Tamil New Year - 2024 (Photo Credit: Pixabay)

மார்ச் 31, சென்னை (Chennai): உலகளவில் இந்தியா, இலங்கை, மலேஷியா, சிங்கப்பூர், மியான்மர், தென் ஆப்பிரிக்கா உட்பட பல நாடுகளில் வாழ்ந்து வரும் தமிழர்கள், ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாதம் முதல் நாளை புத்தாண்டின் (Tamil Puthandu 2024) தொடக்கமாக சிறப்பிக்கின்றனர். சூரிய நாட்காட்டிப்படி, மேஷ ராசியில் சூரியன் பிரவேசிக்கும்போது புத்தாண்டு தொடங்குகிறது. தமிழ் நாட்காட்டிபடி, பூமி சூரியனை சுற்றிவர 365 நாட்கள் 6 மணிநேரம் 11 நிமிடம் 48 நொடிகள் ஆகின்றது. தற்போது நாம் பின்பற்றும் கிரேக்க நாட்காட்டியில், ஏப்ரல் மாதம் 14ம் தேதி தமிழர் புத்தாண்டாக சிறப்பிக்கப்படுகிறது.

அறுசுவை உணவுகள் தயாரித்து வழிபாடு: தமிழ் புத்தாண்டு பண்டிகை நாளில், தமிழர்கள் முன்னதாகவே தங்களின் வீடுகளை சுத்தம் செய்து இருப்பார். பண்டிகை நாளில் குளித்து, புத்தாடை உடுத்தி தயாராகும் தமிழர்கள் தங்களின் வீட்டில் மா, பலா, வாழை, வெற்றிலைபாக்கு, பாகற்காய் அல்லது வேப்பம்பூ ஆகிய இனிப்பு, புளிப்பு, காரம், உவர்ப்பு உட்பட அறுசுவைகள் கலந்த உணவை தயார் செய்து தெய்வங்களுக்கு பூஜை செய்து வழிபாடு நடத்தி சாப்பிடுவார்கள். மேலும், பண்டிகையை கொண்டாட்டங்களுடன் சிறப்பித்து மகிழ்வார்கள். Spiritual Update: கண் திருஷ்டியை சரி செய்ய என்னென்ன செய்யலாம்?.. அசத்தல் டிப்ஸ் உங்களுக்காக இதோ..!

Tamil Puthandu Celebration (Photo Credit: Wikipedia)

சித்திரை புத்தாண்டு (Chithirai NewYear) நல்ல நேரம்: ஒவ்வொரு ஆண்டும் கோலாகலமாக சிறப்பிக்கப்படும் தமிழ் புத்தாண்டு, 2024ம் ஆண்டில் ஏப்ரல் மாதம் 14ம் தேதி கொண்டாடப்படுகிறது. இந்நாளில் காலை சாமி கும்பிட, பூஜைகள் செய்ய, கோவிலில் சென்று சிறப்பு பிரார்த்தனையில் கலந்துகொள்ள நல்ல நேரமாக காலை 07:30 மணிமுதல் 08:30 மணிவரை கணிக்கப்பட்டுள்ளது. இந்த நாளில் பிறருக்கு தானம் செய்தாலும் நல்ல பலன் கிடைக்கும் என்பது நம்பிக்கை. தமிழ் புத்தாண்டு அன்று சில கிராமங்களில் பாரம்பரியத்தை நினைவுகூரும் பொருட்டு, கோவிலில் சிறப்பு பூஜை நடைபெற்று மக்கள் பொங்கல் வைத்தும் வழிபடுவார்கள்.

அன்னதானம் வழங்கலாம்: மங்கலத்தின் பிறப்பாக கருதப்படும் தமிழ் புத்தாண்டில் உப்பு, மஞ்சள், அரிசி, கற்கண்டு ஆகியவற்றை வாங்கி வீட்டில் வைப்பது மகாலட்சுமியின் அனுகூலத்திற்கு வழிவகை செய்யும். பசுமாட்டுக்கு அகத்திக்கீரை, கோதுமை பொருட்கள் கொடுப்பது நல்லது. இல்லாதோருக்கு, ஏழை-எளியோருக்கு அன்னதானம் வழங்குதல் கூடுதல் சிறப்பு ஆகும்.

தமிழ் மாதங்களையும் தெரிந்துகொள்ளுங்கள்:

  1. சித்திரை,
  2. வைகாசி,
  3. ஆனி,
  4. ஆடி,
  5. ஆவணி,
  6. புரட்டாசி,
  7. ஐப்பசி,
  8. கார்த்திகை,
  9. மார்கழி,
  10. தை,
  11. மாசி,
  12. பங்குனி.