Disabled Student Keerthi Verma (Photo Credit: YouTube)

மே 08, கிருஷ்ணகிரி (Krishnagiri News): தமிழகத்தில் மார்ச் 03ஆம் தேதி முதல் 25ஆம் தேதி வரை 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொது தேர்வுகள் நடைபெற்றது. இதன் தேர்வு முடிவுகள் (12th Exam Results 2025) மே 9ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. பின்னர், மே 8ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொது தேர்வு முடிவுகள் இன்று (மே 08) காலை 9 மணியளவில் பள்ளிக்கல்வித்துறையின் tnresults.nic.in மற்றும் dge.tn.gov.in ஆகிய பக்கத்தில் வெளியானது. தமிழகம் முழுவதும் 95.03 சதவீதம் வரை மொத்த தேர்ச்சி பதிவாகியுள்ளது. இதில், மாணவிகள் 96.70 சதவீதமும், மாணவர்கள் 93.16 சதவீதமும் தேர்ச்சி பெற்றுள்ளனர். 12th Board Exam Result: 600/599 மதிப்பெண்கள் பெற்று சாதனை.. மளிகை கடைக்காரரின் மகன் மாநில அளவில் முதலிடம்..!

மாற்றுத் திறனாளி மாணவர் சாதனை:

இந்நிலையில், 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் பழனியை சேர்ந்த மாணவி ஓவியஞ்சலி, திருப்பூர் மாவட்டம், பல்லடத்தைச் சேர்ந்த ராகுல் என்ற மாணவர், ஆகிய இருவரும் 600க்கு 599 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் முதலிடத்தை பிடித்துள்ளனர். மேலும், கிருஷ்ணகிரியைச் சேர்ந்த இரு கைகளும் இல்லாத மாற்றுத் திறனாளி மாணவர் கீர்த்தி வர்மா, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில், 471 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றுள்ளார்.

முதல்வர் வெளியிட்ட பதிவு:

இதனையடுத்து, உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்கு உதவுமாறு கீர்த்திவர்மா கோரிக்கை விடுத்த நிலையில், மருத்துவச் சிகிச்சைகளுக்கான ஏற்பாடுகளைக் கவனிக்கச் சொல்லி இருப்பதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் (CM M.K. Stalin)எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். முதலமைச்சரின் பதிவை அடுத்து, மாவட்ட ஆட்சியர் மாணவரின் வீட்டுக்கே சென்று வாழ்த்து தெரிவித்து, உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை மருத்துவத்துறை உதவியுடன் மேற்கொள்ளப்படும் எனவும் ஆட்சியர் கூறினார். மேலும், மாணவரின் மேற்படிக்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் உருவாக்கி தருவதாக தெரிவித்துள்ளார்.