Pudukkottai News: தாய்ப்பால் குடித்து உறங்கிய பச்சிளம் குழந்தை மூச்சுமுட்டி உயிரிழப்பு.. தாய்மார்களே கவனம்.!
புதுக்கோட்டையில் தாய்ப்பால் குடித்தபின் உறங்கிய குழந்தை மூச்சுமுட்டி உயிரிழந்த (Pudukkottai Baby Death) பரிதாபம் நிகழ்ந்துள்ளது.
ஆகஸ்ட் 15, புதுக்கோட்டை (Pudukkottai News): புதுக்கோட்டை மாவட்டம் வடகாடு, நெடுவாசல் கிராமத்தில் மேற்கு தெரு பகுதியில் வசித்து வருபவர் வேம்பரசன். இவருக்கு திருமணம் முடிந்து மனைவி இருக்கிறார். நிறைமாத கர்ப்பிணியான வேம்பரசனின் மனைவி கடந்த மூன்று வாரங்களுக்கு முன்னதாக பிரசவத்துக்காக அனுமதியாகி ஆண் குழந்தை பெற்றெடுத்தார். பிரசவத்திற்கு பின் தாய், சேய் நலமுடன் வீட்டில் இருந்தனர். சுதந்திர தின ஸ்பெஷல்.. 9 முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.!
குழந்தைக்கு மூச்சுத்திணறல் :
இந்நிலையில் நேற்று குழந்தை அழுததால் வேம்பரசனின் மனைவி குழந்தைக்கு பால் கொடுத்து தூங்க வைத்ததாக கூறப்படுகிறது. இதனிடையே திடீரென குழந்தை மூச்சுத் திணறல் ஏற்பட்டு அவதிப்பட்ட நிலையில், உறவினர்கள் உடனடியாக குழந்தையை மீட்டு புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அப்போது குழந்தையை பரிசோதனை செய்து மருத்துவர்கள் குழந்தை ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.
போலீசார் குழந்தை மரணம் தொடர்பாக விசாரணை :
பின் இதுதொடர்பாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்படவே, தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் குழந்தையின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் குழந்தை இறந்தது எப்படி? என விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சமீபகாலமாகவே தாய்ப்பால் குடிக்கும்போதும், குடித்தபின்னும் குழந்தைகள் உயிரிழப்பது தொடர்ந்து வருவது தாய்மார்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
மருத்துவர்கள் கூறுவது என்ன?
இதுகுறித்து மருத்துவர்கள் கூறுகையில், "குழந்தை தாய்ப்பால் குடித்துவிட்டு அப்படியே உறங்குவதால் மூச்சுத்திணறல் ஏற்படும் வாய்ப்பு அதிகமாகிறது. பாலூட்டிய பின்னர் குழந்தைக்கு ஏப்பம் வந்துவிட்டதா? அது எந்த நிலையில் இருக்கிறது? என்பதை பார்த்து உறங்க வைக்க வேண்டும். செரிமானம் ஏற்பட ஏதுவாக குழந்தையின் முதுகு பகுதியை தடவி கொடுக்கலாம். ஏப்பம் வருவதை உறுதி செய்வதும் நல்லது. இதனால் பால் வாந்தி எடுப்பதும் தவிர்க்கப்படும்" என தெரிவித்துள்ளனர்.
(The above story first appeared on LatestLY on Aug 15, 2025 01:12 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

