Sex Worker Killed in Chennai on 19-Sep-2024 (Photo Credit: @Crime_Selvaraj X)

செப்டம்பர் 19, துரைப்பாக்கம் (Chennai News): சென்னையில் உள்ள துரைப்பாக்கம் (Thuraipakkam), மேட்டுக்குப்பம், குமரன் குடில் பகுதியில், இன்று இரத்தக்கறையுடன் சூட்கேட்ஸ் ஒன்று கிடந்தது. சந்தேகமடைந்த பொதுமக்கள் துரைப்பாக்கம் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்து வந்த காவல்துறையினர், சூட்கேஸை (Woman Body Found in Suitcase) திறந்து பார்த்தபோது, பல பாகங்களாக துண்டிக்கப்பட்ட பெண்ணின் சடலம் மீட்கப்பட்டது. இதனையடுத்து, மருத்துவ குழுவினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, உடல் பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

காவல்துறையினர் விசாரணை:

இந்த விஷயம் குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள காவல்துறையினர், பெண்ணை கொலை செய்தது யார்? சூட்கேஸை இங்கு வீசி சென்றவர் எங்கிருந்து வந்து சென்றார்? என பல கோணங்களில் விசாரணையை முன்னெடுத்துள்ளனர். அங்குள்ள சிசிடிவி கேமிராக்கள் கண்காணிக்கப்பட்டு வந்தன. நிகழ்விடத்தில் தென்மண்டல இணை ஆணையர் சக்கரவர்த்தி, அடையாறு துணை ஆணையர் ஆகியோர் நேரில் வந்து ஆய்வு செய்தனர். Mobile Snatching: நொடிப்பொழுதில் செல்போனை களவாடிய இளைஞர்; சிசிடிவி கேமிராவில் அம்பலமான உண்மை.! 

தம்பியின் புகார்:

இந்நிலையில், துரைப்பாக்கம் காவல் நிலையத்தில் நேற்று மணலியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர், "தனது அக்காவான தீபா என்ற வெள்ளையம்மாளை (வயது 32) காணவில்லை. அவர் இறுதியாக துரைப்பாக்கம் பகுதியில் இருந்துள்ளார். பைண்ட் மை டிவைஸ் (Find My Device) மூலமாக அவர் அங்கு இருந்தது உறுதி செய்யப்பட்டது. அவரை கண்டறிந்து தர வேண்டும். செல்போனும் சுவிட்ச் ஆப் ஆகியுள்ளது" என புகார் அளித்துள்ளார்.

பாலியல் தொழிலாளி:

இதனையடுத்து, சடலமாக மீட்கப்பட்ட பெண்ணின் அடையாளத்தை தெரிவித்தபோது, இளைஞர் தனது அக்காவின் மரணத்தை உறுதி செய்தார். அவரை கொலை செய்ததாக சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த மணிகண்டன் என்பவரும் கைது செய்யப்பட்டார். விசாரணையில், பாலியல் தொழிலில் ஈடுபட்டு வந்த தீபா, சம்பவத்தன்று புரோக்கரின் அறிவுறுத்தலின்படி மணிகண்டனுடன் சென்றுள்ளார். அங்கு தீபா அதிக பணத்தை கேட்டதாக தெரியவருகிறது.

வாக்குவாதத்தில் கொடூரம்:

இதனால் ஏற்பட்ட வாக்குவாதத்தில் ஆத்திரமடைந்த மணிகண்டன், தீபாவை கொலை செய்துள்ளார். பின் கொலையை மறைக்க உடலை துண்டு-துண்டாக வெட்டி, சூட்கேசில் அடைத்து சாலையோரம் வீசி வந்துள்ளார். இரத்தம் சொட்டச்சொட்ட இருந்த சூட்கேஸ் குறித்து மக்கள் தகவல் தெரிவித்ததன்பேரில் இந்த சம்பவம் அம்பலமாகி இருக்கிறது. கைது செய்யப்பட்ட மணிகண்டனிடம் விசாரணை தொடருகிறது.