினர் என பாராட்டினார். Akshaya Tritiya 2024: அட்சய திரிதியை கொண்டாடப்படுவது ஏன்? தங்கம் வாங்க மட்டுமா?.. இவ்வுளவு முக்கியமான விசேஷ நாளா இது?.! 

ஆர்.எஸ்.எஸ் அமைப்புக்கு தலைமை: பின் 2001 மற்றும் 2006 ஆகிய தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்த வேலாயுதன், தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சியின் மாநில துணைத்தலைவராகவும் பொருப்புவகித்து வந்தார். 2006ல் அரசியல் கட்சிக்கு விடுதலை தந்த வேலாயுதன், ஆர்.எஸ்.எஸ் அமைப்புக்கு தலைமை தாங்கினார். சேவாபாரதி மனவளர்ச்சி குன்றியோர் குழந்தைகளுக்கான பள்ளிக்கு, தனது நாகர்கோவில் கருப்புக்கோடு இல்லத்தையும் சில ஆண்டுகள் பள்ளி நடத்த வழங்கி இருந்தார். பின் ஆதரவற்ற குழந்தைகள் அன்பு இல்லத்திலும் தங்கியிருந்தார்.

வயது காரணமாக அரசியலில் விடுதலை: வேலாயுதனின் மனைவி ஜெகதாம்பிகா சில ஆண்டுகளுக்கு முன்பு உயிரிழந்துவிட்ட காரணத்தால், திருவனந்தபுரத்தில் இருக்கும் மகன் ராம்பகவத் வீட்டில் தங்கியிருந்தவாறு பாஜக நிகழ்ச்சி, கோவில் கும்பாவிசேகம், திருமண நிகழ்வுகளில் கலந்துகொண்டார். இவருக்கு நிவேதிதா, சிவநந்தினி என்ற இரண்டு மகள்களும் இருக்கின்றனர். இவர்கள் திருமணத்திற்கு பின் கணவர் குடும்பத்துடன் வசித்து வருகிறார்கள்.

மாரடைப்பால் மரணம்: இதனிடையே, கோவில் கும்பாவிஷேக நிகழ்ச்சிக்காக சொந்த ஊரான கரும்புக்கோட்டுக்கு வந்திருந்த வேலாயுதன் மாரடைப்பு காரணமாக இயற்கை எய்தினார். இவரின் இறுதிச்சடங்கு கருப்புக்கோடு வீட்டில், மே 09ம் தேதியான நாளை காலை 10 மணியளவில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பிரதமர் நரேந்திர மோடி புகழாரத்துடன் இரங்கல்: இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டுள்ள இரங்கல் செய்திக்குறிப்பில், "தமிழ்நாட்டின் முதல் பாஜக எம்.எல்.ஏ வேலாயுதம் அவர்கள் மறைந்தது வேதனையை அளிக்கிறது. இவரைபோன்றவர்களே தமிழ்நாட்டில் பாஜக கட்சியை கட்டியெழுப்பி, வளர்ச்சித்திட்டங்களை மக்களுக்கு விளக்கிய நபர்கள். ஏழைகள், தாழ்த்தப்பட்ட மக்கள் மீது அவர் கொண்டிருந்த அக்கறைக்காக எப்போதும் அவர் நினைவுகூரப்படுவார். அவரின் குடும்பத்தினர் மற்றும் பின்தொடர்பாளர்களுக்கு இரங்கலை தெரிவிக்கிறேன். ஓம் சாந்தி" என தெரிவித்துள்ளார்.