Operation Sindoor SCALP Missiles (Photo Credit: @RatnakarGedam X)

மே 07, டெல்லி (Delhi News): ஜம்மு காஷ்மீரில் பஹல்காம் பகுதியில் கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி நடந்த பயங்கரவாத தாக்குதலில் (Pahalgam Terror Attack) 26 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். இதனையடுத்து, பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வந்தது. இதனால் இரு நாடுகளிடையே போர் பதற்றம் அதிகரித்தது. இந்நிலையில், இன்று (மே 07) 'ஆபரேஷன் சிந்தூர்' என்ற ராணுவ நடவடிக்கையை தொடங்கியது. இதில், பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் மொத்தம் 9 இடங்களில் 21 பயங்கரவாத முகாம்கள் அழிக்கப்பட்டன. சுமார் 100 பயங்கரவாதிகள் வரை கொல்லப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. Operation Sindoor: இந்தியாவில் நடந்த பயங்கரவாத தாக்குதல்.. பட்டியலிட்டு பதிலடி கொடுத்த இந்திய இராணுவம்.. வெளியான வீடியோ..!

இந்தியா இராணுவம் பதிலடி:

இராணுவ நடவடிக்கையில், பாகிஸ்தானின் ராணுவப் பகுதி மற்றும் பொதுமக்களை குறிவைத்து எந்த தாக்குதலும் நடத்தவில்லை என்றும், போரை தூண்டும் வகையில் இந்த தாக்குதலை நடத்தவில்லை எனவும், தீவிரவாத கும்பலை மட்டுமே குறிவைத்து தாக்குதல் நடத்தியதாக ராணுவ பெண் அதிகாரிகள் இன்று காலை செய்தியாளர் சந்திப்பில் விளக்கம் அளித்தனர். இந்திய இராணுவம் நடத்திய இந்தத் தாக்குதல், இந்திய எல்லையில் இருந்துதான் நடத்தப்பட்டுள்ளது. இந்திய ராணுவம் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீருக்குள் சென்று தாக்குதலை நடத்தவில்லை. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள 9 பயங்கரவாத தளங்களைத் தாக்க ஸ்கால்ப் குரூஸ் ஏவுகணைகள், ஹேமர் குண்டுகள் மற்றும் காமிகேஸ் ட்ரோன்கள் ஆகியவற்றை ஏவுவதற்கு ரஃபேல் ஜெட் விமானங்கள் பயன்படுத்தப்பட்டதாக பல தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஸ்கால்ப் (SCALP):

இது வான்வழித் தாக்குதலுக்குப் பயன்படுத்தப்படும் ஸ்கால்ப் குரூஸ் ஏவுகணை ஆகும். இரவிலும், அனைத்து விதமான வானிலையிலும் இயக்கப்படும் திறன் கொண்டது. ஸ்கால்ப் ஏவுகணையை கொண்டு 450 கி.மீ., தூரம் வரை தாக்குதல் தொடுக்கலாம். இது INS, GPS மற்றும் நிலப்பரப்பு குறிப்புகளை பயன்படுத்தி இலக்குகளை துல்லியமாக தாக்குகிறது. தாக்குதலில் இருந்து தப்பிக்க எதிரிகள் உருவாக்கிய மிகவும் சாதுரியமான பதுங்கு குழிகள், வெடிபொருள் கிடங்குகள் உள்ளிட்டவற்றை ஊடுருவிச் செல்வதற்கு உதவும். மேலும், கடந்த ஆண்டு முதல்முறையாக ரஷ்யாவிற்குள் உள்ள இலக்குகளை தாக்க இதே ஏவுகணையைதான் உக்ரைன் பயன்படுத்தியது. 450 கிலோ எடையுள்ள வெடிமருந்தை சுமந்து செல்லக்கூடிய இந்த ஏவுகணை, ஜெட் விமானத்தில் இருந்து ஏவப்படும்போது தாழ்வாகப் பறக்கும்.

காமிகேஸ் ட்ரோன்கள் (Kamikaze Drones):

இது ஒரு வகை டிரோன் ஆகும். இது குறிப்பிட்ட இடத்திற்குச் சென்று வட்டமடித்துத் துல்லியமாக தாக்குதல் நடத்தும். இது தானாகவும் இயங்கும் அல்லது ரிமோட் மூலமும் இயக்கலாம்.

ஹேமர் (HAMMER):

இது ஒரு ஸ்மார்ட் வெடிகுண்டு ஆகும். இந்த வெடிகுண்டு பதுங்கு குழிகள், கடினமான உள்கட்டமைப்பைக் கொண்ட கட்டடங்கள் போன்றவற்றைத் தாக்கும் வல்லமை கொண்டவை. இது 50 முதல் 70 கி.மீ தூரத்திற்குச் சென்று தாக்கும் சக்தி கொண்டது. மேலும், 250 கிலோ, 500 கிலோ, 1,000 கிலோ என நிலையான குண்டுகளில் பொருத்தப்படலாம்.